Sep 12 2011

திருநந்தீஸ்வரம் கண்டேன்

Published by admin under Uncategorized

ஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை. இவற்றுள் திருக்கோணஸ்வரமும், திருக்கேஸ்தீஸ்வரமும் திருஞான சம்பந்தராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற சிறப்பையும் தாங்கி நிற்பவை. இன்றைய அரசியல் சூழ்நிலைகளில் முருகக்கடவுளாக இருந்தால் சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஸ்கந்த தெய்வோ என்று கருணை காட்டும். மற்றய இந்துக் கடவுள் என்றால் இரண்டாம் பட்சம் தான் என்ற சூழ்நிலையில் இலங்கையின் தெற்கிலே இப்போது “திருநந்தீஸ்வரம்” என்றதோர் வரலாற்றுத் தொன்மைமிக்க ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது அதுவும் பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவரின் காணிக்குள் இது இருக்கின்றது என்ற செய்தியை இந்தமுறை இலங்கைப் பயணத்தில் அறிந்து கொண்டேன். இந்தமுறைப் பயணத்தில் திருநந்தீஸ்வரம் காணவேண்டும் என்று முனைப்பெடுத்து ஒரு நாளும் குறித்துக் கொண்டேன். இனிமேல் தான் சிக்கல்.

திருநந்தீஸ்வரம் என்ற ஆலயம் கொழும்புக்கு அண்மித்திருக்கும் இரத்மலானை என்ற இடத்தில் இருக்கின்றது என்ற தகவலைத் தவிர இந்த ஆலயத்து எப்படிப் போவது என்ற தகவல் கொழும்பில் இருக்கும் பலருக்கே தெரியாத விஷயமாக இருக்கின்றது. சரி எதற்கும் ஒரு டாக்ஸி பிடித்துக் காலையிலேயே இரத்மலானை சென்று அங்கே விசாரிப்போம் என்று நினைத்து, டாக்ஸிக்காரருடன் காலை வேளை கொழும்பு நோக்கிப் பரபரப்பாக ஓடும் காலைவேளை வேலைப்படைக்கு எதிர்த்திசையில் பயணப்படுகின்றோம். இரத்மலானை வந்தாச்சு, இந்தப் பிரதேசம் சிங்களவர்கள் அதிகம் வாழும் பகுதி. சாரதி இப்போது என் முகத்தைப் பார்க்கிறார். சிங்கள மொழியில் நந்தி என்றால் கொனா , ஆலயம் என்றால் கோவிலய இந்த இரண்டையும் இணைத்துப் பொருத்தினால் கொனா கோயிலய என்ற பெயர் கிட்டுகிறது. காரை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருந்த பேக்கரிக்காரரிடம் கேட்டோம். அவர் எதிர்த்திசையைக் காட்டி இந்தக் கோயிலுக்கான பாதையைச் சொல்கிறார் சிங்களத்தில். டாக்ஸிக்காரரும் புரிந்ததும் புரியாததும் மாதிரி தலையாட்டி விட்டு காரை இயக்குகிறார். இப்போது வாகனம் இரத்மலானை கடற்கரைப்பக்கமாகத் திரும்பி சந்து பொந்துகளை முத்தமிட்டுப் பயணிக்கிறது. வழியெங்கும் மிகவும் வறிய, அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையைக் காட்டும் சின்னஞ்சிறு வீடுகளும், பொதுக்குடிநீர்க் குழாயில் காலைக்குளியலிக்குக் கியூ நிற்கும் குழந்தைகளும். சாரதி இடையில் ஒன்றிரண்டு பேரை விசாரித்து ஒருவாறு “கொனா கோவியலய” என்ற ஆலயத்தைக் கண்டுபிடித்தார்.

சுற்றிலும் குடிமனைகள் சூழ்ந்த அந்த ஆலயப்பகுதியில் முன்னே எதிர்ப்படுவது பாரிய அரசமரம், அதைத் தாண்டி வந்தால் புதிதாகக் குடமுழுக்கு செய்ப்பட்ட “திருநந்தீஸ்வரம்” ஆலயம் மிடுக்காக நிற்கின்றது.
திருநந்தீஸ்வரம் ஆலயம் வரலாற்றுத் தொன்மை மிக்க, ஆயிரம் வருஷங்களுக்கு முந்திய ஈழத்தின் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்று. இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இல்லாதொழிக்கும் நோக்கில் போர்த்துக்கேயர் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 1518 ஆம் ஆண்டு நந்தீஸ்வரம் ஆலயம் முற்றுமுழுதாக போர்த்துக்கேயரினால் நிர்மூலமாக்கப்பட்டது. அங்கு பூஜைகளை நடத்திவந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அந்த இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்தனர். அவருடைய மகனை மதம் மாறுமாறு பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகு அப்பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவர் கோயிலைப் பராமரித்து வந்துள்ளார். பெர்னாண்டோ என்ற குடும்பப் பெயருடன் வழிவந்தவர்களே பரம்பரை பரம்பரையாக இன்றுவரை கோயிலைப் பராமரித்து வருகின்றனர்.

போர்த்துக்கேயர் கோயிலை அழித்ததை நினைவுகூருமுகமாக அங்கு சித்திரங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

இராமாயணக் காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரம் கருதப்படுகிறது.

1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ இராகுல தேரர் என்ற பௌத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ எனும் காவியத்தை இயற்றினார். அந்தக் காவியத்தில் இந்த ஆலயம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் பற்றியும் அங்கு தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியும் அந்த நூலில் துறவி எழுதியுள்ளார்.

இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆலய வளாகத்தில் பௌத்த வழிபாட்டு தலத்தை ஒத்ததாக முருகனுக்கு ஓர் ஆலயம் அமைத்து கதிர்காம முருகன் ஆலயத்தைப் போன்று பூஜை முறைகள் நடைபெறுகின்றன. அதனையும் பாரம்பரியமாக சிங்களவர்களே நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை வைத்து பார்க்குமிடத்து கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டு காலம் பழைமையை இவ்வாலயம் கொண்டுள்ளது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு ஆலயம் புனரமைக்கப்பட்டுவருவதன் பின்னணியும் உண்டு.

கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் 50 வருடங்களுக்கு அதிகமாக பிரதம சிவாச்சாரியாராக கடமையாற்றி இலங்கைக்கு நிறைவானதொரு சமயப் பணி செய்த குஞ்சிதபாத குருக்களின் கனவில் தோன்றிய சிவன் தான் இன்னும் நந்தீஸ்வர ஆலய வலாகத்தில் இருப்பதாகவும் தனக்கு கோயில் எழுப்புமாறும் கூறியுள்ளார்.

பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 களில் சிவன் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் பழைமையான ஆவுடை, நந்தி ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிகால எழுத்துக்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இன்னும் அப்பகுதியில் காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று தீர்த்தமாக இருந்ததாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

ஆலயத்தின் மகத்துவம் வெளிப்படத் தொடங்க 2005 ஆம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு சிவன்கோயில் குருக்களே அடிக்கல் நாட்டிவைத்து திருப்பணியை தொடங்கிவைத்தார்.

(வரலாற்றுக் குறிப்புக்கள் நன்றி: இராமானுஜம் நிர்ஷன், வீரகேசரி)


வெள்ளிக்கிழமை நாளில் வந்திருக்கின்றோம். உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு காலைப்பூசை பார்க்கவேண்டும் என்று நினைத்துக் காத்திருக்கிறோம். கோயிலுக்குப் பக்கத்தில் இன்னொரு
நூதனசாலை அமைந்திருக்கின்றது.





அந்த மண்டபத்துக்குள் நுழையும் வாய்ப்பு அப்போது கிட்டவில்லை ஆனாலும் வெளியில் நின்று கமாராவுக்குள் அங்கே இருக்கும் அரும்பொருட் காட்சிகளைப் படம் பிடிக்கின்றேன். மிக அமைதியான ஆலயச்சூழலில் வெள்ளிக்கிழமை நாளில் பத்துப்பேரை உள்ளடக்கிய கூட்டம். பூசை ஆரம்பிக்க முன்னர் ஒரு முதியவரும், பெண்மணியும் தேவார திருப்பதிகங்களைப் பாடிச் சிறப்பிக்கின்றார்கள். ஒரு முதிய பெண்மணியும், இன்னொரு நடுத்தர வயதுப்பெண்ணும் கோயிற் சுற்றுப்பிரகாரத்தைச் சுத்தம் செய்வதிலும், பூசைக்குத் தேவையான ஆயத்தங்களிலும் முனைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் அந்த ஆலயத்தினைப் பராமரிப்பவர்கள்.

ஐயர் அவசரமாக வந்து காலைப்பூசையை ஆரம்பிக்கின்றார். திரைச்சீலை விலக திருநந்தீஸ்வரரை இலிங்க உருவில் கண்ணாரக் கண்டு துதித்துப் போற்றுகிறேன். திருநந்தீஸ்வரர் ஆலயத்தைக் கண்ட மனநிறைவோடு அந்த வெள்ளிக்கிழமை அமைகின்றது.

5 responses so far

Aug 18 2011

தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை

Published by admin under Uncategorized

“சின்ராசா அண்ணை! நாளைக்கு கரம்பன் பக்கம் போகோணும் என்னமாதிரி வசதியோ” என்று எனது ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணருக்கு செல்போனினேன்.

“ஓம் முன்னைப்பின்னை அந்தப்பக்கம் போனதில்லை, ஆனாலும் போகலாம்” சின்னராசா அண்ணரே துணிவோடு சொல்லிவிட்டார் பிறகென்ன.

கரம்பனுக்குப் போகும் அந்த நாட்காலை சின்னராசா அண்ணரின் ஆட்டோ சரியாக 6 மணிக்கு எங்கள் வீட்டு முகப்பில் வந்து நின்றது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பிரதேசங்களில் ஒன்றான ஊர்காவற்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கரம்பனுக்கு, இதுவரை நானோ சின்னராசா அண்ணரோ இதுவரை போகாத இடத்துக்குப் போகப்போகிறோம் எந்தவிதமான வழிகாட்டலும் இன்றி. காரணமில்லாமல் இல்லை, எனது யாழ்ப்பாணப் பயணத்தில் இந்த முறை போகத் தீர்மானித்த இடங்களில் இதுவுமொன்று. இங்கே என் உறவினர் ஒருவரின் வீடு இருக்கு. 20 வருஷங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றும் படை நடவடிக்கையின் முன்னோடியாகக் கைப்பற்றப்பட்ட தீவகப் பிரதேசங்களில் அந்த வீடு இருக்கும் கரம்பன் பிரதேசமும் உள்ளடங்கும். எனவே அந்த உறவினரை விட எனக்கு அந்த இடமெல்லாம் எப்படி இருக்கும் என்று என்று ஆவல் மேலிட இந்தப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகச் சேர்த்துக் கொண்டேன். என் ஆட்டோகிராப் காலம் ஆரம்பித்தது கூட இந்தத் தீவுப்பகுதி இடப்பெயர்வால் அவள் எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்த அந்தக் காலம் தான். சரி சரி ஆட்டோகிராப் பக்கம் போகாமல் மீண்டும் என் மனதை நிகழ்காலத்துக்குக் கட்டி இழுத்து வருகிறேன்.

சின்னராசா அண்ணரின் ஓட்டோ அந்த விடிகாலையில் குச்சொழுங்கை எல்லாம் அளந்து கொண்டு போய்க்கொண்டிருக்க, இணுவில், சுதுமலை, மானிப்பாய், நவாலி, வழுக்கியாறு வட்டுக்கோட்டை கடந்து பயணிக்கிறோம். அந்த சந்துபொந்துகளில் தற்காலிக நித்திரை முகாம்களை அமைத்துத் துயில் கொண்டிருந்த நாய்கள் எங்களின் திடீர் முற்றுகையைப் பொறுக்காமல் ஆட்டோவைத் துரத்தித் துரத்திக் குலைத்துக் கொண்டு பின்னால் ஓடி வந்து களைத்து ஓய்ந்தன.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள், யாழ்ப்பாணத்தில் ஆறு இல்லை ஆனால் கொள்ளை அழகு என்பது பழமொழியை உருவாக்கினவருக்கு இடித்துரைத்துச் சொல்லவேண்டும். ஆனாலும்

யாழ்ப்பாணத்தார் பெருமையடித்துக் கொள்ள ஒரு ஆறு அல்லது ஆறு போல உள்ள ஓடை உண்டு. அதுதான் வழுக்கியாறு. இந்த வழுக்கியாற்றின் பெருமையை வைத்து செங்கை ஆழியான் “நடந்தாய் வாழி வழுக்கியாறு” என்ற ஒரு புதினம் படைத்திருக்கின்றார். வழுக்கியாற்றின் படம் இங்கே

போகிற வழியில் திடீரென்று பொலிவான கட்டிடங்கள், என்ன ஏது என்று விசாரிக்க முன்னர் “யாழ்ப்பாணக் கல்லூரி” என்று கொட்டை எழுத்துக்களோடு தன் விளக்கம் சொன்ன அந்தப் பாடசாலைச் சூழலை ஆட்டோவை நிறுத்தி வியந்து பார்க்கின்றேன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கல்லூரி அன்றிலிருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் முன்னணியில் வைத்துப் பார்க்கப்படும் கல்விக்கூடங்களில் ஒன்று.

எத்தனையோ கல்விமான்களையும், அறிஞர்களையும் கொடுத்து விட்டு அடக்கமாக அமைதியாக நிற்கின்றாயே என்று கேட்கலாம் போலத் தோன்றியது. இரண்டு பக்கமும் பரந்து விரிந்த காணிகளில் எழுப்பப்பட்ட அந்தக்காலத்துச் சுண்ணாம்புக்கற் கட்டிடங்கள் காவி உடை தரித்து நிற்கின்றன. நாங்கள் நிற்கும் இடம் வட்டுக்கோட்டை.

வட்டுக்கோட்டைக்குப் போகின்ற வழி தெரியாமல் ஒருவர் தடுமாறிக்கொண்டே நடந்து வந்தாராம். எதிரே பாக்குமரங்கள் கொண்ட தோப்பு அங்கே ஒரு பாக்குமரத்தின் மேலே ஒருவன் இருந்து பாக்குப் பிடுங்கிக் கொண்டிருக்க, இவரோ “தம்பி! வட்டுக்கோட்டைக்குப் போற வழி என்ன” என்று கேட்கவும், மேலே இருந்து கேட்ட அவனுக்கோ பாக்கு விலை விசாரிக்கிறாரோ என்று நினைத்து

“துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு” என்றானாம்.

“அண்ணோய்! காரைநகர்ச் சிவன் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே கரம்பனுக்குப் போவமே” என்று திடீரென என் பயணத் திட்டத்தில் புதிய மாற்றத்தைச் சேர்க்க, சின்னராசா அண்ணர் தலையாட்டிக் கொண்டே காரை நகர்ப்பக்கம் விட்டார் ஆட்டோவை.

இடையில் ஒரு இராணுவச் சாவடியில் நின்ற இராணுவச் சிப்பாய் கையைக் காட்டி மறித்து ஆட்டோவில் ஏறி என் பக்கத்தில் இருந்தான். எங்கே போகிறான் என்று அவனும் சொல்லவில்லை நாங்களும் கேட்கவில்லை. பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஒரு சந்தி தென்பட நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு இறங்கிப் போனான்.

காரைநகர் வீதி பளபளப்பான கறுப்பு வெல்வெட் விரிப்புப் போலப் பளிச்சிட்டுக்கொண்டிருக்க அதை ஆசையோடு முத்தமிட்டுக்கொண்டே ஆட்டோ.

இரண்டு கரையும் வெளிர் நீல வேட்டியை நீளமாகக் கட்டிக் காற்றில் மெதுவாக ஆட்டுவது போலச் சாந்தமான கடல். ஆங்காங்கே கடலில் கழிகள் நடப்பட்டு மீன்களை நோட்டம் விடும் வேவு பார்க்கப்படுகின்றது.

“தம்பி சுனாமி வரேக்கை காரைநகர்ச் சனம் கோயிலுக்குள்ள இருந்தது, ஒருத்தருக்கும் ஒண்டுமே நடக்கேல்லை என்பது புதுமை தானே” சின்னராசா அண்ணர்.

“கசோரினா பீச் பக்கம் போகாதேங்கோ தம்பி, இந்தப் பெடிபெட்டையளும், வெளிநாட்டுக்காரரும் செய்யிற அநியாயம் கொஞ்ச நஞ்சமில்லை, அவையின்ர உடுப்பும் ஆட்களும்” என்று சின்னராசா அண்ணர் சொல்ல, இன்னொரு நாள் அவரோடு கசோரினா பீச் இற்குப் போகும் ஆசையை மூடி வைத்துக் கொண்டேன்.

ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்குக் கண்டு அன்று கும்பாபிஷேக தினம் அன்று என்பதை முதல் நாள் உதயன் பேப்பர் சொல்லியிருந்தது. ஈழத்தின் சிவன் கோயில்களில் காரைநகர்ச் சிவன் கோயிலுக்கும் தனி இடமுண்டு. மார்கழியில் திருவெம்பாவை நாட்களும், ஆருத்ரா தரிசனமும் இந்த ஈழத்துச் சிதம்பரத்தின் தனிச்சிறப்பென்பர்.

கோயிலுக்குப் போகும் பாதை எங்கும் ஒரே தோரண மயம். அந்தக் காலை வேளையிலேயே ஊரே கோயிற்புறத்துக்குக் குடிபுகுந்தது மாதிரி அவ்வளவு சனக்கூட்டமும் வாகனங்களின் முற்றுகையும். எனக்கு நினைவு தெரிய நான் முதன்முதலாக இன்று தான் காரைநகர்ச்சிவன் கோயிலுக்கு வருகின்றேன். ஆலயத்தின் எழில் மிகு புதுக்கோபுரம் மிடுக்காகக் கலர்ச் சிரிப்பில் மின்னியது. கோயிலுக்குள் நுழைகின்றோம். அங்கே ஒவ்வொரு பிரகாரத்திலும் இருக்கும் எழுந்தருளி மூர்த்திகளுக்கு வரிசையாகப் பூசை நடந்துகொண்டிருக்க, வாய் தேவாரம் முணுமுணுக்க, கையைக் கூப்பிக்கொண்டே வேடிக்கையும் பக்தியும் கலந்து உட்பிரகாரத்தைச் சுற்றுகிறேன்.

கோயிலுக்குள்ளே சனக்கூட்டம், எல்லோருமே பக்திப்பரவசத்தில் வயது , பால் வேறுபாடின்றி உரக்க “அரோகரா” “அரோகரா” என்று கத்திக்கொண்டே திரைச்சீலை விலக்கப்படும் நேரத்தில் காணும் மூர்த்தியைப் பரவசத்தோடு வழிபடுகின்றார்கள். முண்டியடித்துக்கொண்டே அந்தப் பிரகாரத்தின் வாய்க்காலில் வழிந்தோடும் தீர்த்தத்தை கையில் ஏந்தி வாயில் உறிஞ்சிக் குடித்துத் தலையிலும் தெளித்துக் கொண்டே அடுத்த பிரகாரத்துக்குத் தாவுகின்றார்கள். இணுவிலார் தான் கோயில் எண்டா உயிரையே கொடுப்பினம் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பை அன்று காரைநகர்ச் சிவன் மாற்றிவிட்டார்.

கோயிலில் இருந்து வெளிக்கிட்டாச்சு, அடுத்தது நாங்கள் செல்லவேண்டியது கரம்பனுக்கு. எப்படிப் போவது என்று எனக்கும் சின்னராசா அண்ணருக்கும் தெரியாத நிலையில் ஆட்டோ சந்தியில் வந்து முன்னே தெரியும் பஸ் தரிப்பு நிலையத்தில் வந்து நிற்கிறது. அங்கே ஒரு ஐம்பதுகளில் மிதக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கின்றார்கள்.

“ஐயா இந்த வழியால கரம்பன் பக்கம் போலமோ” சின்னராசா அண்ணர் கேட்க,

“ஓ தாராளமா, இப்பிடியே நேரப்போய் சீனோர்ப்பக்கம் ஒரு ஜெற்றி பிடித்துப் போனால் மற்றப்பக்கம் ஊர்காவற்துறை, நானும் அந்தப் பக்கம் தான் போறன்” என்றவாறே அந்தப் பெண்மணி எந்தவிதமான அனுமதியையும் எதிர்பார்க்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து,

“எடுங்கோ ஆட்டோவை நான் வழியைக் காட்டுறன்” என்றார்.

கொஞ்சத்தூரம் போனதும் சின்னராசா அண்ணருக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது.

“உண்மையாத் தான் சொல்லுறியளோ? இதால போகலாமோ” என்று கேட்க,

“ஓமோம் போலாம் போலாம்” என்று கையைக் காட்டுகிறார் அந்தப் பெண்மணி. இடைவழியில்

“சரி நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டுது, உதால நேர போங்கோ” என்று கையைக் காட்டி விட்டுத் தன் போக்கில் போய்விட்டார்.

பனைக்கும் முட்கம்பி வேலியோ?

சீனோர்ப்பக்கம் ஆட்டோ, அங்கே ஒன்றிரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடலும்.

ஜெற்றியைப் பிடிக்கும் கரைப்பக்கம் போக அங்கே பஸ் தரிப்பிடத்தில் ஒரு சிலர். ஒரு நேவிக்காரன் வந்து இங்கே நிற்கவேண்டாம் ஜெற்றி வந்ததும் வரலாம் என்று எங்களைத் திருப்பி அனுப்பப் போக்கிடமின்றித் திரும்புகின்றோம். இன்னும் 45 நிமிடம் காத்திருக்க வேண்டும்.

ஒரு தேனீர்ச்சாலை பக்கத்தில் தென்படுகின்றது. காலையில் இருந்து ஒன்றுமே வயிற்றில் போடவில்லை, தேனீர் குடிக்கலாமே என்று நினைத்துச் சின்னராசா அண்ணரை அழைத்தேன்.

“தம்பி ரெண்டு பிளேன்ரீ போடுங்கோ” என்ற சின்னராசா அண்ணரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தேனீர்த்தம்பி தயாரிக்கிறார். உவர் நீரும் சீனியும் கலந்த புதுச்சுவையாக இருக்கின்றது. 45 நிமிட நேரத்தையும் தேனீர்ச்சாலையின் உரிமையாளரான அந்த வயதானவரிடம் பேச்சுக்கொடுத்துக் கழித்தோம். ஜெற்றி வருவது தெரிகின்றது.

ஆட்டோ ஜெற்றியில் ஏற, ஆட்டோவுக்குள் நானும் சின்னராசா அண்ணரும், எங்களோடு மறுகரைக்குப் போகும் தொழில் செய்வோர், மற்றும் குடிமக்கள் என்று சைக்கிள், மோட்டார் சைக்கிளோடு நிறைய ஜெற்றி என்ற அந்தத் திறந்த இரும்புப்பாதை ஆட்களை அள்ளியணைத்துக் கொண்டு மறுகரை நோக்கிப்பயணிக்கின்றது. “உப்பிடித்தான் தம்பி நான் மகாதேவாக்குருக்களைக் அனலை தீவு காண, போட்டில ஓட்டோவை ஏத்திக் கொண்டுபோயிருக்கிறன்” சின்னராசா அண்ணை பெருமிதத்தோடு சொல்கிறார்.

தூரத்தே ஒரு கோட்டை தெரிகிறது. ஊர்காவற்துறைக் கடற்கோட்டை தான் அது. யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போர்த்துக்கேயர் காலத்தில் கட்டி, ஒல்லாந்தர் காலத்தில் கட்டியாண்ட கடற்கோட்டை கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கின்றது.

இந்தக் கோட்டைக்குள் கடற்படையின் முகாம் இன்னமும் இருக்கின்றது. “கடற்கோட்டை” என்ற செங்கை ஆழியான் நாவலில் வந்த பூதத்தம்பி விலாசமும், அவன் மனவி அழகவல்லியும் நினைவில் மிதக்கின்றார்கள் அப்போது.

ஜெற்றி மறுகரையில் நெருங்கி நிற்க மெல்ல ஒவ்வொருவராக இறங்குகின்றோம். சரி, ஊர்காவற்துறை வந்தாச்சு இனிக் கரம்பன் எப்படிப் போவது? கூட வந்த பயணிகளில் ஒருவரைக் கேட்டால் ஒரு வழியைக் காட்டுகிறார். அந்த வழியே பயணிக்கின்றோம்.

“கரம்பன் முருகமூர்த்தி கோயிலடிக்குக் கிட்டத்தான் வீடு இருக்காம் அந்தப் பக்கம் போய்ப்பார்ப்பம்” என்று நான் சொல்ல சின்னராசா அண்ணர் இடையில் எதிர்ப்படுவோரை நிறுத்தி விசாரித்து வழிகேட்டு முருகமூர்த்தி கோயிலுக்கும் வந்தாச்சு.

அந்த ஆலயச் சூழலில் ஒரு குருவி, காக்காய் கூட இல்லை. அழிந்து போன சகடை, பாழடைந்து போன தீர்த்தக்கேணி, இரும்புக்கதவால் பூட்டப்பட்ட கோயில் என்று இருக்கிறது ஆலயச் சூழல். திருநீறைப் பூசி, சந்தனம் வச்சு, இரும்புக் கதவுக்குள்ளால் மூடிய பிரகாரத்துக்குள்ளே இருக்கும் ஆண்டவனை நினைந்து தேவாரம் பாடிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று உறவினரின் செல் போனுக்கு அழைக்கிறேன்.

“எங்கட வீடு முருகமூர்த்தி கோயிலுக்குக் கிட்ட இல்லை, அந்தக் கோயிலுக்கு நாங்கள் வாறனாங்கள் என்று சொன்னேன், எங்கட வீடு அங்காலை தள்ளிப் போகோணும்” என்றார் அவர், கூடவே இன்னொரு விலாசத்தைக் கொடுத்தார்.

“சுத்தம்” என்று மனசுக்குள் நான் சொல்ல, “என்னவாம்” என்றார் சின்னராசா அண்ணர்.

“அங்காலை தள்ளிப் போகோணுமாம் அண்ணை” என்றவாறே ஆட்டோவில் ஏறி இந்த முறை நானே இடையில் எதிர்ப்படுவோரை விசாரித்து ஏறக்குறையக் கரம்பனை மூன்று சுற்றுச் சுற்றியிருப்போம்.

எல்லாம் அலுத்துப் போய் இனி வீட்டை போகலாம் என்று நினைத்துக் கடைசி முயற்சியாக அந்த வனாந்தரத்தில் இருந்த ஒரேயொரு வீட்டின் கதவைத் தட்டினோம். ஒரு இளம் தம்பதி. கூலிவேலை செய்து பிழைப்பவர்கள் என்று தெரிகின்றது. அந்த இளைஞரிடம் விலாசத்தைக் கூறி இந்த இடத்துக்கு எப்படிப் போகலாம் என்று கேட்டேன். இது மற்றப்பக்கம் எல்லோ,வாங்கோ நான் காட்டுறன் என்று ஆட்டோவில் ஏறி வழிகாட்ட ஆரம்பித்தார். போகும் பாதை எல்லாம் புதர் மண்டிய காடுகள் புதருக்குள் உற்றுப்பார்த்தால் வீடுகள்.

எல்லாமே அநாதரவாக விடப்பட்ட வீடுகள். இருபது வருஷங்களுக்கு மேல் இந்த ஊர்கள் எல்லாமே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களுக்குப் போயிவிட்டன. இப்போது தான் மெல்ல மெல்ல ஒருவர் இருவராக மீளக் குடியேறுகின்றார்கள்.

அந்த இளைஞர் காட்டிய பக்கம் வந்து ஒருவாறு நாங்கள் வரவேண்டிய இடத்துக்கும் வந்தாச்சு. இனி வீட்டை எங்கே கண்டுபிடிப்பது. யாரையாவது விசாரிப்போம் என்று அந்தப் புதர்க்காட்டிலும் புடலங்காய் பயிரிட்ட ஒரு வீட்டுக்காரரைக் கண்டு கதவைத் தட்டினோம். நான் தேடிவந்த வீட்டுக்காரர் பெயரைச் சொல்ல, “ஓம் அவயை எனக்கு நல்லாத் தெரியுமே? இது அவையின்ர தங்கச்சி வீடுதான் அங்கை பாருங்கோ அதான் அவையின்ர வீடு” பக்கத்தில் இருக்கும் இன்னொரு புதர்க்காட்டைக் காட்டியவாறே அந்தப்பக்கமாக அவர் நடக்கப் பின்னால் மந்திரத்தால் கட்டுப்பட்டது போல வழிகாட்டியும், சின்னராசா அண்ணரும் பின்னே நானும். அந்தக் காட்சியின் ஒளிவடிவம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் நேரடிச் சண்டைகள் அதிகம் இல்லாது மீட்கப்பட்ட இடங்கள் என்பதால் அங்கே தென்படும் வீடுகள் விமானக்குண்டுகள் போன்றவற்றின் சேதாரமின்றிக் கட்டிடம் தனித்திருக்கக் கூரையும் நிலைக்கதவுகளும் தளவாடங்களும் சூறையாடப்பட, வீட்டுக்குள்ளே மரங்களும், ஊர்வனவும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.

ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

23 responses so far

Jul 23 2011

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்

Published by admin under Uncategorized

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.

ஒலிவடிவில் கேட்க

அவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்ததற்காகவும் முதலில் ரசிகராகவும் இந்த வேளையிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இருப்பவர். முதல் முறையாக ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. சூடிய பூ சூடற்க என்கின்ற சிறுகதைத் தொகுதிக்காக உங்களுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. அது வந்து சர்ச்சைக்கு உரியது என்பதை விட சவாலான ஓர் கதை. சமகால அரசியல் விமர்சனமாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான கதைக்கு ஓரு அரசினுடைய அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நான் வந்து நேர்மையற்ற விமர்சனங்கள் செய்றதில்லைங்க. அரசாங்கமானாலும் சரி நிறுவனங்களானாலும் சரி. ஓரு படைப்பிலக்கியவாதியின் மனோநிலையில் இருந்து சமூக நோக்கத்தோட நமக்கு சரி என்றுபடுவதை நான் விமர்சனம் செய்கிறேன். அந்த விமர்சனத்தை அவங்க எற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது நம்முடைய சிக்கல் இல்லை. ஆனா அப்படி ஒர் விமர்சனம் இருக்கிறதென்பதும் அவர்கள் அறியாதவர்கள் இல்லை. ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது

பொதுவாகவே தமிழ் சமூகத்து எழுத்தாளர்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் பொதுவாக இப்படி சாகித்திய அக்கடமியாகட்டும் அல்லது ஞான பீட விருதுகளாகட்டும் ஒர் புறக்கணிப்பு இருப்பதாகப்படுகின்றது,அதைப் பற்றி?

அதாவது இந்த விருது வாங்குதல் வழங்குதல் இதுக்குள்ளே இந்தச் சூழலிலே ஒரு அரசியல் இருக்குதைய்யா. அரசு அதிகாரங்களை செல்வாக்குகளை இலக்கிய கோட்பாடு செல்வாக்குகளை பயன்படுத்தி உரியவர்களை உரிய விதத்தில் அணுகி அப்படித் தான் பரிசில்களை பெரும்பாலும் பெற்றுக் கொள்கின்றனர் அது நம்ம மொழிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அவலம். என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பரிசிலுக்காகவும் யாரையும் தேடியோ நாடியோ கோரிக்கைகள் எடுத்துக் கொண்டு போனது இல்லை. ஆனால் என்னுடைய எழுத்துக்கான ஒரு மரியாதை தெரிந்து வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது என்னுடைய நம்பிக்கை.

உங்கள் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்த இந்த இன்னுமோர் சிறப்பு என்னவென்றால் கடந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. விற்பனை அளவிலும் சரி ஒரு நல்ல அங்கீகாரத்தை வாசகன் வழங்கியிருக்கின்றான். இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பொதுவாகவே என்னுடைய புத்தகங்கள் விற்பனையில் இதுவரைக்கும் பின்னாடி இருந்ததில்லை. பதிப்பாளர்களும் என்னுடைய புத்தகத்தை வெளியீடுவார்கள். என்னுடைய முதல் நாவலுக்கு மாத்திரம் தான் பதிப்பாளர்களை தேடி நடந்த சிரமம் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து ஓரளவிற்கு விற்கின்ற புத்தகங்கள் தான். அதனால் எந்த பதிப்பாளரும் எங்கிட்ட வந்து எனக்கும் ஒரு புத்தகம் அச்சுக்கு கொடுங்கள் பதிப்பிற்கு கொடுங்கள் என்று கேக்கிற நிலை தான் எனக்கு இருந்திருக்கு.
இப்ப இந்த விருது அறிவிக்கப்பட்ட பிறகும் என்னுடைய இணையத்தளம் தொடங்கப்பட்ட பிறகும் என்னுடைய புத்தகங்களிற்கான டிமாண்ட் அதிகமாய் இருக்குது. குறிப்பாக சூடியபூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விருது வழங்கியவுடனே எனக்கு கிடைத்த media attention ஒரு வகையில் பெரிய உதவியாக இருந்தது. இதுவரைக்கும் எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்காத வகையில் இலக்கிய பத்திரிகைகளில் என்னுடைய நேர்காணல்கள் என்னுடைய கட்டுரைகளை திருப்பி எடுத்து போடுறது சிறுகதைகளை திருப்பி எடுத்திட்டுப் போறது இந்த மாதிரியான ஒரு ஊக்கம் தொடர்ந்து கடந்த இரு மாதங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே வாசகர் வந்து என்னுடைய புத்தகங்களை தேடி வருகின்றார்கள்.
அந்த நேரம் சரியாக இருந்ததினால் சென்னை புத்தக கண்காட்சியில் இந்த விருது அறிவிப்பும் கிட்டத்தட்ட சமகாலத்தில் இருந்த காரணத்தினால் இந்த புத்தகத்தை நிறையப் பேர் தேடி வந்து வாங்கியதை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியினுடைய பதினாறாவது நாள் கால அளவில் 2560 படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது. அதற்காக இந்த புத்தகத்திற்காக மாத்திரம் தனியாக ஒரு விழிப்புச் சுற்று வைத்திருந்தனர் என்னுடைய பதிப்பாளர்கள். குறிப்பாக இளைஞர்கள் நிறைப்பேர் இந்தப் புத்தகத்தை தேடி வந்து வாங்கிறாங்க. பரவலாக என்னுடைய புத்தகம் அந்த புத்தகம் மாத்திரமல்லாமல் ஏற்கனமே அச்சிடப்பட்ட மறுபதிப்பு கண்ட என்னுடைய நாவல்கள் கட்டுரைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் எல்லாம் கணிசமான அளவிற்கு இந்த ஆண்டு விற்பனையாகியிருக்கு. எனக்கு அது மகிழ்சியான விடயமாக படுது.

கேள்வி– இளைய சமூதாயம் தீவிர வாசிப்பின் மீது எவ்வளவு தூரம் நாட்டம் கொண்டிருக்கின்றது ஒர் எழுத்தாளனாக இந்த தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால் எமது இளைய சமூதாயத்தினுடைய தீவிர வாசிப்புப் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

அதாவது எப்போதுமே தமிழ் வாசிப்புப் பழக்கம் என்கிறது பெரும் தொகையானவர்களுக்கு இல்லைங்க. நம்முடைய ஜனத்தொகை வளர்ந்த அளவிற்கு நம்முடைய வாசகன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல முடியாது. இணையத்தினுடைய ஒரு செல்வாக்கு மிகுந்திருப்பதன் காரணமாக தமிழ் நாட்டிற்கு வெளியே வேலை செய்யிறவர்கள் இந்தியாவிற்க்கு வெளியே வேலை செய்யிறவர்கள் தமிழ் மீது ஆர்வங் கொண்டவர்கள் தங்களுடைய கவனத்தை படைப்பிலக்கியங்கள் மீது தற்சமயம் செலுத்தியுள்ளார்கள். சற்று செலுத்தி வருகிறார்கள். அவர்களின் மூலமாக படித்த இளைஞர்கள் தமிழிலக்கியத்தின் பால் திரும்பியிருப்பது ஒரு வரவேற்க்கத்தக்க நிகழ்ச்சி. அவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கிறாங்க. அவர்களின் வழிகாட்டுதலிற்க்கும் நம்முடைய இலக்கியவாதிகள் பலர் தயாராக இருக்கிறாங்க. இளைய தலைமுறைகளிலே புத்தகம் வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு துடிப்பை நான் கவனிக்கிறேன். கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்ப இருக்கிறது ஒர் உற்சாகமான சூழ்நிலை என சொல்லத் தோணுகிறது.

கேள்வி– ஆனந்த விகடன் போன்ற பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட வணிக சஞ்சிகைகள் உங்களைப் போன்ற செழுமையான எழுத்தாளர்களைப் பயன்படுத்துவதும் அதன் வாயிலாக உங்களுடைய சிந்தனைகளை அது வெறும் நாவலோ சிறுகதையொன்றோ ஒரு வட்டத்தில் இல்லாமல் பரந்து பட்ட சிந்தனைகளை உள்வாங்குவது ஒரு ஆரோக்கியமான விஷயமாகப்படுகின்றது அப்படித்தானே?

அது உண்மை தான். அதாவது வணிக இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் தொடக்க காலத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களை வழிப்படுத்திய ஆசான்கள் வந்து நான் சிறு பத்திரிகை வட்டத்தில் மாத்திரத்தில் இயங்க வேண்டும். வணிகப் பத்திரிகைகள் உரிய மரியாதை தராது. வணிக இதழ்களை எழுதுவதன் மூலம் நான் மரியாதையற்றுப் போகிறேன் என்கிற மாதிரியெல்லாம் எங்களுடைய மூத்த எழுத்தாளர்கள் நாம் தொடக்ககாலத்தில் எழுத வந்த போது எனக்கு கருத்துச் சொன்னார்கள். பின்னாடி பார்க்கும் போது எந்த இதழில் எழுதினாலும் என்னுடைய கட்டுரையை எழுதுகிறேன். எங்கு எழுதினாலும் என்னுடைய வாசகனை சென்றடைவது முக்கியம் என்பது மாதிரியான கருத்து வந்த பிறகு ஆனந்த விகடன் மாதிரியான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஆனந்த விகடன் மாதிரிப் பத்திரிகைகளில் எழுதும் பொழுது அதனுடைய வீச்சு வாசகனை சென்றடையிற வேகம் வியப்பை ஊட்டுவதாக இருக்கிறது. சென்ற இதழில் ஆனந்த விகடனில் என்னுடைய ஆத்மா என்கிற சிறுகதை வெளிவந்திருந்தது. பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய பிறகு நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த 85 வயது மதிக்கத்தக்க கிழவன் இறந்து விடுகிறான். அவன் மரணமானது கூட பக்கத்து வீடுகளுக்கு தெரியாமல் போறதுக்கு வாய்ப்பிருக்கிறதான சூழல். இப்படியான கதைகளை ஆனந்த விகடன் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது வந்து இப்ப இருக்கிற சூழலில் ஒரு பொதுவான பிரச்சினை. இந்தக் கதை வெளியானவுடன் இதுக்கு கிடைக்கிற வரவேற்பு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் மற்ற பதிப்பகங்களை விடவும் ஆனந்த விகடன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக இருக்கிறது.

கேள்வி– தீதும் நன்றும் என்கின்ற தொடரை உங்களுடைய சிந்தனையை தொடராக விகடனிலே எழுதிய பொழுது கவனிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு விஷயம், ஈழத்திலே நடந்த தமிழின அழிப்பு தமிழின படுகொலை குறித்து உங்களுடைய இயலாமையின் கூற்றாக ஓர் எழுத்தாளனாக நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதையொட்டிய ஒரு கேள்வி. அதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் சமூகம். ஒரு எழுத்தாளனைப் பொறுத்தவரையிலே மற்றைய சமூகத்து எழுத்தாளர்கள் அளவுக்கு அவனுடைய குரல் ஒரு சமூகத்து குரலாக அங்கீகரிக்கப்படுவதில்லை என நான் நினைக்கின்றேன். அதை நீங்கள் ஏற்பீர்களா?

மலையாளத்தோடு, கன்னடத்தோடு, தெலுங்கோடு, மராட்டிய மொழியோடு, ஹிந்தி மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது தமிழிலக்கியவாதியினுடைய குரல் இலக்கியவாதியினுடைய குரல் ஒரு அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட குரலாக ஒலிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் அத்தகைய சூழலுக்கு ஏற்றவாறு தமிழினத்தினுடைய ஓர் அழிவிற்கு அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் போதுமான அளவுக்கு தங்களுடைய குரலை உயர்த்திப் பேசினார்களா என்கின்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. நான் தொடர்ந்தும் என்னுடைய கட்டுரைகளிலும் இதை எழுதியிருக்கிறேன். பொது மேடைகளிலும் இதைப் பற்றி நான் விவாதித்திருக்கிறேன்.
அதாவது எதிர்காலத்தில் ஈழத் தமிழனக்கு நடந்த கொடுமைகளை ஏனென்று கேட்காமல் வாய் மூடி மௌனியாகி மயங்கி கிடந்த தமிழ் எழுத்தாளன் வரலாற்றில் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக இருப்பான் என்கிற ஓர் எண்ணம் எனக்குண்டு. ஆனால் எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்குது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்திய சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டுத் தான் செயல்பட வேண்டியிருக்குது. நம்முடைய வருத்தத்தை கோபத்தை அநியாயத்தைக் கேட்கிற ஒரு குரலாக ஒட்டுமொத்தமாக தமிழ் படைப்புலகத்தின் குரல் ஒலிக்கவில்லை என்கிற ஆதங்கம் எனக்குள்ளே இருக்குது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் என நினைக்கிறேன். ஆனந்த விகடனில் நான் எழுதிய 42 வாரம் தொடரில் குறைந்தது ஆறு ஏழு கட்டுரைகளில் இது பற்றி பேசியிருக்கிறேன். இது பற்றி வேறு இலக்கியங்களிலும் எழுதினேன். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் என்னுடைய குறையை சொல்லாமல் போகவில்லை. சமீபத்தில் வெளியான பச்சை நாயகி என்கிற என்னுடைய கவிதைத் தொகுப்பில் எட்டுப் பத்து கவிதைகளிலாவது மறைமுகமாக ஆனால் வெளிப்படையாக பொருள் விளங்கும் வகையில் காத்திரமாக பேசியிருக்குது. என்னுடைய வருத்தத்தை என்னுடைய கோபத்தை என்னுடைய ஆத்திரத்தை என்னுடைய இயலாமையை வேறு எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியலீங்க. இந்தளவுக்கு படைப்புலகம் இயன்றளவு தன்னுடைய அதிருப்தியை வெளியிடவில்லை என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம் தான்.


உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானதொரு எழுத்தாளர்களுடைய அணி அவர்களுடைய கூட்டான ஒரு செயற்பாடு என்பதும் ஒரு சவாலான சூழலாகத் தான் இருக்கிறது இல்லையா? அதாவது தமிழ் சூழலிலே ஒன்றுதிரண்டு ஒருமித்த கருத்தோடு இப்படி சமுதாயப் பிரச்சினைகளை வெளியிடுவது என்பதும் சாத்தியப்படாத ஓர் அம்சம் அப்படித் தானே?

பிற மொழிகளில் சாத்தியப்படுகிறது. தன்னுடைய மாநிலத்திற்கான பிரச்சினை என்று வரும் போது ஓர் மலையாளப் படைப்பாளிகள் அத்தனை பேரும் ஒரு குரலில் பேசுகிறார்கள். கன்னடப் படைப்பாளிகளும் ஒரு குரலில் பேசுகிறார்கள். மராத்தியப் படைப்பாளிகள் பேசுகிறார்கள். வங்காளிகள் பேசுகிறார்கள். தமிழனுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலமை? தனித்த ஒற்றைக் குரலாக பேச முடியவில்லை என்பது ஒரு வரலாற்று சோகமாகத் தான் எனக்குப்படுகிறது.

வட்டார மொழி வழக்கியல் குறிப்பாக நாஞ்சில் பின்ணணியிலே நீங்கள் வட்டார மொழி வழக்கியலை நவீன சிறுகதை இலக்கியத்திற்காகட்டும். படைப்புலகிற்காகட்டும் நீங்கள் பொதுவாக வழங்கியிருக்கிறீர்கள். தமிழுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பென்று கூட இதைச் சொல்லலாம். ஏராளமான வட்டார மொழி வழக்கியலை தனது இலக்கியத்திலே உள்வாங்கியிருக்கிறது தமிழ் இல்லையா?

அதாவது அந்த வட்டார வழக்கு என்கின்ற பகுப்பை வன்மையாக மறுக்கிறேன். இது வந்து கல்லூரிப் பேராசிரியர்களும் திறனாய்வாளர்களும் தம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சொல் வழக்கு. நான் என்னுடைய மக்களை எழுதுகிறேன். என்னுடைய கிராமத்தை எழுதுகிறேன். என்னுடைய பிரதேசத்தை எழுதுகிறேன். ஆனால் என்னுடைய திருநெல்வேலிப் பிரதேசத்தையோ நாஞ்சில் நாட்டுப் பிரதேசத்தையோ மாத்திரம் எழுதுகிற போது அது வட்டார வழக்கு என்கிற அடைப்புக்குறிக்குள் பேசப்படுகிறது. இதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியே தஞ்சை வட்டார அல்லது சென்னை வட்டார பிற வட்டார எழுத்துக்களை வட்டரா வழக்கு என்று குறிப்பிடுவதில்லை. நான் என்னுடைய மொழியை என்னுடைய பிரதேச மக்கள் பேசிய மொழியை கையாள முயற்சி செய்தேன். சரி ஒரு வசதிக்காக அவர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட நான் என்னுடைய பிரதேசத்திற்குரிய மொழியை அது இறந்து போய் விடாமல் உயிரோடு இருப்பதற்கான முயற்சியைத் தான் படைப்பிலக்கியங்கள் மூலமாக நான் தொடர்ந்த செய்கிறேன். அதாவது சென்னைப் பொதுக் கூட்டத்தில் நான் பேசிய ஒரு விஷயம் என்னுடைய நாவலில் ஒரு வழக்கு மொழியை கையாளவதன் மூலம் அந்த சொல்லை ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை ஒரு பெரிய சேவை என்று நினைக்கிறேன்.

இப்படியான உங்களுடைய எழுத்துலக சூழலிலே இன்னுமொரு பரிமாணமாக அதாவது ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட ஒரு களத்தைக் கொடுக்கின்ற ஒரு ஊடகமாக சினிமா என்கின்ற ஊடகம் திகழ்கின்றது. ஊடங்களுக்கு முன்னால் இருக்கின்ற பல எழுத்தாளர்களுடைய படைப்பிலக்கியங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரையிலே படைப்பு அல்லது ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை காட்சி வடிவம் பெறும் பொழுது அதனுடைய அந்த உள்ளார்த்தம் திரிக்கப்படுகின்றது அல்லது சிதைவுறுகின்றது என்கிற விமர்சனம் எழுகின்றது. உங்களுடைய படைப்பு அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறதா?

என்னுடைய “தலைகீழ் விகிதங்கள்” என்கிற நாவல் “சொல்ல மறந்த கதை” என்கிற பெயரில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படமாக வந்தது. தங்கர்பச்சன் இயக்கத்தில் சேரன் நடித்த முதல் படம் அது. நான் இதை வேறு விதத்திலே பார்க்கிறேன். நாவல் என்கிற தளம் வேறு சினிமா என்கிற தளம் வேறு. சினிமாவைப் பார்க்க போகக் கூடாது என்று நினைக்கிறவன் நான்.
நாவல் கையாளுகின்ற மொழி வேறு. இந்த குறிப்பிட்ட திரைப்படம் கையாளுகின்ற மொழி வேறு. நாவல் கையாண்ட தொழில் வேறு திரைப்படம் கையாண்ட தொழில் வேறு. இது வந்து என்னுடைய நாவல் சிதைக்கப்பட்டது என்கிற ஒரு எண்ணத்தில நான் சொல்லலை. என்னுடைய நாவலை எடுக்கிற போது அவருக்கு நாஞ்சில் வழக்கு மொழி புரியாத போது நெல்லை விவசாயம் பற்றி அறிவு இல்லாத போது எப்படி முடியும்? ஒரு இயக்குனர் அது இயக்குனருடைய மீடியம் அந்த இயக்குனர் அந்த தொழில் அந்த மொழியை எப்படிக் கையாள முடியும் என்கிற கேள்வி நம்மகிட்டே இருக்கு. ஒரு நாவலில் இருந்து அதாவது ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது என்பது அப்படியே திரைப்படமாக்குவது என்பது வரிக்கு வரி திரைப்படமாக்குவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல
அவர்களுக்குத் தேவையானது முக்கியமான 5 அல்லது 6 காட்சிகள். அதை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு இயக்குனருடைய பார்வையில் மூலம் அந்த நாவலை அவர்கள் திரைப்படம் என்ற இன்னொரு வடிவத்தில் வெளியே தருகிறார்கள். அது சிறந்த திரைப்படமா இல்லையா என்பதில் என்னுடைய விமர்சனங்கள் உண்டே தவிர என்னுடைய நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டது அதனுடைய மொழி சிதைக்கப்பட்டது, பிரதேசம் சிதைக்கப்பட்டது என்பதில் எனக்குப் பிரசனை இல்லை.

படித்துறை என்கிற திரைப்படத்தின் மூலம் திரையிசைக் கவிஞராக நீங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றீர்கள். அந்த வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

படித்துறை என்கிற படம் சுகா என்கிற இயக்குநரால் எடுக்கப்படுகிற படம். சுகா எனக்கு நெருக்கமான நண்பர். என்னுடைய அண்ணாச்சி நெல்லைக் கண்ணனுடைய பையன். என்னடைய மகன் என்கிற இடத்தில் இருப்பவர். அவருடைய படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இசை மேதை அவர். அதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இளையராஜா வந்து தன்னுடைய காலகட்டத்திலே வாழ்கின்ற சிறந்த படைப்பாளிகளை திரைக்கான பாடலை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. பேராசை என்று நான் சொல்லி விட முடியாது.
அதனால எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனுடன் என்னையும் அழைத்து இந்த படித்துறை படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார். ஜெயமோகனுடைய பாடல் சில காரணங்களினால் இந்தப் படத்தில் இடம்பெற முடியவில்லை. நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல் இடம்பெற்றிருக்கின்றது. அதன் மூலம் எனக்கு திரையிசைப் பாடல் என்றால் என்ன என்பது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. சினிமாப் பாடல் என்பது வேறு. நம்முடைய கவிதை என்பது வேறு. சினிமா வேறு வடிவத்திற்காக வேறு எழுத்திற்காக எழுதப்படுகிற ஒரு வடிவம். இது பற்றிய அறிவும் அனுபவமும் எனக்கு கிடைத்தது. இதை வந்து ஒரு சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.

நிறைவாக, கேட்டுக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு, நேயர்களுக்கு ஏதாவது கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நேர்காணலை கேட்டுக் கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழனுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மொழி அளப்பரிய ஆற்றல் கொண்டது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட தொன்மை கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கிய மொழி. இந்த மொழியில் எங்களாலான கூடுதலான நூல்களை இயற்ற முயன்று கொண்டிருக்கிறேன். இந்த மொழியை கற்பதன் மூலம் நலீன இலக்கியங்களை கற்பதன் மூலம் நம்மடைய மொழியினுடைய செழுமையை மேம்படுத்த முடியுமென்றும் இந்த மொழியினுடைய தொடர்ச்சியை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும் சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்.

6 responses so far

Jul 06 2011

பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்

Published by admin under Uncategorized

இன்று காலை என் மின்னஞ்சலுக்கு GTV தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பர் மூலம் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று காலமான செய்தியைக் கண்டு பெருந்துயருற்றேன். ஈழத்திற்கு அப்பால் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்ட ஏற்றுக்கொள்ள எம் புலமைச் சொத்துக்களில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு ஆய்வரங்கள் சிலவற்றில் இவரின் பகிர்வுகளைத் தூர இருந்து கேட்டதோடு சரி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து வானொலிப்பணியில் என்னை ஈடுபடுத்தியபோது ஏ.ஜே.கனகரட்ணாவின் இழப்புச் செய்தியை வானொலியில் ஒரு அஞ்சலிப்பகிர்வாகச் செய்ய விழைந்த போது வானொலியாளர் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், பேராசரியர் சிவத்தம்பி அவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். அன்றிலிருந்து கவிஞர் முருகையன் இழப்பு வரை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடவும் அவரின் பகிர்வுகளை வானொலியில் எடுத்துவரவும் உதவினார். “தம்பி! இப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும் மேனை” என்பது வரை அவரது அக்கறை இருந்தது. இவ்வளவு பெரிய ஆளுமை இந்தச் சிறியோனின் பணிகளுக்குக் கேட்டமாத்திரத்தில் ஓம் தம்பி செய்வம் என்று ஒத்துழைத்தது அவரின் இன்னொரு எளிய பண்பிற்கு அடையாளமாக அமைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவையை ஒலி ஆவணப்படுத்தலாக அமைக்க முனைந்தபோது பிரான்சில் வாழும் சகோதரர் கி.பி.அரவிந்தன் மற்றும் முகம் காட்ட மறுக்கும் நண்பர்கள் பேருதவி அளித்தார்கள். அந்த ஆவணத்தை நூலுருவில் கொண்டுவரவேண்டும் என்று பலசந்தர்ப்பங்களில் எண்ணியிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பேர் சேர்த்த சிவத்தம்பி அவர்களைத் துணைவேந்தராக மகுடம் சூட்டிப் தன்னைப் பெருமைகொள்ளவைக்கவில்லையே என்ற ஆதங்கம் சிவத்தம்பி அவர்கள் எம்மைக் கடந்து போனபின்னும் ஆதங்க இருப்பாய் உழன்றுகொண்டிருக்கின்றது.
சிவத்தம்பி ஐயா! இப்போது தான் உங்களின் இளைப்பாறும் நேரம் என்று நினைத்து அமைதி கொள்வோம்.

எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.

இந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.

இப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த “கரவையூற்று” என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் “மன ஓசை” நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.

ஒலிப்பெட்டகம்

பாகம் 1

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து ” தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்” குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.

பாகம் 2
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் , ஏறக்குறைய 2300 ஆண்டு தொன்மை மிக்க தமிழின் வரலாறு பண்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வுப்பணிகளைச் சிலாகின்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்கள். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவியரில் ஒருவரான திருமதி சுமத்திரி.பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசான் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து கிழக்குப் பல்கலைக்கழத்தில் பேராசிரியரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் கருத்துரை.

பாகம் 3

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பிக்குள் இருந்த நடிகனையும், நாடகத் தயாரிப்பாளரையும், புதிய நாடக வடிவங்களை ஏற்படுத்த ஏதுகோலாக இருந்த செயற்பாட்டையும் தன் வாழ்வியல் அனுபவத்தினூடே விளக்குகின்றார்.




கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு

பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.

இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.

நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.

ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.

1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.

இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.

அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.

1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் “மனமே சிங்கபாகு” அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் “மனமே சிங்கபாகு” போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.

கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.

அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.


( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).

இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.

இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.

இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.

பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.

கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.

இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.

முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.

உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
“போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்”
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.

எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். “எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்” என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். “எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்” என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.

கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.

அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.

பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.

அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.

ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.

நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.

சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு

பேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.
அந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.

தமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.

பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.

இந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

மாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.

அதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், “பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்” என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.

ஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன். இப்பங்களிப்பை வரலாற்றுப் பேராசிரியரான செண்பகலட்சுமி, பேராசிரியர் பணிக்கர் போன்ற பலர் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இரண்டாவது மிக முக்கியமான பங்களிப்பு குறிப்பாக ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ள, தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள். இதில் குறிப்பாக அவர் சைவ இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்த பொழுது திருமுறைகள் தொடங்கி, மெய்கண்ட சாஸ்திரம் வரையான வளர்ச்சியப் பற்றி அவர் சொல்கின்ற பொழுது ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார்.

அதைப்போலவே பிற்காலங்களில் தமிழ்ச்சூழலில் உருவான மிக முக்கியமான சமய மரபைச் சார்ந்த திருமூலர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வள்ளலார் குறிப்பாக தாயுமானவர் இவர்களைப் பற்றி இவர் ஆய்வு செய்த பொழுது இரண்டாவது யுகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டாவது பக்தி யுகம் என்று இவர் குறிப்பிடுகின்ற பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை உருவான ஒரு பக்தி இலக்கிய மரபிலிருந்து ஒரு வேற்றான தமிழ் மரபு உருவானதென்றும் இந்த மரபு என்பது மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்தி மனித நேயத்தை முதன்மைப்படுத்திய ஒரு தமிழக சமய இலக்கியமரபாக உருவானதாக அவர் பதிவு செய்கிறார். ஒரு மாக்ஸிய முறையியலை முதன்மைப்படுத்திய பேராசிரியர் அவர்கள் மாக்ஸிய இயங்கியல் சார்ந்து சமூக வரலாற்றை எழுதக்கூடிய அவர் இவ்விதம் சமயத்தையும் மனித நேயத்தையும், இணைத்துக்காணக் கூடிய ஒரு மானுடவியல் துறை சார்ந்த சொல்லாட்சிகளால் அவர் செயற்பட்டிருப்பதைக் காணமுடியும்.

இதில் சில விஷயங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பாக சமயம் என்பது மனிதநேயத்துக்காக செயற்படக்கூடிய ஒரு நிறுவனம் என்பதும், அது சார்ந்துதான் நாம் அவற்றின் பல்வேறு கூறுகளைப் பார்க்க வேண்டும் என்பதை அவருடைய பயிற்சியின் மூலமாக உருவான மானுடவியல் துறை சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக அவர் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிறுவனமாக உருப்பெற்ற ஒரு சமயத்தின் மூலம் இவ்விதமான சாத்தியப்பாடுகள் உண்டா என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன். இது அவருடைய பண்டைத் தமிழ்ச்சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி அளவிற்கு இருக்கும் அவருடைய சிறந்த ஆய்வென்று நான் கருதுவேன்.

இறுதியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 20 ஆம் நூற்றாண்டு பற்றிச் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய ஊடகங்கள் பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்ல முடியும். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, தனித்தமிழ் இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, இதனுடைய மூலத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, என்பதான பல கேள்விகளுக்கான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளதாக நான் கருதுகிறேன்.

சிவத்தம்பி அவர்கள் பேசுகிறார், சைவ சமய மரபின் தொடர்ச்சியாகவே தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் போன்றவை உருப்பெற்றிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் போக்குகள் குறித்த விரிவான இலக்கிய மற்றும் பல்வேறுவிதமான பண்பாட்டுத் தரவுகள அவர் முன்வைக்கிறார். இதை அவ்வளவு எளிதாக புறந்தள்ள இயலாது. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதல் மறைமலை அடிகள் வழியாக, திரு வி.க வழியாக ஒரு தொடர்ச்சியான சைவ மரபு சார்ந்த உரையாடல் என்பது தமிழ்ச்சூழலில் நடைபெற்றிருக்கின்றது.

இந்த உரையாடல் மரபில் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்கள், குறிப்பாக தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றுக்கான பண்புகளோடு பேராசிரியர் இணைத்துப் பார்க்கும் இந்த ஆய்வு முறை மிகமுக்கியமான ஒரு பதிவாகும். அதைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஊடகங்கள் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்ற பல குறித்து பேராசிரியருடை ஆய்வுகள் மிக விரிவானவை. புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் இவை உருவாக்கத்தை ஒரு சமூகவியலோடு எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இவ்வாறான புனைகதைகள் அது சார்ந்த ஊடகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு தன்முனைப்பு சார்ந்தும் தர்க்கபூர்வமின்றியும் ஒரு தொடர்ச்சியான மரபின் வளர்ச்சியென்று கருதுகின்ற அதே நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலமாக உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அச்சுப் பண்பாடு உருவாக்கமென்றும் அந்த அச்சுப் பண்பாடு உருவாக்கத்தை 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் ஒரு 2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு விரிவான ஆய்வைத் தனது ஆய்வாகவும் , பின்னர் வந்த காலத்தில் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுகள் அவரது இந்த 75 ஆண்டு நிறைவு பவழ விழாக்காலத்தில், 1956 தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழியல் ஆய்வு மேற்கொண்ட அவருடைய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் என்று கருதுகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல மேல் ஆய்வுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு

1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்
கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.

நான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.

ஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.

குறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.

தமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.

அத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, “பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்” சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.

பிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.

பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.

அதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலே
அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.

அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.

மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.

அதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வகையிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.

கவிஞர் முருகையன் காலமானபோது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தந்த வானொலிப்பகிர்வு

7 responses so far

Jul 03 2011

“சிவபூமி” என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்

Published by admin under Uncategorized

இந்தமுறை தாயகம் சென்றபோது கொழும்பில் நின்ற சில நாட்களில் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. அங்கு சென்றுவிட்டு உடனேயே அந்தக் கும்மிருட்டில் வெள்ளவத்தையில் இருந்து ஓட்டோ ஒன்றைப் பிடிக்கின்றேன். வழக்கமாக நானாகப் பேச்சுக் கொடுக்கமாட்டேன் ஓட்டோக்காரர் பேசும் வரை. சிலவேளை யாராவது சிங்களவர் ஆட்டோக்காரராக வந்து வாய்த்து, அவர் தன் மொழிக்காரர் என்று நினைத்துச் சரளமாகச் சிங்களம் பேசி உரையாடும் போது இஞ்சி தின்ற மங்கியாக நானும் ஏதாவது சிரித்துச் சமாளித்து, கையில் இருக்கும் மொபைல் போனில் அவசரமாக அழைப்பு எடுப்பது போலப் பாவனை (பீலா) காட்டிய சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் இந்த அதிகாலை நேரம் ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் போது காலி வீதியில் எந்தவித வீதி நெரிசலும் இன்றி ஓட்டோ எறும் போது சாரதி தமிழில் பேச்சுக் கொடுக்கின்றார். பிரணவ மந்திரம் தெரியாத படைத்தல் தொழில் கடவுள் பிரமனுக்கும் தெரியாது, அழிக்கும் தொழிலைக் கொண்ட உருத்திரனுக்கும் புரியாது என்று பூடகமாக பிரணவமந்திரத்தை இனப்பிரச்சனையாகவும், பிரம்மா, உருத்திரன் கடவுளர்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஒப்பிட்டு அவர் பேசிக்கொண்டு வந்தது அவரின் கல்விப்புலமையின் உயர்வைக் காட்டியது. அதை மெய்ப்பிப்பது போல நான் இறங்கும் இடம் வந்ததும் அவர் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டதும் உண்மையில் என் மயிர்க்கால்கள் அந்த நேரம் குத்திட்டு நின்றன, இப்போது எழுதும் போதும் கூட.
“தம்பி! நான் ஒரு எலெக்ட்ரோனிக் இஞ்சினியர், என்ர அலுவலக நேரத்துக்கு முன்னமும், வேலை முடிஞ்ச பிறகும் ஆட்டோ ஓட்டுறன். அந்த ஓட்டோ ஓட்டுற காசை சண்டையிலை கைவிடப்பட்ட ஆதரவில்லாத பிள்ளையளுக்குக் கொடுக்கிறன்”
இதுதான் அவர் சொன்னது.
புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து ஒரு டொலரை ஆதரவற்ற இல்லங்களுக்குக் கொடுக்கக் கூட ஆயிரம் தடவை யோசிப்போம், ஆனால் தாயகத்தில் இருக்கும் இவரைப் போல எத்தனை உள்ளங்கள் தம் அடையாளம் தெரியாது உதவிக்கொண்டிருக்கிறார்கள். உதவுவதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதும் என்று மீண்டும் ஒருமுறை உணரப்பட்ட தருணம் அது.
“இந்தாங்கோ அண்ணை! என் பங்கும்” காற்சட்டைப் பையில் இருந்து மேலதிகமாகக் கொடுக்க
“இல்லைத்தம்பி இருக்கட்டுமே”
“இல்லையண்ணை, என் பங்குக்கும் போகட்டும்” என்று திணித்து விட்டு நகர்கின்றேன்.
அதிகாலையில் ஞான உபதேசம் தந்த முருகனாக அவர் தெரிந்தார்.

000000000000000000000

எங்கள் அயலூர் கோண்டாவிலில் சிவபூமி என்னும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இயங்குகின்றது. கடந்த முறை இங்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை இங்கு செல்லவேண்டும் என்று வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். என் சகோதரர் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து முதல் தடவை இப்போது தான் தாயகத்தில் பெற்றோரோடு தன் பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றார். அவருக்கோ பிறந்த நாள் விருந்து என்பதை விட ஆதரவற்ற இல்லங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு பகற்பொழுதைக் கழிப்பது என்று தீர்மானித்து வந்திருந்தார். இந்த நேரம் என் சிவபூமி பாடசாலைக்கான பயணமும் ஒருசேர அமைய அங்கு அவரின் பிறந்த நாளைக் கழிக்க எண்ணினோம்.

ஜீலை மாதம் 2 ஆம் திகதி, 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார். அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஈழத்தமிழர் கழகம் உட்பட புலம்பெயர் சமூகத்தில் இருந்து தனி நபர்களும் ,அமைப்புக்களும் இந்த அறக்கட்டளையின் தேவை உணர்ந்து உதவியிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் இன்னும் தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் சொந்தங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டிய முதற்பணி இப்படியான அற நிறுவனங்களுக்கு இயன்ற உதவிகளைக் கொடுக்கவேண்டியது.
இந்த சிவப்பூமி அறக்கட்டளையின் இணைய முகவரி http://sivapoomi.org/

மேலை நாடுகளில் உள வளர்ச்சி குறைந்த பிள்ளைகளையும், செவிப்புலன் இழந்த, வாய்பேச முடியாத, விழிப்புலன் அற்ற, இன்னபிற குறைகள் கொண்ட பிள்ளைகளையும் கவனிக்கும் பொருட்டு அரசாங்கமும் தொண்டு அமைப்புக்களும் பல்வேறு பாடசாலைகளையும், உதவி நலத்திட்டங்களையும் உருவாக்கி அவர்களைச் சமூகத்தின் ஒரு அங்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எம்மூரில் நான் வளர்ந்த காலகட்டத்தில் இப்படியான பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு வைத்திருந்ததைக் கண்டிருக்கின்றேன். அப்படியானதொரு சமூக அமைப்பில் இந்த சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் பெரும் பங்கை உணர முடிந்தது. காலை வேளையில் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டுக்கும் வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்து, காலையில் போசாக்கான காலைச்சிற்றுண்டி, பின்னர் ஆரோக்கியமான மதிய உணவும் கொடுக்கின்றார்க. ஒவ்வொரு பிள்ளையின் மனவிருத்தியின் எல்லைக்கேற்ப அவர்கள் தரம் பிரிக்கப்பட்டு கற்பித்தல் கொடுக்கப்படுகின்றது.

வீட்டுக்காரரோடு அண்ணனின் பிறந்தநாளில் சிவபூமி பாடசாலைக்குச் சொல்கிறோம். அங்கே அதிபரின் அறைக்குச் சென்றபோது நிர்வாகப் பொறுப்புக்களில் இருக்கும் ஒரு இளைஞன்
“நீங்க கானா பிரபா தானே”
“ஓம் எப்படித் தெரியும் தம்பி?”
“உங்கட வலைப்பதிவு வாசிக்கிறனான்”


பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிள்ளைகள் தமக்கான ஆசிரியர்களின் வகுப்பில் பிரிந்திருந்து சிரத்தையோடு கற்கின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆனால் கள்ளமில்லாத தெய்வக்குழந்தைகளாக எங்களைக் கண்டு சிரிக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கும் மூன்று மாடிக்கட்டடத்திலும் வகுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கும் செல்கின்றோம். அந்தக் கட்டிடம் கூட லண்டனிலும், அமெரிக்காவிலும் வாழும் நம்மவர்களின் பெருங்கொடையின் சாட்சியமாக வெள்ளித்தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எங்களைக் கண்ட பிள்ளைகள் சிலர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். சிலர் கைகூப்புகின்றார்கள் அவர்களின் மொழி உடல் மொழி மாத்திரமே. அந்தப் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் வகுப்பறைகளில் மாட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடசாலையின் வளர்ச்சியும் தேவையும் பன்மடங்காகப் பெருகிய நிலையில் பக்கத்தில் இருக்கும் காணி கூட வாங்கப்பட்டு இன்னொரு பாடசாலை அமைக்கப்பட இருக்கின்றது.
“வணக்கம் சேர்” தானாகவே வந்து அறிமுகப்படுத்திய இன்னொரு இளைஞரை யார் என்று விசாரித்தோம்.
“நானும் இன்னொரு ரீச்சரும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம், நாங்கள் இப்படியான மனவிருத்திப் பாடசாலையில் எதிர்காலத்தில் படிப்பிக்கப்போறம் அதற்கான பயிற்சிக்குத் தான் வந்திருக்கிறோம்”. அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மதிய உணவுக்கான நேரம் என்று மாடிப்படிகளில் தாவித்தாவி வரும் அந்த மாணவர்களைக் காணும் போது தெரிந்தது. ஒரு மாணவன் வழுக்கி விழப்போக, அவரை வாரியணைத்துத் தூக்கிக் கொண்டே போனார் அந்தப் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர். இப்படியான பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இன்னும் அதிக பொறுமையும், பொறுப்பும் கொண்டிருக்கவேண்டிய தேவையும் உணரப்படுகின்றது.

“எதென்ஸ் இல் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்குப் போகப்போற மாணவன் எங்கே?” நானாக அங்கே பணியில் நின்ற இளைஞரைக் கேட்டேன். அகில இலங்கையில் இருந்து எதென்ஸ் இல் நடக்கும் விசேட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள சிவபூமி பாடசாலையில் இருந்து சிவராசா துஷ்யந்தன் தெரிவாகி இருந்ததும் அதன் தொடர்பில் திரு ஆறு.திருமுருகன் அவர்களை நான் எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் கடந்த பெப்ரவரியில் பேட்டி எடுத்தும் இருந்தேன்.
“இவர் தான் அவர்” என்று சிவராசா துஷ்யந்தனைக் காட்டினார்கள்.
வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் அற்ற அவர் தனது ஏழு வயதில் இருந்து இந்தப் பாடசாலையில் படித்து வருபவர். என்னைக் கண்டு கைகூப்பினார். நான் அவரின் கையை இறுகப்பற்றினேன்.
இன்று ஜூலை 3 ஆம் திகதி எனது மின்னஞ்சலுக்கு வந்த செய்தியில் இப்படி இருந்தது.
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாண வனான இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதற் தடவையாக பங்கேற்று இருந்தார்.நேற்று இடம்பெற்ற 4–100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார் துஷ்யந்தன்.இன்று இடம்பெறும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் உயரம் பாய்தல் போட்டியிலும் துஷ்யந்தன் பங்கேற்க இருக்கிறார்.

ஜூலை 4, 2011 இன்று கிடைத்த செய்தி
கிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மற்றும்போட்டியில் வெள்ளிபதக்கத்தை பெற்றுக்கொண்டர் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்ணன் தனது பிறந்த நாளைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்துத் தானும் அவர்களோடு கொஞ்ச நேரம் சப்பாணி கட்டி இருந்து மகிழ்கின்றார். அந்த நிறை உணவோடு வடை, பாயாசமும் பரிமாறப்படுகின்றது.
சாப்பாட்டு நேரம் முடிந்து எல்லாப்பிள்ளைகளும் ஒரே மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை ஆசிரியர் அறிவிக்க, அவர்கள் முன்னே வந்து பாடுகிறார்கள், அபிநயம் பிடித்துப் பேசுகிறார்கள்.தாம் கற்பித்தவை அரங்கேறிக்கொண்டிருப்பதைக் கண்டு தொண்டர் ஆசிரியர்கள் முகத்தில் பூரிப்பு.
எமது மனதிலோ சிவபூமி இன்னும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.

15 responses so far

Jun 26 2011

இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை

Published by admin under Uncategorized

இணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது. அதற்குப் பிறகு பல வருஷங்களுக்குப் பின் இந்தத் தேர்முட்டிப் படியில் அமர்ந்திருக்கின்றேன் கூட இருந்த நண்பர்களைத் தொலைத்து விட்டு. தூரத்தில் அலுமினியத் தகடால் மூடப்பட்ட ஒரு குப்பைத்தொட்டித் தேடி வரும் ஆடும், குட்டியும் கண்ணிற் பட்டது. கமராவை எடுத்துக் கிளிக்கினேன். குப்பைத் தொட்டிக்குக் கிட்ட வந்த ஆடு அலுமினியத் தகட்டைக் காலால் விஜய்காந்த் ஸ்ரைலில் உதைந்து விட்டுக் குப்பைக்குள் முகம் விட்டதைப் பார்க்க வேணுமே ;-) யாழ்ப்பாணத்து ஆடுகள் புத்திசாலிகள். தூரத்தே மோட்டார் சைக்கிளில் சுபாங்கனும் நிருஜாவும் வருவது தெரிந்தது.

கடந்த ஆண்டு யாழ்ப்பாணம் போன போது சகவலைப்பதிவர் கறுப்பியைத் தான் சந்திக்க முடிந்தது. அந்த நேரம் சுபாங்கனும் யாழில் இருந்தார் என்பதை நான் கொழும்பு வந்து சிட்னிக்கு விமானம் ஏறியபின் தான் தெரிந்தது. இப்போதெல்லாம் காலையில் இருந்து மாலை வரை நான் செய்யும் காரியங்கள் ட்விட்டரில் பதிவாகிவிடுவதால் சகோதரன் சுபாங்கன் நான் யாழ் வந்ததும் சந்திப்போமா என்றார். அந்த நேரம் நிருஜாவும் வேலை விடயமாக யாழ் வந்ததால் இருவரையும் ஒரே நாளில் சந்திக்க முடிவானது. கொக்குவில் இந்து தேர் முட்டியில் அமர்ந்தவாறே ஊர்க்கதைகளையும், பதிவுலகம் பற்றியும் ஆசை தீர ஒரு மணி நேரம் பேசினோம்.


(நிரூஜா, நான், சுபாங்கன்)

சுபாங்கன் இன்னும் பல்கலைக்கழகப் படிப்பில் இருக்கும் மாணவன்,தரங்கம் (http://subankan.blogspot.com/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். கடந்த நல்லூர்த் திருவிழாக்காலத்தில் இவர் எடுத்த கலை நயம் மிக்க புகைப்படங்களுக்கு நான் அடிமை. அமைதியாகவும், பண்பாகவும் பேசும் நல்ல பிள்ளை இவர். ட்விட்டரில் @subankan என்ற ஐடியில் அவ்வப்போது உள்ளேன் ஐயா என்பார்.

நிரூஜா என்றதும் ஏதோ சிம்ரன் ரேஞ்சுக்கு ஒரு குமர்ப்பெட்டையை நினைத்துக் கற்பனை வளர்த்துக் கொண்டால் கறுப்பி என்ற பெயரில் டெரர் பாண்டியாக இருக்கும் நண்பர் போல உங்கள் ஆசை எல்லாம் மண்ணாப் போக. நிரூஜா என்ற புனைப்பெயருக்குள் அவர் ஒரு வசீகரமான ஆண் செவ்வானச் சிதறல்கள்…( http://www.suwadi.org/) என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் என்பதோடு @nirujah என்ற ட்விட்டர் ஐடியில் வந்தும் கலக்குபவர். தகவல் தொழில் நுட்பத்தில் லண்டனில் மேற்படிப்புப் படித்தாலும் நாடு திரும்பி (வந்தி கவனிக்க) சேவை ஆற்றுபவர்.இவரிடம் இலங்கையின் தகவல் தொழில் நுட்பத்துறையின் இன்றைய நிலை குறித்து நிறைய அறிந்து கொண்டேன்.

பின்னர் தேனீர் அருந்துவோமா என்று பக்கத்தில் இருக்கும் தேனீர்க் கடையைக் குறி வைத்துக் கேட்டால் நிரூஜா கூல்பார் போகலாமே என்று கேட்டார். சரி அவரின் ஆசையை விட்டுவைப்பானேன் என்று பரணி கூல்பார் சென்று றோல்ஸ், பிளேன் ரீ, குளிர்பானம் உண்டு எம் சந்திப்பை இனிதே நிறைவு செய்தோம். லுமாலாவில் வெளிக்கிட்டு தாவடி வரை வந்த பின்னர் தான் என் மொபைல் போனைத் தவறவிட்டது தெரிந்து மீண்டும் பரணி கூல்பாருக்குச் சென்றதும் கோயில் தேர் முட்டிப் படிக்கட்டில் அது பத்திரமாக இருந்ததும் நிரூஜாவும், சுபாங்கனும் அறியாதவை.

தென் கொரியாவிற்குப் பணி நிமித்தம் சென்று வலையுலகில் சும்மா கொஞ்ச நேரம் http://koculan.blogspot.com/ என்ற வலைப்பதிவை ஆரம்பித்து பங்காளியாகி என்னோடு நண்பரானவர் பின்னர் தாயகம் போன பின்னர் தன் வலைப்பதிவை நட்டாற்றில் விட்டதால் என்னிடம் வாங்கிக்கட்டியவர். நான் யாழ்ப்பாணம் வந்ததை அறியத்தந்ததும் தான் எழுத முடியாத சூழலை முதலில் சொல்லிவிட்டுத் தான் சந்திப்பைத் தொடர்ந்தார். இப்போது யாழ்ப்பாணத்தின் பிரதேச செயலகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் இவரை ஒரு வேலை நாளில் சந்தித்துப் பேசினேன். இலங்கை நிர்வாக சேவை தொடர்பாக தற்போதைய நடைமுறை குறித்து இவரிடம் இருந்து நிறைய அறிந்து கொண்டேன். அதிக நேரம் எடுக்காது மீண்டும் சந்திப்போம் என்று அவசரமாக விடைபெற்றேன். கையில் கமரா இருந்தும் அவரோடு ஒரு படம் எடுக்க நினைப்பு வராததால் என்னையே நான் திட்டித்தீர்த்தேன் பின்னர்.

சமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வலையுலகத்தைக் கலக்கும் சகோதரன் மதி சுதாவைச் (http://mathisutha.blogspot.com/) சந்திக்கும் வாய்ப்புத் தவறிவிட்டது, அடுத்தமுறை இவரைத் தான் முதலில் சந்திக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.

(சண்முகனோடு நான்)

வலையுலகத்தை விட இப்போதெல்லாம் ட்விட்டர் வழியாக நிறைய நட்புக்களும், சொந்தங்களும் கிட்டுகின்றன. அப்படி வந்து வாய்த்தவர் தான் அருமைத்தம்பி சண்முகன். @shanmugan10 என்ற ட்விட்டர் ஐடி வழி இவரைச் சந்திக்கலாம். இவரும் இன்னும் மாணவப்பருவத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்கின்றார். சிட்னியில் இருந்து யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரெலியா, கண்டி என்று நான் போகும் இடமெல்லாம் இவரும் வெற்றி எஃப் எம் வாயிலாக எனக்கும் பாட்டுக் கேட்டுக் குஷிப்படுத்துவார். கொழும்பு வந்ததும் சந்திக்கலாமா என்றார். பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலின் முகப்புத் திண்ணையில் அமர்ந்து நாட்டு நடப்புக்களைப் பேசினோம். நான் லுமாலாவில் சைட் அடிக்கக் கிளம்பிய காலத்தில் பிறந்த பையன் இவர். இந்தச் சின்ன வயதில் தாயகம் மீது இவர் கொண்ட நேசம் கண்டு உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தேன். எமது சந்திப்பு முடிந்ததும் கனத்த மனதோடு தான் வீடு திரும்பினேன், இவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அப்போது.

(நான், நடுவில் மருதமூரான், இடமிருந்து வலம் சேரன் கிருஷ்)

ட்விட்டர், வலையுலகம் வழியாக இணையும் உறவுகளோடு ஃபேஸ்புக் வழியாகக் கிட்டியவர் நண்பர் சேரன் கிருஷ். எனது கம்போடிய உலாத்தல் பதிவுகள் தான் என்னை இவருக்கு அறிமுகப்படுத்தி நட்பாக்கியது. நான் கொழும்பில் இருக்கும் போது பயணப்பதிவுகளை ஆரம்பித்தது கண்டு நாட்டில் இருந்தால் சந்திக்கலாமா என்றார். சேரன் கிருஷ் ஐயும் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலுக்கு அழைத்தேன் ஒரு நாட் காலைப் பொழுதில். அன்று சங்கடஹர சதுர்த்தி. சேரன் கிருஷ் பேரைப் பார்த்தால் ஆர்ப்பாட்டமான ஆளாக இருப்பார் என்று மனக்கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் மிகவும் அமைதியானவர் http://cherankrish.blogspot.com என்ற வலைப்பதிவு வைத்திருந்தாலும் அதிகம் எழுதாமல் மற்றவர்களை நிறையப்படிப்பவர் என்று இவரோடு பேசும் போது உணர்ந்து கொண்டேன். நாங்கள் இருவரும் மட்டும் தான் சந்திக்கப்போகிறோம் என்று நினைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் நண்பர் மருதமூரானும் வந்து இணைந்து கொண்டார். மருதமூரான் http://maruthamuraan.blogspot.com/ என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். இலங்கையின் அரசியல் விமர்சனங்களைத் தன் ஊடகவியலாளர் பார்வையோடு நேரில் பேசும் போதும்
சொல்பவர். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டில் ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றிப் பேச்சுவார்த்தை நடத்தும் போது இடையில் ஒரு அம்மா வந்து சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தார்.
“கொஞ்சமாப் போடுங்கோ அம்மா” இது மருதமூரான்
“கொஞ்சமாக் கேட்டால் கடவுள் கொஞ்சம் தான் தருவார்” இது அந்த அம்மா
சேரன் கிருஷ் ஐயும் மருதமூரானையும் சந்தித்த அந்த முதற் சந்திப்பும் அம்மா கொடுத்த சர்க்கரைப் பொங்கல் போல.

“அவன் இவன்” படத்தின் பிரீமியர் ஷோ கொன்கோட் தியேட்டரில் ஓடுதாம், வாழ்நாளில் முதற்தடவையாக பிரீமியர் ஷோவைப் பார்த்து ஜென்மசாபல்யம் அடைய எண்ணி கொன்கோட் இற்கு வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்குப் போனேன். பல்கனிக்குப் போகும் கியூவில் காத்திருந்தால் தியேட்டருக்கு உள்ளே இருந்து “அங்கை பார் கானா பிரபா” கேற்றுக்குள்ளால் குரல் வந்த திசையைப் பார்த்தால் அங்கிருந்து முன் அறிமுகம் இல்லாத ஒருவர். “நான் தான் அனுதினன்” என்று வந்த அவரோடு கூடவே நம்ம நிரூஜாவும். என் முகத்தைப் பார்த்து அடையாளம் கண்டு பேசிய அனுதினனோடு இன்னொரு சந்திப்புக் கிடைத்தால் நிறையப் பேச வேணும். ஆடுகளம் என்ற பெயரில் எழுதிவரும் அவரின் வலைப்பதிவு http://anuthinan0.blogspot.com/.

மூத்த ஊடகவியலாளர் சகோதரர் எழில்வேந்தன் அவர்களை ஒவ்வொரு பயணத்திலும் சந்திப்பது வழக்கம். இந்தமுறை அவர் தனது விடுமுறை நாளிலும் 2 மணி நேரத்துக்கு மேல் ஒதுக்கி என்னைத் தன் காரில் அழைத்துக் கொண்டு ஒரு தேனீர் விருந்தகம் சென்று இலக்கியம், நாட்டு நடப்பு எல்லாம் பேசி நிறைவான சந்திப்பை முடித்தோம். எழில் அண்ணா தனது தந்தையும் ஈழத்தின் மூத்த படைப்பாளியுமான கவிஞர் நீலாவணனின் படைப்பு ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

(பின்னே விமல் முன்னே லோஷன்)
சிட்னியில் தொடங்கி கொழும்பு, நுவரேலியா எல்லாம் பயணிக்கும் போதும் வெற்றி எஃப் எம் காதுக்குள் கூடவே வந்தது. குறுகிய காலத்தில் இலங்கையின் முன்னணி வானொலிகளில் ஒன்றாக இந்த வானொலி உயர்ந்திருக்கின்றது. இதற்குப் பின்னால் வானொலியின் இயக்குனராக விளங்கும் வாமலோஷன் என்ற லோஷனின் கடின உழைப்பும் அவருக்கு வாய்த்த நல்லதொரு வானொலிக் குழுமமும் தான். லோஷன் வானொலித்துறையில் தசாப்தம் கடந்து வெற்றிகரமாக இயங்கிவருபவர், வலையுலகிலும் இவரின் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்கலாம் http://loshan-loshan.blogspot.com/

வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமன்றி “எம்மால் முடியும்” என்ற சமூகப்பணி மூலமும் இந்த வானொலி புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றது. வெற்றி எஃப் எம் இணைய முகவரி http://www.vettri.lk/

லோஷனின் வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி எஃப் எம் நிலையக் கலையகம் செல்கின்றேன். அந்தக் கலையகத்தில் சுறுசுறுப்பாய் தேனீக்கள் போல உழைத்துக் கொண்டு தகவல்களைத் திரட்டிக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கான தயார்படுத்தல்களைச் செய்துகொண்டிருக்கின்றது இளைஞர் பட்டாளம் ஒன்று. கூடவே வெற்றி தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவும் இயங்குகின்றது. நேரடி அஞ்சல் பகிரப்படும் நிகழ்ச்சிக் கலையகம் சென்றால் நண்பர் விமல் பகல் பந்தி செய்து கொண்டிருக்கின்றார். கூடவே ஒரு பயிற்சி அறிவிப்பாளினி இருக்கின்றார். அங்கே சில நிமிடத்துளிகளைச் செலவழித்தவாறே நேரடி நிகழ்ச்சி நடைபெறும் அனுபவத்தை ரசிக்கின்றேன். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு என்பதை முழு நேரப் பணியாகக் கொண்டு இயங்குவது என்பது ஒரு பெரும் வரம்.

17 responses so far

Jun 23 2011

மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை

Published by admin under Uncategorized

சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், “முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்”என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம். எந்தவித ஆடம்பரமும் தரிக்காத நிலையில் கம்போடியாவில் கண்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலையில் இருந்த கோயில்களின் முகப்புப் போல இருந்தது. கோபுர வாயில் அடைக்கப்பட்டிருக்கின்றது. அருகே போகும் குருக்கள் வளவுக்குள்ளால் கோயிலின் உள்ளே நுழைகின்றோம்.

சோழ அரசன் திஸ்ஸ உக்கிரசிங்கனின் மகள் மாருதப்புரவீகவல்லி, கலைக்கோட்டு முனிவரின் சாபத்தினால் முகத்தில் ஏற்பட்ட குதிரை முகம் போன்ற விகாரம் நீங்க கீரிமலைத் தீர்த்தம் நீராட வந்தபோது முருகனுக்குக் கோயில் ஒன்று அமைத்தாள். சோழ இளவரசி தங்கியிருந்ததைக் கேள்விப்பட்ட ஈழத்தின் கதிரமலையை ஆட்சி செய்த உக்கிரசிங்கன் அவளைக் கவர்ந்து சென்று மணம் புரிந்தான். பின்னர் மாருதப்புரவீகவல்லியின் வேண்டுகோளுக்கிணங்க அவன் அந்த முருகன் ஆலயத்தை இந்தியாவில் இருந்து விக்கிரகங்களைத் தருவித்துக் கட்டினான். இவ்வாறு கந்தனின் விக்கிரகங்களைத் தருவித்த இடமே காங்கேசன் துறை எனவும், மாருதப்புரவீகவல்லி தெய்வீக அருளால் தன் குதிரை முகம் நீங்கப்பெற்ற இடம் மாவிட்டபுரம் (மா = குதிரை ) எனவும் அழைக்கப்பட்டது. கீரிமலை, காங்கேசன்துறை, மாவிட்டபுரம் உள்ளடங்கலான இடத்தைக் கோயிற்கடவை என்று அழைப்பார்கள். (தல வரலாற்றுக்குறிப்புக்கள் உசாவ உதவியது: கோபுர தரிசனம் கோடி புண்ணியம்)






ஆலயம் அமைதியில் திளைக்கின்றது. ஆலயத்தைச் சுற்றி நாம் வலம் வர, பித்துக்குளி முருகதாஸ் பாடத்தொடங்குகின்றார். முருகனைத் தவிர வேறெதையும் நினைக்கமுடியாமல் கட்டிப் போடுகின்றது. உட்பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வெளிப் பிரகாரத்தைச் சுற்றுகிறோம். அங்கே உருக்குலைந்த நிலையில் தேர் ஒன்று நிற்கின்றது. தென்னிலங்கையில் இருந்து வரும் “வானரங்கள்” இந்தத் தேரின் எஞ்சிய மரச்செதுக்குச் சிற்பங்களைப் பிடுங்கிக் கொண்டு போகின்றார்களாம், ஐயர் நொந்து கொண்டார். ஊருக்கு ஒரு திடீர்க் கோயில் என்று புதுசுபுதுசாக வந்து பவிசு காட்டிக்கொண்டருக்க, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் இன்னமும் திருத்தி அமைக்கப்படாத நிலையில் சோபை இழந்து நிற்கின்றது.



“நிலாவரைக் கிணறு பார்ப்போமா” என்றவாறே சின்னராசா அண்ணர் ஓரமாக ஆட்டோவை நிறுத்த எதிரே நிலாவரைக் கிணறு என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. யாழ்ப்பாணத்தில் என்றுமே வற்றாத கிணறு என்று சிறப்பைப் பெற்றது இந்த நிலாவரைக் கிணறு. அயற்கிராமங்களில் பயிர்ச்செய்கைக்காக இந்தக் கிணற்றில் இருந்து நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது ஒருகாலம். கிணற்றை அண்டி எதிரே இராணுவ அரண் ஒன்றும், பனக்கட்டிக் குட்டானை விற்பனை செய்யும் சிங்களவர் ஒருவரையும் காணலாம்.

நிலாவரைப் பகுதியில் இராணுவம் விஜய் நடித்த சிவகாசி படம் போடுதாம், இங்கேயும் விஜய் அவ்வ்வ்



என் வாழ்நாளில் முதற்தடவையாக வடமராட்சியின் பருத்தித்துறைப் பக்கம் போகும் த்ரில் ஓடு பயணிக்கிறேன். நீண்டதொரு வெட்டவெளி அது வல்லை வெளி என்று பிரகடனப்படுத்துகின்றது. எத்தனை எத்தனை சரித்திரங்களை இந்த வல்லைவெளி கண்டிருக்கும் இன்று தான் இதனை நான் காணுகின்றேன். பரந்த வெளியில் ஒரு சந்திப்பில் பிள்ளையார் குடியிருக்கின்றார். “முறிகண்டிப்பிள்ளையார் போல பிரசித்தி பெற்றவர் இவர், வந்து கும்பிடுங்கோ” சின்னராசா அண்ணர் ஆட்டோவை நிறுத்தி விட்டுச் செல்லப் பின்னே நாங்கள்.

அரசமரத்தைக் கண்டால் இரவோடிரவாகப் புத்தரைக் கொண்டு வந்து நட்டுவிட்டுப் போகும் கூத்து நடக்கின்றது. அதுவும் கடந்த இரண்டு வருஷமாகவே இந்த வேலை வெகு மும்முரமாக நடக்கின்றது. புத்தர் இப்போதெல்லாம் ஆக்கிரமிப்பின் சின்னமாக மாறிவிட்டதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இனவாதத்தின் மூலம் நாட்டு மக்களைத் தெருவுக்குக் கொண்டு வந்தவர்கள் புத்தரையும் நடுறோட்டுக்குக் கொண்டு வந்தது தான் அவலத்தின் உச்சம். பல இடங்களில், தகுந்த பராமரிப்பு இன்றிக் கைவிடப்பட்ட நிலையில் அரசமரத்தில் தீவிர நிஷ்டையில் இருக்கிறார்கள் புத்தர்கள். இதில் வேடிக்கையான சில விஷயங்களையும் அறிந்து கொண்டேன். இப்போதெல்லாம் நம் தாயகத்தில் எங்காவது அரசமரம் தப்பித்தவறித் தென்பட்டால் புத்தர் வருகைக்கு முன் ஒரு வைரவரை நட்டு விடுவார்கள் விண்ணர்கள். ஒரு இராணுவக் காவலரண் பக்கமாக இருந்த அரசமரப் புத்தர், அந்த இராணுவக் காவலரண் அகற்றப்பட்டதும் மாயமானார். பின்னர் அந்த அரச மரத்துக்குக் கீழ் பிள்ளையார் வீற்றிருக்கின்றார். இதெல்லாம் அங்கே கண்டதும் கேட்டதும்.

காங்கேசன்துறை வீதி என்பதை ஜம்புகோல படுன வீதி என்று தமிழில் பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டதையும் கண்டேன். (அதாவது சிங்களவருக்கு ஜம்புகோளப்பட்டுன என்றால் தான் காங்கேசன் துறை)


நெல்லியடியில் மகாத்மா தியேட்டர் அழிந்த நிலையில் இருக்கின்றது. அங்கே ஆட்டோவைத் தரித்துப் பேப்பர் கடையில் நாளிதழ்களை வாங்கிக் கொண்டே சூழவும் படங்கள் எடுத்தவாறே கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். இந்த றோட்டுப் பக்கம் இருக்கிற எல்லாக் கடைகளுமே முந்தி மகாத்மா தியேட்டர் முதலாளியினுடையது தான். இப்ப கடைகளை விற்றுவிட்டார்கள். தியேட்டரை மட்டும் விற்கமாட்டோம் ஞாபகமாக இருக்கட்டும் என்று முதலாளியின் பிள்ளைகள் சொல்லிவிட்டார்களாம். அந்த வாரிசுகளும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார் அந்தக் கடைக்காரர். தியேட்டரின் சுவரில் விடுதலைப்புலிகளின் காலத்தில் அவர்களின் நிதர்சனம் தயாரிப்பில் உருவான கேசவராஜனின் படம் ஓடிய சுவடு இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றது :-(
வடமராட்சிப் பகுதியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான வல்லிபுரக்கோயில் வந்து சேர்கின்றோம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வள்ளி நாச்சி என்ற பரதவர் குலப் பெண் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை அவளது வலையில் சக்கரம் ஒன்று சிக்கியதாகவும் அந்த சக்கரமே மூலஸ்தானத்தில் வைத்து வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்ற அதே வேளை விஷ்ணுவின் மச்ச அவதாரத்துடன் தொடர்புபடுத்தியும் ஆலய வரலாற்றைச் சான்று பகிர்கின்றது கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற ஈழத்துக் கோயில்களின் தரிசனம் தாங்கும் நூல்

ஆலயம் அன்று ஏதோ ஒரு விழாவை முன்னிட்டு சனக்கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. கோயிலில் நின்ற பக்தர் ஒருவரைக் கேட்டேன்.
“என்ன திருவிழா அண்ணை”
“என்னண்டு தெரியேல்லை” சேஃப்டிக்காகச் சொன்னாரோ தெரியேல்லை ;-)

கோயிலுக்குள் புகைப்பட, ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு போவது தடை என்ற அறிவிப்பு மிரட்டியது. கோயிலுக்குள் சென்று ஆண்டவனை மறந்து ஊர் உளவாரம் எல்லாம் அலசி ஆராயும் “பக்தர்கள்” இருக்கும் வேளை இந்தப் புகை, ஒளிப்படக் கருவிகளால் ஆண்டவனுக்கு எப்படிச் சினம் உண்டாகும் என்பது என் நூறு மில்லியன் டொலர், யூரோ, கேள்வி.

அருச்சனைச் சீட்டு, பழத்தட்டுடன் நீலப்பட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்தேன். “தட்சணை கொடுங்கோ” என்று ஐயராகவே முன்வந்து கேட்டது புதுமையாக இருந்தது. ஆலயத்தின் மணற்பரப்பில் கால்களை அளைந்தவாறே வெளிப்பிரகாரத்தில் நடந்தேன். நேரம் ஆகிவிட்டது.

10 responses so far

Jun 21 2011

காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்

Published by admin under Uncategorized


“சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ”
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.
லண்டனில் இருந்து வந்த அண்ணனுடன், சின்னராசா அண்ணரின் ஆட்டோவில் காங்கேசன்துறை வீதியால் பயணிக்கிறோம். வழியில் வலப்பக்கம் நான் ஆரம்ப வகுப்புப் படித்த சீனிப்புளியடி இணுவில் அமெரிக்கன் மிஷன் (இப்ப இணுவில் மத்திய கல்லூரி) , ஆங்கிலேயர் கட்டி யாழ்ப்பாணத்துக்கே பெருமை தரும் இணுவில் மக்லியேட் மருத்துவமனை எல்லாத்தையும் கண்டு கொண்டு பயணிக்கிறோம். இணுவில் மக்லியேட் மருத்துவமனையின் பிரசவப்பிரிவு அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் எல்லாத்திசைகளில் இருந்தும் மக்கள் வந்து மகப்பேறு பார்த்த பெருமை மிகு மருத்துவமனை. இப்பவும் “தம்பி! எந்த ஊர்?” என்று என்னிடம் கேட்டால் “இணுவில்” என்றதும் உடனே “நான் இணுவில் ஹொஸ்பிற்றலில் தான் பிறந்தனான்” என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.

இணுவில் காலிங்கன் தியேட்டர் , லங்கா சீமெண்ட் இன் களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெருந்தியேட்டர்களில் ஓடி, இரண்டாவது சுற்றில் காண்பிக்கப்படும் படங்கள் காலிங்கன் தியேட்டருக்கு வருவதுண்டாம். அந்தத் தியேட்டர் எங்கள் ஊரில் இருந்தாலும் தனியே படம் பார்க்கும் வயசு வந்த காலத்தில் காலிங்கன் தியேட்டர் அகதி முகாமாகத் தான் மாறியிருந்தது. சின்ன வயசில் அமெரிக்கன் மிஷனில் நான் படிக்கும் போது காலிங்கன் தியேட்டர் பக்கமிருந்து வரும் என் கூட்டாளிமார் கை நிறைய படச்சுருளின் துண்டங்களைக் கொண்டு வருவதுண்டு. ஆசையாக எடுத்து அந்த ஒற்றை றீலைப் பார்த்தால் தீபம் படத்தில் சிவாசியும் சுயாதாவும் சிரிச்சுக் கொண்டு நிக்கிற கோலம் தெரியும்.

காங்கேசன் துறை வீதியை ஒட்டிய இருமருங்கும் செம்பாட்டு மண் பரவிய தோட்டக்காணிகள், அந்தக் காலம் என்றால் இரண்டு பக்கமும் வெங்காயச் செய்கையும் புகையிலைத் தோட்டமுமாக ஒரே கல்யாணக் களை இருக்கும். இப்போது அந்தச் செம்பாட்டுக் காணிகளுக்குள்ளும் சீமெந்துக் கட்டிடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
“இப்ப பயிர் செய்ய ஆர் இருக்கினம் தம்பி? வெளிநாட்டுக் காசில சனம் சொகுசா வாழ விரும்புது” சின்ராசா அண்ணர் என் மனக்கணக்குக்குப் பதில் சொன்னார்.
அது ஒருபக்க நியாயம் என்றாலும், போர்க்காலத்திலும் வீறாப்புடன் பயிர் விளைவித்ததும் உண்டு, அந்தத் தலைமுறை ஓய்விடுக்க, அந்தப் பணியைச் சிக்கெனப் பற்றித் தொடர அடுத்த தலைமுறை இல்லாத வெற்றிடம் தான் மிக முக்கிய காரணம். ஒன்றில் அவன் போராடச் சென்று தன்னை மாய்த்திருப்பான், இல்லையெனில் ஊராடித் தூரதேசம் சென்று தன்னைத் தொலைத்திருப்பான். இப்போது தாயகத்தில் இளம் தலைமுறை என்பது வெறுமையாக்கப்பட்ட பாலைவனமாக அங்கொன்றும் இங்கொன்றுமான கூட்டமாகத் தான் இருக்கின்றது.

சுண்ணாகம், மல்லாகம் தாண்டி வந்து விட்டோம். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் பக்கமாகப் போகாமல் ஒரு குச்சுப்பாதையால் ஆட்டோவை விட்டார் சின்னராசா அண்ணை. இரண்டு பக்கமும் பற்றைக் காடுகள், காடுகளுக்குள் வீடுகள் அல்லது வீடுகளுக்குள் காடுகள். மாவிட்டபுரப் பக்கமாக உள்ள பாதையை அளந்தது ஆட்டோ. இவையெல்லாம் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின்னர் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த 1990 ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த ஆண்டின் ஆரம்பம் வரை, அதாவது 21 வருஷங்கள் முழுமையாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இலங்கை இராணுவம் மட்டுமே நிலை கொண்டிருந்த பகுதி. இப்போது தான் மெல்ல மெல்ல மிதிவெடிகள் அகற்றப்பட்டு மக்களின் மீள் குடியேற்றங்களுக்காகக் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்படுகின்றன. இன்னும் சில பகுதிகளில் நீண்ட சிவப்பு நாடாக்களில் “மிதிவெடி அபாயம்” தொங்கிக் கொண்டிருக்கின்றது. மிதிவெடி அகற்றும் குழு ஒன்று கொட்டகை அமைத்திருந்தது. இதையெல்லாம் கடந்து போனோம்.


ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரும் மாவிட்டபுரம் பகுதி, 1990 இல் இருந்தே தன் நிலபுலங்களைத் தொலைத்து விட்டு இணுவில் வாசியாக மாறிவிட்டவர்.
“தம்பி! அங்கை பாரும் அந்தக் புதருக்குள்ள தான் என்ர தங்கச்சி வீடு, பின்னால என்ர வீடு இருக்கு”
சின்னராசா அண்ணர் காட்டிய பக்கம் பார்த்தால் ஒரே பச்சைப் பசேலென்ற புதர் மண்டிய மரங்களின் நெருக்கம் தான் தெரிந்தது.
“ஓமானில நான் உழைச்சுக் கட்டின வீடு, அந்த நாளேலையே பெரிய இராணி வீடு மாதிரி இருக்கும், இப்ப எல்லாம் உருக்குலஞ்சு இருக்கு. காணியைத் திருத்தவே பல லட்சம் வேணும்” என்றார் சின்னராசா அண்ணை. இதையெல்லாம் வெட்டித் திருத்த ஏலாது, எல்லாத்தையும் மிதித்து, அள்ளிப் போட மிஷின் பொருத்திய பார ஊர்தி தான் உதவும் என்று நினைத்துக் கொண்டேன்.
“ஒரு பரப்புக் காணி திருத்த எட்டாயிரம் ரூவா கேக்குறாங்கள், அரசாங்கம் வீடு கட்டப் பாதிக் காசு குடுக்குது” சின்னராசா அண்ணர் தொடர்ந்தார்.
“அப்ப இந்தியாவும் ஏதோ கட்டிக்குடுக்கிறதா சொன்னதே?” அவரின் வாயைப் புடுங்கினேன்.

“சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்பாதையும், உலகவங்கியின்ர காசு தான் இப்ப இதுக்கெல்லாம் உதவுது, இந்தியன் கவுன்மென்ற் பேப்பரிலை போடுறதுக்கு மட்டும் தான் வீடு கட்டிக் கொடுக்கிறதா அறிவிக்கும் அவ்வளவு தான்”.

இப்போது இந்தப் பகுதிகளில் மக்கள் மெல்ல மெல்லக் குடியேற ஆரம்பிக்கிறார்கள். 21 வருஷங்களாக இங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் மற்றைய பகுதிகளில் இயங்கிய பாடசாலைகள் மீளவும் தம் இருப்பை நோக்கி நகர்ந்திருக்கின்றன. மாதங்கள் பல கடந்த நிலையில் மக்களின் மீள் குடியேற்றம் என்பதும் மிகவும் மந்த கதியில் தான் இருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள். மீளவும் காணி, வீட்டைத் திருத்த எதிர் கொள்ளும் பெருஞ் செலவினம் என்று ஒதுங்கிக் கொள்வோர் ஒருபக்கம், குடும்பமாக வெளிநாடு சென்றோர் ஒருபக்கம் அல்லது குடும்பமாகப் பரலோகம் சென்றோர் ஒருபக்கம் என்ற நிலை. இப்படியான வெறுங்காணிகளை அப்படியே விட்டுவைத்தால் இவையும் ஸ்வாகா ஆகிவிடுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

“அங்கை பாரும் கூத்தை” சின்னராசா அண்ணர் கைகாட்டிய தொலைவில் பாரிய அகழியாக சுண்ணாம்புக்கல் தோண்டப்பட்ட சுவடுகள் காங்கேசன் துறைப்பக்கம் தென்பட்டது. ஒருகாலத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் இயங்கிய போது இப்படிச் சுண்ணாம்புக்கல்லை அகழ்ந்தெடுக்கும் வேலைகள் இருந்தது. பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயங்காத நிலை வந்த போது தென்னிலங்கையின் அதிபுத்திசாலி அரசு இங்கிருந்து அகழப்படும் சுண்ணாம்புக்கற்களைத் தென்னிலங்கைக்கு அனுப்பி அங்கே உள்ள சீமெந்துத் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தியதாகச் சொல்வதுண்டு. இப்போது கேட்க நாதியில்லாத நிலையில் இந்தியாவால் இந்த மண் வளம் சுறண்டப்பட்டு நாடுகடத்தப்படுகிறதாம். இந்த விபரீதத்தின் விலை எதிர்காலத்தில் மிகப்பயங்கரமானது. காங்கேசன் துறைய அண்டிய கடல் நீர் மெல்ல மெல்ல உள்வாங்கப்பட்டு, பழிவாங்கப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழ்ந்த பிரதேசம் எல்லாம் நீராய் மாறும் நிலை உருவாகப்போகின்றது. யார் இதைக் கேட்பது? யாரிடம் இதைச் சொல்வது?

கீரிமலைக்கு வந்தாச்சு. மணி ஆறேமுக்காலைக் காட்டியது. நான், அண்ணன், சின்னராசா அண்ணை இவர்களைத் தவிர ஒரு குருவி இல்லை. முன்னால் ஒரு ஆமிக்காறன். எங்களை அவன் அளவெடுத்துப் பார்க்க, கீரிமலைக் கேணிப்பக்கமாக நடக்கின்றோம். இப்போது எங்களுக்குப் பின்னால் கண்காணிக்க இன்னொரு ஆமிக்காறன். கேணிக்குள் கொஞ்சப்பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருகாலத்தில் கீரிமலை பஸ் என்று இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தின் சிவப்பு பஸ் சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களில் இருந்து சனத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கீரிமலையில் வந்து கொட்டும். சனம் எல்லாம் குழந்தைகளாக மாறிக் கேணிப் பக்கம் ஓடுவதும் கடலில் பாய்வதுமாக ஒரே கொண்டாட்டம் தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு இருந்த நீச்சல் குளியல்களில் ஒன்று கீரிமலை மற்றது கசூரினா கடற்கரை. கீரிமலையில் குளித்து விட்டு மண்டபத்தில் வறுத்த கச்சானைக் கொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். கூவில் பனங்கள்ளுத் தேடிப் போகும் இன்னொரு பகுதி.

“அந்தா அந்த பொந்துக்குள்ளை ஓடிப் போய் ஒளிச்சிடுவார் எங்கட அப்பா” அண்ணன் காட்டிய திசை கீரிமலைக் கேணிக்குள் இருக்கும் ஒரு பகுதி.
“இந்தக் கேணிக்குள்ள நல்ல நீர் ஊத்தும் இருக்கு” இது சின்னராசா அண்ணை”

“எங்கட அப்பா தன்ர இடுப்புப்பக்கமா முன்னுக்கு இருத்தி நீச்சல் பழக்கிக் காட்டுவார்” அண்ணன் பழைய நினைவில் மூழ்கிப்போனார்.

கீரிமலை, சுற்றுலாப்பயணிகளுக்கான ஸ்தலமாக மட்டுமன்றி இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன் தீர்க்கும் பெரும் தலமாகவும் விளங்கிவருகின்றது. எங்கள் ஊரில் இறந்த ஒருவரின் பிதிர்க்கடன் தீர்க்கவெண்ணிக் கீரிமலை புறப்பட்டு சுனாமியால் ஐந்து பேர் காவு வாங்கப்பட்ட செய்தியும் உண்டு.

ஆமிக்குளியல்

சாவகாசமாக நாங்கள் கீரிமலைக் கேணியையும், கடற்கரையையும் படமெடுத்துக் கொண்டிருக்க எங்களுக்கு முன்னால் குளித்த ஈர உடம்புடன் ஒருத்தர் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.
“நான் 1990 ஆம் ஆண்டு இந்தப் பகுதிக்கு இராணுவப் படையுடன் வந்தவன், இடையில் சில வருஷங்கள் வேறு பகுதிகளுக்கும் போய் இருக்கின்றேன். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் 14 வருஷங்கள் கடமையில் இருந்திருக்கின்றேன்” என்று சொன்ன அந்த இலங்கை இராணுவ உயர் அதிகாரி இப்போது Lieutenant தரத்தில் இருப்பதாகச் சொல்லி, “உள்ளே நீச்சல் அடிப்பவர்கள் எல்லோருமே இராணுவத்தினர் தான்” என்றவாறே எங்களை விசாரித்து விட்டு அனுப்பினார்.

அங்கிருந்து நகர்ந்து கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் செல்கிறோம்.

ஜமத்த முனிவர் தன் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்ய முடிவு செய்து அதைச் சிறப்பாக நடத்தித் தரும்படி தன் குருநாதர் பிருகு முனிவரிடம் கேட்டார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவாறு வியாசமுனிவர் ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குப் போனார். ஆசாரியார்களில் முதன்மையான வியாசமுனிவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமே என்று ஜமத்த முனிவர் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிரார்த்தம் தாமதமாகியது. சீடன் தன்னை அழைத்துச் செல்ல வராததைக் கண்ட பிருகு முனிவர் கீரி உருவம் எடுத்து ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குள் புகுந்தார். அங்கு தன்னிலும் உயர்ந்த வியாச முனிவர் இருப்பதைக் கண்டார். சிரார்த்தத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பதார்த்தங்கள் அனைத்தையும் கீரிமுகத்தில் இருந்த பிருகு முனிவர் எச்சில்படுத்திய பின் “இனி உனக்குக் கீரி முகம் உண்டாகட்டும்” என்று ஜமத்த முனிவரைச் சபித்தார். பின்னர் கோபம் தணிந்த நிலையில் கீரிமலையில் உள்ள வாவியில் மூழ்கித் தம்பேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன் கீரிமுகம் நீங்கும்” என்று சாப விமோசனம் கொடுத்தார். பிதிர்க்கடனுக்கான உணவுப்பதார்த்தங்கள் எச்சில்படுத்தப்பட்ட நிலை கண்ட வியாசரும் ஜமத்த முனிவருக்கு “உனது குலம் இனி இல்லாமல் போகும்” என்று சாபமிட அவர் கீரி முகம் கொண்ட முனியாக அதாவது நகுல (கீரி) முனியாக மாறிப்போனார். (வரலாற்றுக்குறிப்புக்கள் உதவி: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நூலில் இருந்து)




ஈழத்தின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகக் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் போற்றப்படுகின்றது.
நாம் சென்றிருந்த வேளை கோயில் பூட்டப்பட்டிருந்ததால் ஆலயத்தின் உள்ளே செல்ல முடியவில்லை.

மேலே இருக்கும் படம் என்ன சொல்லுது என்று க்ளிக்கிப் பாருங்கள்

கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சூழவும் உள்ள ஆலயப்பகுதி இன்னும் இடிபாடுகளுடன் இருக்கின்றது. அமைதியான அந்தச் சூழலைக் கால் அளந்து விட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை நோக்கிப் பயணிக்கின்றோம்

6 responses so far

Jun 18 2011

யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்

Published by admin under Uncategorized

“தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே”
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.

“பிரபு அண்ணை” இன்னொரு குரல் வரும் திசையைப் பார்க்கிறேன். என்னைக் கடந்து போகிறது எனது நண்பன் ஒருவனின் தம்பியின் குரல். சிரித்தவாறே கையைக் காட்டி விட்டு நடக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தில் பழமையைப் பேணும் அம்சங்களில் யாழ்ப்பாணத்து றோட்டுகளுக்கும் தனி இடம் உண்டு. எக்காலத்திலும் , எக்கேடு கெட்டாலும் பழைய தார்ச்சுவடு மாறாதவை. முன்னர் ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் வந்த கேலிச்சித்திரம் நினைவுக்கு வருகின்றது. கொழும்பில் இருந்து வந்த ஒருவர் பெருமையாக “கொழும்பு றோட்டில் எல்லாம் சோறு வைத்துச் சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம்”
பதிலுக்கு யாழ்ப்பாணத்தவர் “இது என்ன பெருமை, எங்கள் ஊர் றோட்டில் சோறு போட்டு , சொதியும் நிரப்பித் தின்னலாம்” என்பார். குண்டும் குழியுமான யாழ்ப்பாணத்து றோட்டுக்களைப் பற்றி அவர் சிலேடையாகச் சொன்னது அது.

றோட்டுப் போடுகிறேன் பேர்வழி என்று தார்ச்சாலைகளின் குழிகளை மட்டும் குறிவைத்து நிரப்பி மூடுகிறார்கள், அது அடுத்த மாரிமழையோடு வெள்ளத்தில் சங்கமமாகிவிடும். ஒருநாள் காரை நகர்வீதியால் பயணிக்கவேண்டி இருந்தது. திருஷ்டிக்கழிப்பாக நீண்ட கார்பெட் வீதி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்துத் தெருக்களை இப்போது கன ரக வாகனங்களில் இருந்து ஓட்டோக்கள் வரை நிரப்பி வைத்திருக்கின்றன. முன்னரெல்லாம் லுமாலா சைக்கிளே போதும் என்றிருந்த பெண்களும் வெளிநாட்டுப்பணம் மகிமையில் சிறு ரக மோட்டார் சைக்கிளில் பவனி வருவது சர்வசாதாரணம். ஏ/எல் எடுத்துவிட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்குமா என்று ஏங்கும் மாணவ சமூகம் கூட இப்போது மோட்டார் சவாரியில் தான் பெரும்பாலும். இதே பருவத்தில் இருந்தபோது ஒரு சைக்கிள் வாங்க முன்னர் நான் போராடியதை நினைத்துப் பார்த்தேன். வாடகைக்கார் என்றால் இன்னமும் மொறிஸ் மைனரும், A40க்களும் தான் தனிக்காட்டு ராஜாக்கள்.

குண்டும் குழியுமான பாதைகளின் கரைப்பகுதியை அண்டி மினி பஸ்களும் வளைந்து நெளிந்து டிஸ்கோ ஆட்டம் காட்டி ஓடுகின்றன. யாழ்ப்பாணத்துக்கும் காங்கேசந்துறைக்குமான அரச பஸ் சேவை இலக்கம் 769 மற்றைய சேவைகளை விட எப்போதும் இலாபம் தரக்கூடியதாக அன்றும் இன்றும் இருந்தாலும் அந்த றோட்டால் வந்தால் குடலை உருவி மாலையாகப் போட்டு விடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு தனியார் மினிபஸ் மூலம் ஒருமுறை பயணம் மேற்கொள்ளுவோம் என்றெண்ணி கோண்டாவிலில் பஸ் பிடிக்கிறேன். கிட்டதட்ட 18 வருஷங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஒரு பஸ் பயணம் என்ற த்ரில் வேறு.

“அண்ணை அங்க ஒரு இடைவெளி இருக்கு அதுக்குள்ளை போங்கோ” என்னை ஏற்கனவே நெரிசலில் அல்லாடிக்கொண்டிருக்கும் மினிபஸ் உள்ளே நெட்டித்தள்ளுகிறார் பஸ் நடத்துனர். உள்ளே ஒரே ஒரு காலை வைக்கக்கூடிய நிலையில் சலங்கை ஒலி கமலஹாசனாக மாறி தகிட ததிமி தகிட ததிமி தம்தானா நிலையில் நான், தாவடிச்சந்தியில் நான்கு பேர் ஏறுகிறார்கள்/அல்லது ஏற முனைகிறார்கள். “அண்ணை பொம்பிளை ஆட்கள் ஏறினம் ஒருக்கால் இறங்கி வழிவிடுங்கோவன்” என்னையும் பக்கத்தில் நின்றவரையும் குறிவைக்கிறார் நடத்துனர். உள்ளே எந்த வித ஆசுவாசமும் இன்றி எண்பதுகளில் வந்த இளையராஜாவை ரசித்துக் கொண்டிருக்கிறார் பஸ் ஓட்டுனர். நாலுபேர் இறங்கி நாலு பேரை ஏற்றி விட்டு இப்போது புட்போர்ட் இல் பயணிக்கிறோம். கொக்குவில் சந்தியில் மூன்றுபேரைக் கண்டதும் இன்னொரு புதையலைக் கண்ட ஆசையில் நடத்துனர் “அண்ணை கோல்ட் ஓன்” என்று நிறுத்த, பஸ்ஸுக்குக்கு காத்திருந்த கூட்டம் “இல்லைப் பறவாயில்லை அடுத்த பஸ்ஸில் வாறம்” என்று ஜாகா வாங்க தப்பினோம் என்று தாவுகிறோம். நடத்துனரை வழியில் விட்டுவிட்டு பஸ் பாய்கிறது. துரத்தி ஓடிவந்து புட்போர்ட் இல் ஒற்றைக்கால் பதித்து நடுவிரல்களில் இருக்கும் பண நோட்டுகளைச் சரி பண்ணியவாறே
உள்ளே தலை நீட்டிப் பயணிகளிடம் கறந்துகொண்டே,” அம்மா பின்னாலை போங்கோ, அக்கா அந்த ஓடைக்குள்ளை தள்ளி நில்லுங்கோவன்” என்கிறான், எனக்குத் தெரியும் இவன் பாவி நாச்சிமார் கோயிலடியில் இன்னொரு கூட்டத்தை ஏற்றத்தான் இப்பவே திட்டம் தீட்டுகிறான். “அண்ணை முன்னுக்காத் தள்ளுங்கோவன்” என் முதுகில் நெட்டித்தள்ளுகிறான்.எரிச்சலும் கோபமும் வர “அண்ணை இனி எங்க தள்ளுறது” என்றவாறே புறக்கணிப்பு அரசியலில் இறங்கினேன். பைசாக்கோபுரம் சாய்ந்தவாறே நகர்வது போல நிரம்பி வழிந்த பயணிகளால் அழுதுகொண்டே பயணிக்கிறது பஸ். இந்த பஸ்ஸை உருவாக்கிய ஜப்பான்காரன் கண்டால் பெருமையாக இருக்கும் 75 பேர் பயணிக்கும் பஸ்ஸில் 200 பேரை ஏற்றி பஸ்கம்பனிக்கே பெருமை கொடுக்கிறார்கள் இந்த மினிபஸ்காரர். இந்த நிலை மினிபஸ் யாழ்ப்பாணத்தில் வந்த கல் தோன்றி முன் தோன்றாக்காலத்தில் இருந்து இருக்கிறது. மூட்டுவலி, மசாஜ் போன்ற நோய் நொடிகளுக்கு இந்த பஸ் பயணம் அருமருந்தாக அமையும் வண்ணம் உடம்பை எல்லாப்ப்பாகத்தில் இருந்தும் நெருக்கும் சிலவேளை நொருக்கும். அடுத்தமுறை காய்ஞ்சோண்டி இலைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் இந்த நடத்துனரைப் பழிவாங்கலாமா என்று நினைத்தேன்

யாழ்ப்பாணத்தில் இருந்து அரச சேவை பஸ்கள் இப்போது கண்டி, ஹற்றன் உட்பட நாட்டின் மற்றைய பாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. இடமாற்றம் கண்ட ஆசிரியர்கள் போன்ற அரச உத்தியோகத்ததுருக்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயிலைக் கொண்டுவருவதற்கான வேலைகள் இறக்கவிடப்பட்டிருக்கின்றன. இதுவரை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை பயணிக்கும் இந்த ரயில்சேவை 1990 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இயங்காமல் இருக்கின்றன. தண்டவாளக்கட்டைகள் பதுங்கு குழிகளுக்குப் போர்க்காலத்தில் பயன்பட, ரயில் நிலையங்கள் அகதிகளுக்கான புகலிடங்களாக மாறி விட்டன. இந்த நிலையில் இப்போது மீண்டும் இந்த ரயில்சேவை வரப்போகின்றது என்றால் அதற்குச் சவாலாக ஒரு செய்தி காதில் அடிபடுகின்றது. இந்த ரயில்ப்பாதைகளைக்கான உதவியை இந்தியாவும், சீனாவும் நான் முந்தி நீ முந்தி செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாம். “ஆகா உதவி செய்ய இப்படியும் போட்டியா” என்று ஆவென்று வாய் பிளக்காதீர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஆப்படிக்கும் சில திட்டங்களைக் கண்டேன் அதுபற்றிப் பின்னர் சொல்வேன்.

எனது ஊர்ச்சுற்றலுக்கு ஒரு சைக்கிள் தேவை என்று கருதி யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த மினிபஸ் இல் இருந்து வின்சர் தியேட்டர் பக்கம் இறங்கி, வெங்கடேஸவரா சைக்கிள் வாணிப நிலையம் செல்கிறேன். புது லுமாலா , கழுவி சேர்விஸ் பண்ணித்தர 12 ஆயிரம் ரூபாயாம். நாளை தரலாம் என்றார்கள். பணத்தைக் கட்டிவிட்டு வந்தேன்.

ஆயிரத்து ஐநூறு ரூபா மாதச்சம்பளத்தில் சேமிப்புக்கணக்கு, வீட்டுச் செலவுக்கணக்கு எல்லாம் போக மிச்சமிருக்கும் பணத்தில் ஆயிரம் கணக்குப் போட்டு வாழ்ந்த ஒரு வாத்தியார் வீட்டுப்பிள்ளை நான். அந்தக் காலத்தில் நான் ஏஷியா சைக்கிள் ஒன்றைப் புதுசாக வாங்கிவிடவேண்டும் என்பது பொல்லாதவன் படத்தில் தனுஷ் கண்ட மோட்டார் சைக்கிள் கனவை விடப்பெரியது. இதை வச்சு “ஒரு சைக்கிளின் கதை” என்றெல்லாம் அந்தக் காலத்தில் கிறுக்கியிருக்கிறேன். இப்போது என் சொந்த சம்பாத்தியத்தில் , தாயகத்தில் 21 வருஷம் கழித்து நிறைவேறியிருக்கின்றது இந்தக் காலம் கடந்த கனவு. இடைப்பட்ட காலத்தில் என் புலம்பெயர் வாழ்வில் இரண்டு புதுக்காரைக் கூட வாங்கி விட்டேன். அதில் கிடைக்காத திருப்தி இதில் கிடைத்தது மாதிரி.

சைக்கிள் கடையில் காத்துபோன சைக்கிள் ஒன்று

அடுத்த நாள் முதல் லுமாலாவில் சுற்றத்தொடங்கினேன். நீண்ட தூரப்பயணங்களுக்கு மட்டும் ஆட்டோப் பயணம். அப்படி ஒரு நீண்ட தூரப் பயணத்தை நான் சந்தித்தபோது…..

26 responses so far

Jun 16 2011

விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்

Published by admin under Uncategorized

கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன். வழக்கமாக ஒரு 10 நாட்களுக்குள் என் பயணத்தை முடித்துக் கொள்பவன் முதன்முறையாக 3 வாரங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு எங்களூர்ப்பிள்ளையார் கோயில் திருவிழாக்காண ஏற்பாடுகளைச் செய்கின்றேன். அப்போதுதான் வழக்கத்துக்கு மாறாகப் புதிய ஒரு நடைமுறையைப் பின்பற்றவேண்டி வந்தது.

அது யாழ்ப்பாணத்துக்குப் போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் M.O.D clearance எனப்படும் இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொண்டு செல்லவேண்டும் என்பது. வெளிநாட்டுக்குப் போனகாலத்தில் இருந்தே என் சுயத்தை இழக்கவேண்டிய அவஸ்தையோடு காலத்தை நகர்த்திவரும் எனக்கு , நான் பிறந்த மண் எனக்கு இனி அந்நியதேசம் என்று முகத்தில் அடிப்பது போல இருந்தது இந்த விஷயம். யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வருஷங்களுக்கு முன் கொழும்புக்கு நகர்ந்த போதும் இப்படியான ஒரு சூழ்நிலை இருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக யாழ்ப்பாணம் இருந்தபோது வயசுக்கட்டுப்பாட்டுக்காரன் என்ற எல்லைக்குள் இருந்ததால் புலிகளின் அனுமதியைப் பெற ஒருவரைப் பிணையாக வைத்து ஊர் கடக்க வேண்டி இருந்தது.

நீண்ட வருஷப் பயணங்களுக்குப் பின்னர் இப்போது இந்த ரூபத்தில். கன்பராவில் இயங்கும் சிறீலங்கா தூதுவராலயத்தின் இணைப்பக்கம் சென்று இராணுவ அனுமதிப்பத்திரத்தைத் தரவிறக்கி அதை நிரப்பி, என் பாஸ்போர்ட் பிரதியோடு ஸ்கான் பண்ணி மீண்டும் இராணுவ அனுமதிக்கான மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுகிறேன். இரண்டு நாளில் அனுமதியை பஃக்ஸ் மூலம் அனுப்புகிறார்கள். இருந்தாலும் ஓமந்தைச் சாவடியில் வைத்து இது மூலப்பிரதி அல்ல என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் காலிமுகத்திடலில் உள்ள இராணுவ அமைச்சகத்துக்குச் சென்று மூலப்பிரதியைக் கேட்டு வாங்கி வந்தேன்.
என் பாஸ்போர்ட்டோடு ஒட்டிக்கொண்ட காதலியாகக் கூடவே பயணித்தது இந்த இராணுவ அனுமதிப் பத்திரம். போர்ச்சூழல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்படியான நெருக்கடிகளோ நடைமுறைகளோ வரும்போது நம்மவர்கள் சளைக்காது சைக்கிள் கேப்பில் கிடாய் வெட்டுவார்கள். இந்த நடைமுறையையும் ஒரு கூட்டம் வகையாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு முழு நேரத் தொழிலாகச் செய்கிறது என்ற உண்மையைப் பின்னர் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் யாழ்ப்பாணத்துக்குப் புறப்படப்போகும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது விபரத்தையும் பாஸ்போர்ட் பிரதியையும் இந்தத் திடீர் வியாபாரிகளிடம் கொடுத்தால் அவர்களே முகவர்களாகச் செயற்பட்டு இராணுவ அனுமதியைப் பெற்றுக் கொடுப்பார்களாம். இதொன்றும் சும்மா பிரைவேட் லிமிட்டெட் இன் சேவை அல்ல, எனக்குத் தெரிந்த உறவினர் இந்தமாதிரி முகவர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்து நான்கு பேருக்கான அனுமதியைப் பெற முடிந்ததாம். இது ஆரம்ப கட்டம் என்பதால் விலை குறைவு, காலைப்போக்கில் முகவர்கள் விலைவாசி ஏற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்டணத்தை அதிகரிக்கலாம் ;)

இந்த நேரத்தில் ஒரு விஷயம், இந்த M.O.D clearance ஐ யாழ்ப்பாணம் போவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கிழித்துப் போட்டுவிடாதீர்கள். கொழும்பு திரும்பும் போதும் இந்த அனுமதியைக் காட்டித் தான் உள் நுழைய முடியும்.

சரி, அடுத்தது என்ன? யாழ்ப்பாணப்பயணத்துக்கான தகுந்த தனியார் பஸ்ஸைத் தேடவேண்டும். இரவு 7.30 இற்குக் கொழும்பில் இருந்து புறப்படும் பஸ் காலை 6.30 மணிக்குத் தான் யாழ் மண்ணை வந்தடையும். உங்கள் கஷ்டகாலத்துக்கு ஒரு லவுட்ஸ்பீக்கர் பஸ்காரனிடம் அகப்பட்டால் காலை யாழ்ப்பாணம் வந்ததும் காது கிழிந்து ஹலோ சொல்லும். அவ்வளவுக்குச் சத்தமாகப் படங்களைப் போட்டு உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். குளிரூட்டப்பட்ட பஸ்கள் என்று சொல்வதால் இறைச்சியைப் பதனிடும் கடும் குளிர் அளவுக்கு உயர் குளிர் எல்லையில் வைத்துவிடுவார்கள். “ஏஸிக்குக் காசு குடுத்தனாங்கள் எல்லோ? கொஞ்சம் உண்டெனப் போடுமன்” என்று சனங்கள் கேட்குமோ என்னவோ. ஒவ்வொரு முறைப் பயணத்திலும் ஒரு குளிருக்கு உகந்த கம்பளி உடையோடு நான் பயணிப்பது வழக்கம். கடந்த வருஷத்தின் மோசமான அனுபவத்தில் இந்த முறை தகுந்த பஸ்ஸைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயற்பட்டேன். Avro என்ற பஸ் சேவை நான்கு புதிய சொகுசு பஸ்களை எடுத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த பஸ்ஸிலேயே பயணிக்க முடிவு செய்து பதிவு செய்து கொண்டேன்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் சேவை அருமையாக இருந்தது, இரவு 10 மணிக்கெல்லாம் சமர்த்தாக டிவியை நிறுத்திவிட்டார்கள். ஏஸியும் அளவாகப் போட்டார்கள். ஆனால் யாழில் இருந்து திரும்பி வந்த பஸ்ஸில் இதற்குப் பரிகாரமாகப் பயங்கரமாகப் பழிவாங்கிவிட்டார்கள். இளைய தலைவலி விஜய் இன் உலகத்தரப்படங்கள் போக்கிரி, சுக்கிரன், சுறாவை அலறவைக்கும் சத்தத்தில் போட்டு மவனே இனி வருவியா என்று மிரட்டுமளவுக்குப் பண்ணிவிட்டார்கள். கொழும்பில் இருந்து யாழ்போன பயணம் இனிதாக அமைந்தாலும் பக்கத்தில் ஒரு சனீஸ்வரன் உட்கார்ந்து ஊரெல்லாம் ஃப்ரீ கோலில் அழைத்துச் சத்தமாகப் பேசிக்கொண்டு வந்தார்.

கிட்டத்தட்ட எட்டுப்பேரின் நித்திரையைக் கலைத்துக் கடலை போட்டிருப்பார் இந்த மனுஷர். கூடவே ஒரு அழைப்பில் “எடியே என்னைத் தெரியேல்லையே” என்று திரும்பத்திரும்பக் கேட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பின் தான் “சொறி றோங் நம்பர் போல” என்று சொல்லிக் கொண்டு அடுத்த கடலைக்குத் தயாரானர் இந்த விக்கிரமாதித்தன்.

பஸ் பயணத்தில் ஓமந்தை இராணுவச்சாவடி கடந்து முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் தரிக்கின்றது. கை, கால், முகம் அலம்பிப் பிள்ளையாரைச் சந்திக்கச் செல்கிறேன். செருப்பில்லாத வெறுங்காலோடு குருமணற் துகள்கள் கிசுகிசுக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு பிள்ளையாரை நேருக்கு நேர் சந்திக்கின்றேன். அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு
“யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்” அந்தச் சத்தம் வந்த திசையைப் பார்க்கின்றேன். பயணி ஒருத்தரின் செல்போனின் ரிங் டோன் தான் அது. ரொம்ப முக்கியம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறுகிறேன். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கிறது மனசு.

21 responses so far

Next »