இந்தச் சம்பவம் நடந்து இற்றைக்கு பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் எப்போதாவது ஒருநாள் என் நினைவின் அடுக்குகளில் இருந்து ஏதோ ஒரு சமயத்தில் ஞாபகத்தில் எழுந்து மறைந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் அப்படியே மீண்டும் நினைப்பூட்டிவிட்டது விஸ்வரூபம் படம் பார்த்த பின்.
1995 ஆம் ஆண்டு, தாயகத்தில் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிக்கட்டிலைப் பிடிக்கிறார். மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கிறது ஆனால் அதுவும் கானல் நீர் தான் என்று உணரும் சமயம் வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரர், அப்போது கொழும்பில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது மெல்பேர்னில் இருக்கும் அந்தக் கல்லூரிக்கு முகவராக கொழும்பில் உள்ள சிங்களவர் இயங்கிக் கொண்டிருந்தார். என்னுடன் இரண்டு சிங்களப் பெண்களும், மூன்று சிங்கள ஆண்களுடன் ஒற்றைத் தமிழனாக மெல்பேர்னுக்கு வருகிறேன். வந்த பின்னர் நடந்த சதிராட்டங்கள் தனி நாவல் அளவுக்குப் போடவேண்டியவை. ஆனால் அதுவல்ல இங்கே நான் சொல்ல வந்தது.
மெல்பனுக்கு வந்த அந்த ஒரு மாதமும் எல்லோருமே ஒரே வீட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொண்டே அந்த ஒரு மாதத்தில் இருப்பிடம் பார்த்து, கிட்டியபின் வீடு மாறுவதாகத் திட்டம். ஐந்து சிங்கள நண்பர்களுக்கும் எனக்கும் ஒரே ஊடக மொழி ஆங்கிலம், காரணம் அசல் யாழ்ப்பாணத்தான் எனக்குத் தமிழைத் தவிர சிங்களத்தைக் கற்கும் வேளையும், வேலையும் இருகவில்லை. அவர்களில் நிமால் என்ற ஒரே ஒருத்தன் மட்டும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசினான், தமிழ்ப்படங்களை விரும்பிப்பார்ப்பேன் என்றும் அப்போது வந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டுக்கள் பிடிக்கும் என்றும் “சின்னச் சின்ன ஆசை” பாட்டை சிங்களத் தமிழில் பாடியெல்லாம் காட்டிக் கொண்டு வந்தான். மற்றவர்கள் என்னோடு அதிகம் பேசாவிட்டாலும் ஓரளவு சமாளித்துக் கொண்டு இருந்தார்கள்.
கல்லூரியில் முதல் நாள் வகுப்பு, அந்த வகுப்பில் ஆங்கிலேயர்களை விட, சீனர், ஜப்பானியர், கொரியர் என்று பிற ஆசிய நாட்டவரே சூழ வலம் வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியர் வந்து விட்டார். ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்தச் சொல்லக் கேட்கின்றார். சீனத்துப் பெடியன், ஜப்பானியப் பெண், கொரிய ஆண், ஜப்பானிய ஆண் என்று ஒவ்வொருவராக தாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.
ஐந்து சிங்களவர்களைக் கடந்து ஆறாவதாக நான், எழுந்து நின்று “சிறீலங்காவில் இருந்து வருகின்றேன், என் தாய் மொழி தமிழ்” என்றும் சொல்கிறேன்.
“டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்” குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன். ஆனாலும் ஓரக்கண்ணால் நிமாலைப் பார்க்கிறேன், அவன் எனக்கு ஆதரவாக ஏதாவது பேசித் திசை திருப்புவானோ என்று. அவனின் கண்ணாடியும் சேர்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. எனக்கோ முன்பின் இப்படியானதொரு தாக்குதலைச் சந்திக்காத தருணம் இருபதை எட்டிப்பிடித்தாலும் ஆசிரியைத் தாயின் சேலைத்தலைப்புக்குள் அடங்கிய செல்லப்பிள்ளையாக அதுநாள் வரை வளர்ந்துவிட்டேனே, (இன்று அப்படி நடந்திருந்தால் நிலமை வேறு 😉 ) ஆனாலும் அந்தக் கண நொடிகளுக்குள் சுதாகரித்துக் கொண்டு ஆசிரியரும் லக்மாலின் கதையைப் பொருட்படுத்தாது அடுத்த மாணவனைக் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த நாளே மெல்பேர்னில் உள்ள ஒரு தமிழர் மூலம் எனக்கு உறைவிடம் கிட்டி நான் விலகிப் போனேன். அந்தச் சம்பவம் எனக்கு மட்டுமல்ல, என் போன்ற சமூகத்தினருக்கு ஏதோ ஒருவகையில் வாழ்க்கையில் ஒருமுறையாவது கிட்டியிருக்கும்.
விஸ்வரூபம் படம் வரப்போகிறது என்பதைக் காட்டும் trailer முதற்கொண்டு, பாடல்கள் வரை என்னைப் பெரிதாக ஆக்கிரமிக்கவில்லை. அதற்கு முதற்காரணம், தமிழில் சண்டைப்படங்களை எல்லாம் தியேட்டர் சென்று பார்க்குமளவுக்கு மனோதைரியம் எனக்கில்லை. விதிவிலக்காக ஷங்கர் படங்களைப் பார்ப்பதற்கு அவர் கொடுக்கும் காட்சிகளின் பிரமாண்டமும், ரஜினி படங்கள் என்றால் கிட்டும் முழு நீளப் பொழுது போக்குமே காரணம். அதையும் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு என்னை தியேட்டருக்கு இழுத்தது இந்தப் படம் கிளப்பிய சர்ச்சைகள் தான். எனவே சர்ச்சைகளும் படம் பார்க்க விரும்பாதவனைத் தியேட்டருக்கு இழுக்கும் என்பதற்கு நான் நல்ல உதாரணம் 😉
விஸ்வரூபம் ஒரு சாதா தமிழ் மசாலாப் படமாகத்தானே இருக்கும் என்ற என் நினைப்பை அடியோடு மாற்றிவிட்டது படத்தின் ஆரம்பித்தில் இருந்து. என்னளவில் இந்தப் படம் தமிழ் சினிமா என்ற ரீதியில் புதிய அனுபவமாக அமைந்தது. அதற்கு கமலில் இருந்து பொருத்தமான அளவான நடிகர் தேர்வு, காட்சிக் களம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, மிகமுக்கியமாக எடிட்டிங் ஆகியவை சொல்லி வைக்கவேண்டிய ஒற்றுமைக் கூட்டு. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை போரடிக்காத காய் நகர்த்தல்கள், முடியும் போது அடுத்த பாகம் வரும் என்றபோது எழும் எதிர்பார்ப்பு வரை கமல்ஹாசனுக்கான வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஏதோவொரு அம்சத்தில் தூர நோக்கு என்ற கமலின் பலத்தை, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சரியில்லாத சேர்க்கை பாழாக்கிவிடும். கமல் எட்டடி பாய்ந்தால் கூட இருக்கும் ரவிக்குமார்கள் பதினாறு அடி கீழே தள்ளிவிடுவார்கள். தசாவதாரத்தில் வரும் மொக்கை மசாலா இடைச்செருகல், சந்தானபாரதித்தனமான வில்லன்கள் சரியான சான்று.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை கமலோடு கூட உழைத்தவர்களும் சரி, அவருக்குப் பின்னணியில் இருந்த ஆலோசகர்களும் சரியாகவே இயங்கியிருக்கிறார்கள் படத்தின் உருவாக்கம் என்ற ரீதியில். என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கேரளச் சூழலில் இயங்கும் மெது ஓட்டமான மலையாளப்படத்தைத் தமிழ்ப்படத்தோடும், தமிழ்ப்படத்தை ஆங்கிலப்படத்தோடும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கும் மனோபாவம் இல்லை. அந்தந்த சினிமாக்கள் அவரவர் எல்லையில் இருந்து திருப்திப்படுத்தியிருக்கின்றனவா என்றே பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வேன். அந்தவகையில் விஸ்வரூபம் இதுவரை நான் கண்ட தமிழ் சினிமாக்களில் மேம்பட்ட தரம் கொண்டது என்பேன். ஏதோவொரு டொரண்ட்டில் நோண்டியும், பஜாரில் கிடைக்கும் டிவிடியிலும் இந்தப் படம் தியேட்டரில் கொடுக்கும் உன்னத அனுபவத்தில் ஒருவீதமேனும் நிறைவேற்றாது என்பபேன்.
விஸ்வரூபம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய படமே அல்ல.
விஸ்வரூபம் படத்தின் நெருடல்கள் என்ற வகையில் இரண்டே இரண்டு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கின்றன.
நெருடல் ஒன்று “அமெரிக்கன் பெண்களையும், குழந்தைகளையும் ஒண்ணும் பண்ணமாட்டான்” என்று கமல் சொல்லும் போது வயிறு குலுங்கிச் சிரிக்கத் தோன்றுகிறது. இதுவரை கமல் ஆஸ்காருக்கு அனுப்பிய படங்களை விட விஸ்வரூபம் தான் தொழில் நுட்ப ரீதியில் மேம்பட்டது, கவனிக்கப்படவேண்டியது என்பதால், அமெரிக்கனுக்கு காக்காய் பிடித்து அந்தப் பக்கத்தையும் கவனித்துவிடுவோம் என்று கமல் எண்ணினாரோ தெரியவில்லை.
என்னதான் இன்னொரு நாட்டுத் தீவிரவாதி அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும், தொடர் காட்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் என்னையே கொஞ்சம் நெளிய வைக்கிறது. காரணம் நாம் வாழும் சூழல் அப்படி. ஒரு படைப்பைப் பகுத்துப் பார்த்து அது எந்த விஷயத்தை முக்கியமாகச் சொல்லிவைக்கின்றது என்ற அளவுக்கு நம் தமிழ்ச்சூழலுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பேன். இந்தச் சூழலில் இப்படியொரு படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் தலிபானாக கமல் நடிப்பார் என்று சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர மூளையும் அவருக்கு இல்லை. கமல் போன்ற மூத்த கலைஞனுக்குப் பொறுப்புணர்வு மிக முக்கியம்.
இப்பொழுதே சமூக வலைத்தளங்கள் ஈறாக கோஷ்டி பிரித்து மதச்சண்டை அளவில் வீணான சர்ச்சைகள். அல்லாவின் நாமத்தைத் தொடர் காட்சிகளில் வைக்கும் போது சக இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தாது, அப்படியே புண்படுத்தினாலும் கண்டுக்காதீங்க என்ற ரீதியில் வரும் ஒப்புச்சப்புக்களைச் சொல்ல நான் யார்?
இந்தப் படத்தைத் திரையிடத் தமிழக அரசு தடைவிதித்ததன் நியாய தர்மங்கள் இங்கே தான் பிறக்கின்றன.
சிறுபான்மை இனத்தவன் என்ற ரீதியில் ஏதோவொருவகையில் நானும் என் சார்ந்த சமூகமும் கிட்டத்தட்ட இதேரீதியான மன உளைச்சலில் இருப்பதால் என்னை இந்தக் காட்சியமைப்புக்கள் அதிகம் பாதித்திருக்கலாம்.
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.
வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.
ஆதங்கப்படுவதற்கும் சுதந்திரம் உண்டுதானே?