Mar 01 2012

ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன்

Published by admin under Uncategorized


“சொல்லுங்க, நீங்க இப்ப என்ன பண்ணீட்டிருக்கீங்க”
“ஏ எல் எடுத்து வீட்டில சும்மா இருக்கிறன் அக்கா”

மேற்சொன்ன சம்பாஷணையை வழக்கமாக இலங்கையின் வானொலிகளைக் கேட்பவர்கள் நிதமும் கேட்கும் அம்சமாக இருக்கும். ஆண்டாண்டுகள் கடந்தாலும் அறிவிப்பாளர்களும் இந்தச் சம்பிரதாயபூர்வமான கேள்வியை விடமாட்டார்கள், கலந்து கொள்ளும் நேயர்களில் மேற்குறிப்பிட்ட தரப்பினரும் இதே மாமூல் பதிலையே பெரும்பாலும் உதிர்ப்பார்கள். இப்படித்தான் அன்று ஒரு தனியார் வானொலியில் வந்த சம்பாஷணையைக் கேட்டபோது தாயகத்தின் அந்த ஏ.ஏல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருந்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.

ஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம். அதில் தோற்றால் விரும்பாத துறைகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் காலம் முழுவதும் தள்ளவேண்டும் என்ற கொடுப்பினை. அதனாலேயே இந்த ஏ.எல் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலமாக அமைந்து விடும்.

ஓ.எல் எடுத்த கையோட,றிசல்ட்ஸ் வருகுதோ இல்லையோ நான் சயன்ஸ் தான் படிப்பன் எனக்கு பயோ (Bio Science) தான் படிப்பன் என்று பெண் பிள்ளைகளும், “நான்தான் பொயிலைக் கண்டுகளுக்குள்ள மல்லாடுறன் நீயாவது இஞ்சினியரா வரப்பார்” என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக தேப்பன்காரன் சொன்ன வேதவாக்கில் கணிதபாடத்துறையில் பெரும்பான்மை ஆண் சமூகம் முடிவெடுத்துவிடும். இலக்கியவெறி கொண்டு நளவெண்பாவைப் பாடமாக்கியும் (பின்னாளில் காதலுக்கு உதவும் எண்டு தான்) சுஜாதா, செங்கை ஆழியானைக் கடவுளர்களாகக் கொண்டாடி அலைந்த எங்களுக்கு இருக்கவே இருக்கு கொமேர்ஸ் அல்லது ஆர்ட்ஸ்.
ரியூஷன்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
“ஓ.எல் எடுத்த மாணவர்களே உங்களுக்கான வாசல் திறந்திருக்கிறது, ஏ.எல் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பம்” என்று ஊரில் ஒரு மதில் விடாமல் ஒட்டித் தீர்த்துவிடுவினம்.
சத்தீஸ் மாஸ்டரிட்ட கெமிஸ்ரி கிளாஸ் என்ன கிழமை, எத்தினை மணிக்கு என்றெல்லாம் மனப்பாடம் செய்து சைக்கிளில் சுழற்றியது தனிக்கதை. கொமேர்ஸ் படிக்கப்போறவனுக்கு கெமிஸ்ட்ரி கிளாஸ் ரைம்ரேபிள் எல்லாம் ஏன் தெரியோணும் எண்டு குறுக்கால கேக்கக்கூடாது கண்டியளோ. “என்ன தம்பி உம்மை பிறவுண் றோட், நீராவியடிப் பக்கம் அடிக்கடி காணுறனான்” என்று சி.ஐ.டி.வேலை செய்பவருக்கெல்லாம் புதுசு புதுசாகக் கதை எல்லாம் ரெடியாக்கவேண்டி அதுவே ஒரு இலக்கியக்காரன் ஆக்கிவிடும்.

இந்தத் தேனிலவு எல்லாம் றிசல்ட்ஸ் வரும் வரைக்கும் தான். ஓ.எல் பரீட்சை முடிவுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும். அதுவரை ஃபீலா காட்டி பயோ படிச்சவ பாலா மாஸ்டரிடம் சிந்துவெளி நாகரீகம் படிச்சுக் கொண்டிருப்பா, இஞ்சினியர் கனவோடு சயன்ஸ் அக்கடமிப்பக்கம் போறவர் விக்னாவில் வன்னியசிங்கம் மாஸ்டரின் தொங்கல் கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருப்பார். சத்தமில்லாமல் செஞ்சரி அடிச்சுப்போட்டு கணிதத்துறையில் கைவைப்பவரைப் பார்த்து “என்ன இருந்தாலும் அவனுக்கு லக் அடிச்சிருக்கப்பா” என்று அதிஷ்டலாபக்கணக்குப் போடுவார்கள். ஓ.எல் இல் நல்ல பெறுபேறு எடுத்துப் பாஸ் பண்ணியர்வர்களுக்குப் பெரும்பாலும் ஆண்டவன் ஏனோ ஏ.எல் இல் அனுக்கிரகம் கொடுப்பதில்லை என்பது
எழுதப்படாத விதி. “ஓ.எல் வரைக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்ச்சு படிச்சவன் பிறகு விளையாட்டா எடுத்துப்போட்டான்” என்று பெற்றாரின் புலம்பல்கள் ஒருபுறம்.

இரண்டு வருஷப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வை நோக்கிய படிப்பு ஒரு தவம். கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு, ரீவி, றேடியோப் பக்கம் கண், காது போகாமல், ராணி வார இதழைக்கூடச் சீண்டாமல் படிப்பு படிப்பு படிப்பு. ஒரு வாத்தி காணாதெண்டு ஸ்பெஷல் கிளாசுக்கும் வேற. அங்கினை இங்கினை அரக்கினாலும் தம்பி பிராக்குப் பாராமல் படியுங்கோ என்று எல்லா இடமும் சி.ஐ.டிக்கள். ரியூஷன் செண்டரின் ரிவிஷன் வகுப்பு எல்லாம் முடிந்த கையோடு, சோதினை வரும் நாளை எண்ணிக்கொண்டு கோயில் குளம் எல்லாம் கூடப் போகாமல், வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து, ஷேவும் எடுக்காமல், இசைஞானி இளையராஜா அளவுக்குப் பொச்சுத் தாடி எல்லாம் வளர்ந்து என்னையே எனக்குக் கண்ணாடியில் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது. ஒருநாள் வீட்டுக்கு வந்த சுப்பையா குஞ்சியப்பு, “தம்பி! நீர் ஆற்றை பெடி” என்று என்று கேட்குமளவுக்கு.

எப்படா ஏ.எல் சோதினை எல்லாம் முடியும் என்றிருந்து, கடைசிச் சோதனை முடிச்சதுக்குப் பிறகு பூஸா முகாமில் இருந்து வெளியேறின குஷி தான். அதுவரை விட்டுவச்ச படங்களை எல்லாம் வீடியோக்கடையில் எடுத்து, இருநூறு ரூவாக்கு ஒரு லீட்டர் என்ற கணக்கில் ஆளாளாளுக்குப் பங்கு போட்டு ஜெனரேட்டர்காரனுக்கும் காசு குடுத்து, சாமம் சாமமா நாலைஞ்சு படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விடியக்காத்தாலை இரை மீட்கும் போது, அஞ்சலி படத்தில சின்னத்தம்பி குஷ்பு போவோமா ஊர்கோலம் பாடுற மாதிரியும், கிழக்கு வாசல் படத்திலை ரேவதி வந்து “எந்திரு அஞ்சலி எந்திரு” என்பது போலவும் ஒரே கலவையாகக் குழப்பி அடிக்கும். பிறகு நாள் முழுக்க முதல் நாள் பார்த்த படங்களை விகடன் விமர்சனக்குழு ரேஞ்சில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிச்சு மோய்வோம். மாலை ஆனால் இருக்கவே இருக்கு மடத்துவாசல் பிள்ளையாரடி. ஆறு மணிப்பூசை முடிச்சு ஐயர் நடை சாத்திய பின்பு தான் எங்கட அர்த்த ஜாமப் பூஜை ஆரம்பமாகும். பிரபு, குஷ்புவில் ஆரம்பித்து உள்ளூர்ப் பிரபு, குஷ்பு, ரேவதி எல்லாரையும் பற்றிக் கதைச்சு முடிக்க ஒரு மணி இரண்டு மணியாகும். ஒரு பக்கம் ஆட்லறி ஷெல்லடியும், ஆங்காங்காங்கே ஹெலிகொப்டரும், பொம்பரும் தாளப்பறந்து குண்டு போட, மணிக்கூட்டுக் கோபுரப்பக்கம் ஓடி ஒளிந்து விட்டு மீண்டும் பேச்சுக்கச்சேரி விட்ட இடத்தில் இருந்து போகும். இரண்டு வருஷங்கள் பேசாததை எல்லாம் பேசித் தீர்க்கவேணும் எண்ட கெடுவோ என்னவோ.
இந்த மாமூல் வாழ்க்கை கொஞ்சக்காலத்தில் அலுப்படிக்கத் தொடங்கிவிடும்.
“உங்கட காலத்தில திலீபன் எண்டெல்லாம் தியாகி இருந்தினம் நீங்கள் என்ன செஞ்சனீங்கள் அப்பா எண்டு உன்ர பிள்ளை கேட்டால், கொம்மாவுக்குப் பின்னால சைக்கிள்ள திரிஞ்சனான் எண்டோ சொல்லுவியள்” புதுவை இரத்தினதுரை ஒருமுறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது.

“யூனிவேர்சிற்றிக்குப் போனா இங்கிலீஸ் தெரியோணுமாம்” என்று ஏ.எல் பரீட்சை எடுக்கமுன்னரேயே ஒரு பகுதி ஸ்போக்கின் இங்கிலீஷ் கிளாசுக்குப் போய்விடும்.

“தம்பி சும்மாதானே இருக்கிறாய் உந்த மிளகாய்த்தூளை அரைச்சுக் கொண்டுவா” - அம்மா
“தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கால் தா, உதிலை ஒருக்காப் போட்டு வாறன், நீ வீட்டில தானே இருக்கிறாய்” - அப்பா
“மேனை, என்னை ஒருக்கால் பிள்ளையாரடியில இறக்கிவிடுறியோ?, உனக்கு இப்ப அவசரம் இல்லைத் தானே” - அம்ம்மா
“முத்ததிலை வடகம் காயப்போட்டனான், கோழி, கீழி தின்னாமல் ஒருக்கால் பார்த்துக் கொண்டிருக்கிறியா?” - பக்கத்து வீட்டுக்காரர்

இப்படியாகத் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்களோடு கொஞ்சம் கொஞ்சமாக அதுவரை கட்டிக்காத்த, இஞ்சினியர், எக்கவுண்டண்ட், டாக்குத்தர் கனவுகளுக்குத் தற்காலிக ஓய்வு கிடைக்கும்.
அதுவும் ஏ.எல் றிசல்ட்ஸ் வந்து வாழ்க்கையே திருப்பிப் போட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். அடுத்த முறை அண்ணன் லண்டனில் இருந்தோ, பிரான்ஸில் இருந்தோ, அல்லது கனடாவில் இருந்தோ (அவர் எங்கை இருப்பார் என்று தீர்மானிப்பது அந்தந்த நாட்டு இமிக்கிறேசன் ஆச்சே) அழைக்கும் போது,

“தம்பி, உவன் ஏ.ஏல் எடுத்திட்டான் பேராதனைக்குப் போற கொடுப்பினை இல்லை, அங்கை எடன்”
அம்மாவின் நினைப்பு அண்ணன்தான் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வச்சிருக்கிறார் என்று. ஊர்க்காரர்களுக்கு ஓப்பிண் விசாவில இருந்து எந்த நாட்டுக்கு ஸ்ருடண்ட் விசாவில் போகலாம் என்று வீரகேசரி வாரமலரைப் பார்த்தாவது புதுப்பித்துக் கொள்ளுவினம்.

“அப்ப செக்கண்ட் சை ட்ரை பண்ணேல்லையோ” தன்னுடைய மகன் ஓ.எல் இல் குண்டடிபட்ட கவலையில் இரண்டு வருஷகாலம் காட்டுத்தீயை மனசுக்குள் வச்சிருந்து கொட்டித்தீர்ப்பார் ஒரு உறவுக்காரர்.
ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்டுகள் பாடு சொல்லவே வேண்டாம்.
“ரியூசனுக்குக் காசைக் கரியாக்கினது போதும் உந்தக் காசை வச்சிருந்தால் கொழுத்த சீதனத்தோட நல்ல டொக்டர் மாப்பிளைக்குக் கட்டிவைக்கலாம்” என்று சின்னத்திரை வில்லிகளாக அம்மாக்கள் மாறி அந்தக் குமருகளைக் கரை சேர்க்க பிரபல திருமண புறோக்கரைத் தேடுவினம்.

எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மனம் போன போக்கில், “போவோமா ஊர்கோலம்” பாடிக்கொண்டு உள்ளுக்குள் ஆயிரம் கனவுகளோடு உயரப்பறக்கும் அந்தக் காலத்து இளமை, அதில் தன்னந்தனியானாக நாடுகள் எல்லாம் களவு களவாகப் பயணித்து, ஈற்றில் அகதி அந்தஸ்து என்ற முகவரியோடு தன்னைத் தொலைத்து வாழும் எதிர்காலம் அப்போது தெரியாது.

17 responses so far

Feb 18 2012

இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்

Published by admin under Uncategorized


ஆசியாவின் மிகப்பெரும் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் அழித்து ஒழிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களைக் கடந்து விட்டது. இந்த நூலகம் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு அண்மைய வருஷங்களில் மீளவும் இயங்கி வந்தாலும் இன்னமும் முன்னர் நிலைபெற்றிருந்த நூலகத்தில் இருந்த அரிய பல ஆவணங்கள், நூல்கள், ஏட்டுச் சுவடிகளின் மூலப் பிரதிகள் இல்லாது அந்த அரிய பல அறிவுச் சொத்துக்கள் இனிமேல் கிட்டாத நிலை தான் இருக்கப்போகின்றது. இது ஒருபுறமிருக்க, மூன்று தசாப்தங்களாக வீரியம் கொண்டிருந்த போர்ச்சூழலில் எத்தனையோ பல எழுத்தாளர்களின் அச்சு வாகனமேறிய நூல்களின் எஞ்சிய பிரதிகள் கூட, தாம் சந்தித்த இடப்பெயர்வுகளின் போது தொலைந்தும், அழிந்தும் போயின. அச்சுக்கு வராத பல பிரதிகளின் எழுத்து வடிவங்களுக்கும் இந்த நிலை என்பதைச் சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு எழுத்தாளரோடு பேசும் போது அவர் தம் அனுபவம் மூலம் அறிந்து கொண்டேன். இந்த நிலையில் ஏற்கனவே தம்மிடம் இருந்த நூல்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் வாசகர்கள் பலர், உள்நாட்டு, வெளிநாட்டு இடப்பெயர்வுகளின் போதும் பாதுகாத்து வைத்திருந்த நிலையும் இருந்திக்கின்றது.

கடந்த ஆண்டுகளாக நான் தாயகம் போகும் போது, அங்குள்ள புத்தகசாலைகளை மேயும் போது, நம்மவர் உள்நாட்டில் வெளியிட்ட புத்தகங்களில் அண்மைய வெளியீடுகள் நீங்கலாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட நூல்களின் பிரதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. வெளிநாட்டின் புலப்பெயர்வுச் சூழலில் இருந்து வெளியிட்ட நூல்களைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் தேடவேண்டும். தமிழ்நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கும் எழுத்தாளனின் நூலைத் தேடி இறக்குமதியாக்கி வெளியிடும் இலங்கையின் முன்னணிப் புத்தகசாலைகள் அதே முனைப்பை ஒரு ஈழத்து எழுத்தாளன் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ வெளியிடும் நூலுக்குக் கொடுக்க வருவதில்லை என்பது கவலைக்குரிய விஷயம் கூட. அதற்கான காரணிகளில் ஒன்றாக, மாறிவரும் இலங்கை வாசகனுடைய வாசிப்பு என்ற சால்ஜாப்பை என்னால் ஏற்க முடியாது.

இந்த நிலையில், இலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம் http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர். இன்றைய காலகட்டத்தில் ஆர்வலர் பட்டாளம் ஒன்றைத் திரட்டி, ஈழத்திலும் ஈழத்துக்கு அப்பால் உள்ள நாடுகளிலும் இருக்கும் அன்பர்களோடு சேர்ந்து இந்த நூலத்த்திட்டத்துக்காகச் செய்து வரும் இந்தப் பணி முழுமையான இலாப நோக்கற்றது. தம் சொந்தப் பணத்திலும், அன்பர்கள் கொடுக்கும் நன்கொடைகளின் மூலமாகவும் இந்த நூலகத் திட்டத்துக்கான பெரும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றார்கள். இதன் விளைவு இன்று பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து நிற்கின்றது இந்த நூலகத் திட்டம்.

அவுஸ்திரேலியாவை எடுத்துக் கொண்டால் விக்டோரியா, மற்றும் நியூ சவுத்வேல்ஸ் ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களிலே, பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுக்க வகை செய்திருக்கின்றது இந்த நாட்டு அரசு.இந்தப் புகுமுக வகுப்புக்கான தமிழ்ப்பாட நெறியில் முக்கியமான ஒரு பிரிவு ஆய்வுப்பணி. அதாவது ஏதாவது ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து அது குறித்த தேடல்களையும், முடிவுகளையும் செய்யவேண்டிய தேவை மாணவனுக்கு இருக்கிறது.
இந்தப் புகுமுக வகுப்புக்கான பயிற்சிப்பட்டறைகளுக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் என் அனுபவத்தின் படி,இந்த ஆய்வில் பெரும்பாலும் ஈழத்து வாழ்வியல், இலக்கியம் என்பதையே முக்கியமான கருவாகக் கொண்டு மாணவர்கள் தம்மைத் தயார்படுத்துகின்றனர். இங்குள்ள தமிழ் அறிவகம் என்ற நூலகம் தன் எல்லை வரை இங்குள்ள மாணவனுக்கான உதவியைக் கொடுத்தாலும், பரந்துபட்ட ஆய்வைச் செய்யும் ஒரு மாணவனுக்குத் தேடல் என்று வரும் போது இயல்பாக வரும் சவால், நூல்களை எப்படிப் பெறுவது. இந்த நிலையில் நூலகத்திட்டத்தின் அடுத்த கட்ட இலக்கு வந்து நிற்கின்றது. அதாவது நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களைத் தவிர்த்து இந்த நூலகத்திட்டத்தின் வழியாகப் பயன்பெறப்போகும் தமிழ் மாணவர் சமுதாயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

நூலகத் திட்டத்தினை நெறிப்படுத்துபவர்களில் ஒருவர் நண்பர் கோபி அவர்களை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்த நூலகத் திட்டத்தின் ஆரம்பம் எவ்வாறு அமைந்தது, இதன் முக்கிய நோக்கம், பணிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பது குறித்து விரிவானதொரு பேட்டியை வழங்கியிருந்தார் கோபி. பத்தாயிரம் ஆவணங்களைக் கடந்து இன்னும் பல்லாயிரம் ஆவணங்களைத் திரட்டவேண்டிய தேவையோடு பயணிக்கும் இந்த நூலகத் திட்டத்தின் சவாலாக இருப்பது நிதி ஆதாரம். ஒரு நூலை இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் சேமிக்க இலங்கை ரூபா 500 வரை தேவையாக இருக்கின்றது. எனவே இந்தப் பணியில் நம் எல்லோரும் இணைந்து கரங்கொடுப்பதோடு, எம்மிடம் இருக்கும் அரிய பல ஈழத்து நூல்களைக் கொடுத்து அவற்றை இங்கே சேமிப்பதன் மூலம் நம் எதிர்காலச் சந்ததிக்கும் காலாகாலமாகப் பயனுறும் என்பதில் ஐயமில்லை.

ஈழத்து நூலகத் திட்டம் குறித்து கோபி வழங்கிய நேர்காணலைக் கேட்க

Download பண்ணிக் கேட்க

9 responses so far

Jan 24 2012

செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்

Published by admin under Uncategorized

அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை

“இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்” என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை.

1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.

போன கிழமை இப்பிடித்தான் வழக்கம்போல சித்தப்பாவும், சிவலிங்கமாமா ஆட்களும் கடையைத் திறக்க யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போகேக்கை தாவடிச்சந்தியில் இருக்கிற சென்றி பொயின்ற் (காவலரண்) இல் வச்சி எல்லாரும் சப்பல் அடியாம். நோவெண்ணைச் சுப்பையாவுக்குத் தான் மவுசு, அவர் கொடுத்த நோவு எண்ணையை உடம்பு முழுக்கத் தடவி வைத்தியம் நடக்குது. எல்லாரும் இன்னும் கடைப்பக்கம் போகேல்லை. திடீரெண்டு எங்காவது ஆமிக்கு பெடியள் கிரனேட் எறிஞ்சு அசம்பாவிதம் நடந்தால் அகப்படுகிற சனத்துக்குத் தான் சங்கு ஊதுப்படும். இந்த விஷயத்தில ஆண், பெண், வயது வேறுபாடில்லை.

இப்பிடி ஒருக்கால் இணுவில் வெங்காயச் சங்கத்தடியில் பாண் பெட்டிக்குள் குண்டை வச்சு ஆமியின் காவலரணுக்குப் பக்கத்தில் வச்சுட்டுப் போய் அது வெடிச்சு ஆமிக்காரர் செத்தாப்பிறகு அந்தப் பக்கம் சரமாரியான துப்பாக்கிச் சூடு. எல்லாம் ஆருக்கு? போறவாற சனத்துக்குத் தான்.
அதிலும் குர்க்காக்காரர் பொல்லாதவை. குள்ளமான ஆமிக்காரர். இந்தியவையும் சீனாவையும் பிரிக்கிற எல்லைப்பிரதேசத்துக்காரர் இவை எண்டு அப்பா சொன்னவர். சீக்கிய ஆமிக்காரரைக் கண்டாலும் எனக்குச் சீவன் போகாத குறை தான். பள்ளிக்கூடம் போகும் போது எதிரில் ஏதாவது சென்றிப்பொயின்ற் இருந்தால் அந்தப் பக்கமே பார்க்காமல் நிலத்தைப் பார்த்துக் கொண்டு கிறுகிறுவெண்டு கடந்து போயிடுவேன். மாலை ஆறுமணிக்குள்ளேயே ஊரே அடங்கிப்போய்விடும்.

சரி, சைக்கிளை எடுத்தாச்சு இனிக் கோண்டாவிலில் இருந்து சுண்ணாகம் காண பி.எஸ்.ஏ வாகனத்தில் என் சவாரி. புத்தகம் படிக்கிற உருசியில் பயம் தெளிஞ்சுட்டுது. ஆனாலும் அஞ்சு மணிக்குள்ள திரும்பி வரவேணும் எண்டு மனம் எச்சரிக்கை மணியைப் போட்டது. மருதனார் மடத்தடியில் இராமநாதன் கொலிஜ் இற்குப் பக்கமா பெரிய ஒரு காவலரண் இருக்கு, அந்தச் சனியனைக் கடந்து போனால் நிம்மதி. ஆகா, அதையும் கடந்தாச்சு, சுண்ணாகம் லைபிரரிக்கு வந்தாச்சு. இரண்டு மணித்தியாலம் எப்பிடிப்போனதெண்டே தெரியேல்லை. புதுசா வந்த புத்தகங்களில் தேவையானதை மட்டும் படிச்சுட்டு லைபிரரி மணிக்கூட்டைப் பார்க்கிறேன், நாலரை காட்டுது. மீண்டும் சைக்கிளை மிதிக்கிறேன்.
யாழ்ப்பாணத்துச் சோழகக் காற்று பி.எஸ்.ஏ.சைக்கிளை ஆட்டிப் பார்த்தது. அப்பா 1950 களில் வாங்கின சைக்கிளாம். இன்னும் அது தன் ஒறிஜினல் ஸ்டீல் என்ற தற்பெருமையோடு முப்பது வருஷத்துக்கு மேல் உழைக்குது. இப்ப வாற சைக்கிளெல்லாம் அமலா போல மெலிஞ்சு போயிருக்க, அப்பாவின் சைக்கிளோ கந்தசுவாமி கோயில் கிடா வாகனம் மாதிரி பெரிய சைஸ்.

வாசிச்ச புத்தகங்களை இரைமீட்டுக் கொண்டு வருகிறேன், திரும்பவும் மருதனார்மடச் சந்தி, திரும்பவும் இந்தக் காவலரணைக் கடந்து போகோணும் எண்ட துடிப்பு. அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காதே என்று மனம் ஏவல் விட றோட்டின் நேர்ப்பக்கம் பார்த்துக் கண்கள் நோக்க,
“ஏய்” என்றொரு குரல் காவலரண் பக்கமாக வருகிறது. இண்டைக்கு நான் துலைஞ்சன், கை காலெல்லாம் கறண்ட் ஏத்தினமாதிரி நடுங்க, பி.எஸ்.ஏ சைக்கிளின் பிறேக் கட்டை அழுத்தப்படுகிறது. காவலரணில் இருந்து ஒரு சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஆமிக்காரன். ஆளைப்பார்த்தால் ரண்டு பனை உயரம். தலைக்குத் தொப்பி, தொப்பிக்குள்ள கத்தி எல்லாம் இருக்குமாம். சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு பவ்யமாக
“யெஸ் சேர்” என்று சொல்கிறேன்.
உள்ளுக்குள் இரத்த நாளங்கள் எல்லாம் என்னைச் சோதித்துப் பார்க்குது.
தன் கையில் இருந்த ஒரு பீடிச்சரையைக் காட்டி ஒரு பீடிக்கட்டு வாங்கி வருமாறு சைகை மொழியில் சொல்கிறான் கொஞ்சம் ஹிந்தியும் வேறு. எனக்கு “ஏக் துஜே கேலியே”ஐ விட ஹிந்தி மொழி தெரியாதே. ஆனாலும் அவனுடைய சைகை மொழியை வைத்துக் கொண்டு
“ஒகே சேர்” என்று சொல்லிச் சைக்கிளை உழக்க,
திரும்பவும் “ஏய்”
இதென்னடா கோதாரி என்று திரும்பவும் அசட்டுச் சிரிப்போடு அவனைப் பார்க்க, பத்து ரூபா நோட்டை நீட்டுகிறான். வாங்கிக் கொண்டு மருதனார் மடப்பக்கம் உள்ள தேத்தண்ணிக் கடைக்குப் போய்
“அண்ணை ஒரு பீடிக்கட்டு தாங்கோ”
கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டே பத்து ரூபாத்தாளை வாங்கிக் கொண்டு சில்லறையைப் பொறுக்குகிறார். இந்த வயசில தறுதலை பீடியெல்லாம் பிடிக்குதோ என்ற மாதிரியான ஒரு பார்வை அது. ஆர்.பி.ஜி பீடிக்கட்டு என் கையில். ஆர்.பி.ஜி பீடிகள் உள்ளூர்த்தயாரிப்பு, வீரகேசரியில் விளம்பரம் எல்லாம் பார்த்ததோட சரி, இப்பதான் அதைத் தடவிப்பார்க்க ஒரு வாய்ப்பு. அம்மா, இதையெல்லாம் கண்டால் கிணத்தில விழுந்துடும் மனுசி. தவமணி ரீச்சர்ர மேன் பீடிக்கட்டோட இருக்கிறது பெருமையா என்ன? எனக்கோ இந்த நூற்றாண்டில் கிட்டிய அவமானம் போன்றதொரு நிலை.

காவலரணுக்கு வந்து காத்திருந்த சீக்கியனிடம் கொடுக்கிறேன். ஆர்.பி.ஜி பீடிக் கட்டைச் சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறான். சரி என் வேலை முடிந்தது என்ற நினைப்பில் சைக்கிளில் ஏற
“ஏய்” மீண்டும் அவன் தான்.
“யெஸ் சேர்”
அந்த பீடிக்கட்டை வேண்டாம் என்ற தோரணையில் தலையை ஆட்டிவிட்டு மீண்டும் தன் கையில் இருந்த பீடிக்கட்டுச் சரையைக் காட்டுகிறான். அதில் தொப்பியோடு ஒரு முஸ்லீமின் படம் போட்டு “செய்யது பீடி” என்று போட்டிருக்கு. இப்ப விளங்கீட்டுது இவன் செய்யது பீடி வாங்கித் தரச் சொல்லிக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு,
“ஒகே சேர்”
ஆர்.பி.ஜி பீடிக்கட்டு இப்போது மீண்டும் என் கையில். பழையபடி மருதனார் மடச் சந்தித் தேத்தண்ணிக் கடை. கடைக்காரர் என்னைக் கண்டு திகைத்திருக்கக் கூடும். படுபாவி அதுக்குள்ள ஒரு கட்டு பீடியைக் குடிச்சு முடிச்சிட்டானோ என்று.
“அண்ணை, இது எனக்கில்லை, பக்கத்து சென்றி பொயின்ற் ஆமிக்கு, செய்யது பீடி வேணுமாம், இருக்கோ அண்ணை”
இது நான்.
“உதைத் தாரும் தம்பி, நாங்கள் செய்யது பீடி விக்கிறேல்ல, சுண்ணாகம் போய்ப் பெரிய கடையளில் விசாரிச்சுப் பாரும்” என்றவாறே பீடிக்காசைத் தந்து பீடிக்கட்டை வாங்குகிறார்.
சைக்கிளைத் திருப்புகிறேன். பேசாமல் உடுவில் பக்கமாகக் கள்ளப்பாதையால் வீடு போய்ச் சேர்வமோ,ஆனால் அந்தச் சீக்கியன் எங்காவது அடையாளம் கண்டானென்றால் துலைச்சுப் போடுவானே, அவன்ர காசு வேற கையில். வேறு வழியில்லை என்று மனதைச் சமாதானப்படுத்தி,சுன்ணாகம் பக்கம் போய் நியூமார்க்கற்றில் இருந்த கடையொன்றில் செய்யது பீடியைக் கண்டு வாங்கிக் கொண்டு, மீண்டும் சோளகக் காத்தோடு போட்டி போட்டு மருதனார்மடம் காவலரண் பக்கம் வந்து அந்தச் சீக்கியன் ஆமியிடம் கொடுக்கிறேன்.
“கோ (go)” என்று சைகை செய்கிறான். (உதவி செய்தால் தங்க் யூ சொல்லவேணும் இந்த நேரம் பார்த்து அம்மா சொன்னது வளையம் வளையமாக நினைப்பில்)
ஒருமாதிரி வீடு வந்து சேர்ந்தால் அப்பா வீட்டுக்குப் பின்புறம் ஆட்டுக்குக் குழை வெட்டிக் கொண்டிருந்தார். சத்தமில்லாமல் கிணற்றடியில் முகம் கழுவி,சாமி கும்பிட்டுட்டுப் பாடப்புத்தகத்தை விரிக்கிறேன்,ஊரடங்கிய இரவில்

00000000000000000000000000000000000000000000000000000000
அதே 1988 ஆம் ஆண்டு இன்னொரு நாள் ஆனால் இது பாடசாலை நாளின் காலை நேரம்

பள்ளிக்கூடத்துக்கு வெள்ளனவே வந்தாச்சு, கோண்டாவிலில் இருந்து கொக்குவில் காண நடந்து வரவேணும். சண்டை நேரம் என்பதால் காலையில் நேரத்துக்கே ஆரம்பிச்சு இரண்டு மணிக்கெல்லாம் முடிந்துவிடும் பள்ளி.
எங்கட கொக்குவில் இந்துவிலும் இன்னமும் ஆமிக்காறர் காவலரண் வச்சிருக்கினம். பள்ளிக்கூடம் பக்கம் இயங்கும், ஆமிக்காரர் தங்கடபாட்டிலை காவலில் இருப்பினம். ஆனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எல்லாரும் துலைஞ்சம் எண்டு கணக்கு சேர் ஒருக்கால் சன்னமாகச் சொன்னவர்.
இன்னமும் பள்ளிக்கூட பிறேயர் நடக்கேல்லை, மாணவர்களும் வரவில்லை. என்னைப்போல ஒன்றிரண்டு பேர் தான். இணுவிலில் இருந்து சுதாவும் வந்து விட்டான். முதலாம் மாடியில் இருந்து மூண்டாம் மாடிவரை படிக்கட்டில் ஏறி ஓடி விளையாடிப்பார்ப்போம் என்ற அல்ப ஆசை தொற்றிக் கொள்ள நானும் சுதாவும் மேல் மாடி காண ஓடுகிறோம் படிக்காட்டுக்களால். வளைந்து நெளிந்த படிக்கட்டுப் பாதையால் ஓடுவது பெரிய சவால். கொஞ்சம் வழுக்கினாலேயே முப்பத்திரண்டு பல்லுக்கும் உத்தரவாதமில்லை. ஆனாலும் வயசு விடாதே. என்னைத் தாண்டி ஓடுகிறான் சுதா.

இரடா வாறன் என்று சொல்லிக் கொண்டே நானும் அவனை முந்துவதற்கு ஓடி மூன்றாம் மாடியை எட்டியாச்சு மேல் தளத்தில் அவன் ஓட நான் முந்த மொளார் என்று சறுக்கி விழுகிறேன். அம்மா என்று சத்தம் போட்டுக் கொண்டே குந்தி இருந்து முழங்காலைத் தடவுகிறேன். சீமெந்துப் பூச்சில் மறைந்த முழங்கால் தோலை மீறி இரத்தம் கொப்பளிக்கிறது. சுண்ணாம்போடு தடவிப்போட வெத்திலையைக் குதப்பிய அம்மம்மாவின் சொண்டு மாதிரிப் பீறுடுகிறது இரத்தம். மேல் தளத்தில் காவலில் நின்ற இந்தியன் ஆமிக்காறர் ஒருத்தர் வாறார். இப்போது காலில் ஏற்பட்ட காயத்தை விட ஆமிக்காறர் வந்து என் கன்னத்தைப் பதம்பார்க்கப் போறாரோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. ஆள் நல்ல கறுவலான நெட்டை உருவம், ஹிந்திக்காறனா இருக்காது.
கிட்டவந்த அந்த ஆமிக்காறன் என் காலைத் தன் கையால் திருப்பிப்போட்டுப் பார்த்து விட்டு தன் யூனிபோர்ம் பொக்கற்றில் இருந்து ஒரு நாலைந்து கிழிசலான துண்டுகளை எடுக்கிறார். தன் நாக்கில் தடவி விட்டு ஒவ்வொன்றாகப் புண் இருக்கும் பகுதியில் ஒட்டுகிறார். அந்தத்துண்டுகள் அதே முஸ்லீம்காரர் உருவம் பொதிந்த “செய்யது பீடி”கட்டின் பேப்பர் என்று தெரிகிறது.
செய்யது பீடிக் கட்டின் பேப்பரைத் தன் நாக்கித் தடவி எச்சில் ஆக்கியபின் அதைச் சிராய்ப்புக்காயத்துக்கு ஒட்டிக் கொண்டே
“வாட் இஸ் யுவர் நேம்”
“பிரபாகர் சேர்”
எனக்கும் அவரின் பெயரைக் கேட்க ஆசை,பயம் தெளிந்துவிட்டது
“வட் இஸ் யுவர் நேம் சேர்”
“சரவணன்”

யாவும் உண்மையே

27 responses so far

Jan 04 2012

“இலங்கையில் தமிழர்” - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம்

Published by admin under Uncategorized

ஒருமுறை வரலாற்றாசிரியர் ஒருவரை வானொலிப் பேட்டி காணும் போது அவர் முக்கியமானதொரு கருத்தை முன்வைத்தார். காலத்துக்குக் காலம் இலங்கையில் தமிழ் ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு வேற்று மொழி ஆட்சியாளர்கள் நில ஆக்கிரமிப்பைச் செய்யும் போது, முக்கியமாக அவர்கள் கைவத்து அழித்தது தமிழர் வரலாறு கூறும் முக்கியமான வரலாற்று மூலாதாரங்களைத் தான். இதன் மூலம் இலங்கையில் தமிழரின் தொன்மையான வரலாற்று இருப்பை அழிப்பதே முதன்மை நோக்காக இருந்தது.
ஈழ வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அந்தக் கையறு நிலையை நம் இனம் சந்தித்துவருகின்றது. கண்ணுக்கு முன்னால் இருந்த பல ஆதாரச் சின்னங்கள் தொலைந்து இருந்த சுவடு இல்லாமல் போயிருக்கின்றன. இதற்கு மிகப்பெரிய சாட்சி தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றாகவும், ஈழவரலாற்றின் எஞ்சிய ஆவணங்களையும், ஏடுகளையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருந்த யாழ் பொது நூலகம் தீயினால் காவு வாங்கப்பட்ட வரலாறு.

இது இவ்வாறிருக்க, தீமையிலும் ஒரு நன்மை என்பது போல இலங்கையைத் தம் காலணித்துவ ஆட்சியில் வைத்திருந்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில், நாட்டின் மூல வளங்களை மட்டுமல்லாது அன்றைய காலகட்டத்தில் அகப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். நூற்றாண்டுகளாக ஒல்லாந்து, கோவா உட்பட்ட நூலகங்களில் இந்த வரலாற்று மூலாதாரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றைத் தேடியெடுத்து அவற்றின் சாராம்சத்தைக் வெளிக்கொண்டு வருமளவுக்கு நம் ஈழத்தமிழ் புலமைசாலிகள் தாயகச் சூழ்நிலை, பொருளாதார நிலை காரணமாக இயங்காதிருந்தனர்.

இந்த நிலையில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கை வரலாற்றில் தமிழர் குறித்த வரலாற்றின் மீதான தேடல் ஆரம்பிக்கின்றது. கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஏற்கனவே
Sri Lankan Tamil Nationanalism (1999), இலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு (2003) ஆகிய வரலாற்று நூல்களை எழுதியவர். இவற்றைக் கடந்து, இலங்கையில் தமிழர் குறித்த மூல வரலாற்று ஆவணங்களைத் தேடமுற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் உதவும் முகமாக Primary Sources For History of the Sri Lankan Tamils என்ற நூலை 2005 ஆம் ஆண்டில் அவர் வெளிக்கொணர்ந்தார். இந்த நூல் இலங்கை வரலாற்றைப் பேசும் ஆவணமாக அன்றி, வரலாற்று மூலாதாரங்களின் திரட்டாகவும் அவை எங்கெங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த வழிகாட்டியாகவும் விளங்குகின்றது. பல மாதங்கள், சில ஆண்டுகள் உழைப்பில், பல மேற்குலக நாடுகளின் நூலகங்களைத் தேடி அலைந்து திரட்டி உருவாக்கிய வந்த இந்த நூலை ஆக்கும் பணியில் சந்தித்த அனுபவங்களை கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஆறு வருடங்கள் முன்னர், என் வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்த அனுபவம் ஒலிவடிவில்

தரவிறக்கிக் கேட்க

நேரடியாகக் கேட்க

இதன் பின்னர் “இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)” என்ற நூலை
கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் 2008 ஆம் ஆண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருந்தார். தன்னுடைய பல்லாண்டு ஆய்வுப்பணியில் கிடைத்த மூலாதாரங்களின் உதவியோடு எழுதப்பட்ட இந்த முழுமையான வரலாற்று நூலைத் தொடர்ந்து, இந்த “இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)” என்ற ஒலி ஆவணப்படுத்தலாக இப்போது தென் ஆசியவியல் மையம் - சிட்னி மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றார். என் அறிவுக்கு எட்டியவரை ஈழத் தமிழர் வரலாற்றின் ஆதி முதல் சமீப வருடங்கள் வரையான வரலாற்றுப் பதிவை ஒலி ஆவணமாக யாரும் முன்னர் கொண்டு வரவில்லை என்றே நினைக்கின்றேன். அங்கொன்றும் இங்கொன்றுமான பதிவுகள் வானொலி ஊடக வழியாகவும், ஒரு சில இறுவட்டுக்களாகவும் வந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த ஒலி ஆவணம் என்பது முக்கியமானதொரு காலத்தின் தேவையாக அமைகின்றது.

“இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)” என்ற இந்த ஒலி ஆவணம் MP3 வடிவில் தனித்தனிப்பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே இறுவட்டில் கிடைக்கின்றது. இந்த ஒலிப்புத்தகத்துக்குக் குரல் வடிவம் கொடுத்திருப்பவர் மூத்த வானொலியாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள். ஒரு வரலாற்று ஆவணத்தை நிதானமான ஒலி நடையில் அழுத்தம் திருத்தமான உச்சரிப்போடும், மூலக் கருத்துக்களைச் சிதைக்காது கொண்டுவருவதில் திரு அப்துல் ஜபாரின் பங்கு வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றது. உண்மையில் அப்துல் ஜபார் அவர்கள் இலங்கைத் தமிழரின் தேசிய பிரச்சனை குறித்த ஆழந்த கரிசனையும், வரலாற்று உண்மைகளையும் அறிந்தவர் என்பதோடு இந்த நூலின் சாரத்தை முழுமையாக உணர்ந்திருப்பதும் இந்த ஒலி ஆவணத்தின் முக்கியமான நற்பேறாக அமைந்துள்ளது. இப்படியான வரலாற்று நூலைக் ஒலிக்குக் கொண்டுவரும் போதும் போது தகுந்த ஆளுமையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பில் திரு அப்துல் ஜாபார் அவர்களைத் தேர்ந்தெடுத்திருப்பது வெகு சிறப்பு.

மொத்தம் 15 மணி நேரங்களுக்கு மேல் ஒலித்திரட்டாக அமையும் இந்த வரலாற்று ஆவணத்தின் முக்கிய பகுதிகள்

தமிழர் தோற்றமும், ஆரம்ப வரலாறும் (கி.மு 900 - கி.பி 900)

இருண்ட வரலாற்றுக் காலம் (கி.பி 900 - கி.பி 1200)

சோழர் ஆக்கிரமிப்பும், அதன் விளைவுகளும் (கி.பி 1200 - கி.பி 1500)

போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பும், தமிழ்ப்பிரதேசங்களைச் சுரண்டியமையும் (கி.பி 1505 - கி.பி 1658)

டச்சுக்காரின் ஆக்கிரமிப்பும், தமிழ்ப்பிரதேசங்களைச் சுரண்டியமையும் (கி.பி 1658 - கி.பி 1796)

பிரித்தானியரின் ஆரம்ப ஆட்சியும், தமிழரும் (கி.பி 1796 - கி.பி 1850)

தமிழர்களின் விழிப்புணர்வும், எழுச்சியும்: சமயம், கலாச்சாரம், மொழி, சமூகம், பொருளாதாரம் (கி.பி 1850 - கி.பி 1900)

பிரித்தானியரின் அதிகாரமும், தமிழரின் ஆட்சி உரிமை நிராகரிப்பும் (கி.பி 1833 - கி.பி 1948)

சுதந்திரத்தின் பின் இலங்கை அரசின் நடவடிக்கைகளும், தமிழ் தேசியவாதத்தின் எழுச்சியும் (கி.பி 1948 - கி.பி 1983)

இவற்றோடு அறிமுகவரை, முடிவுரைப் பகுதிகளிலும் இந்த நூலின் ஆக்கத்தில் சந்தித்த அனுபவப் பகிர்வாக அமைகின்றது.
“இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)” என்ற இந்த ஒலிப்புத்தகம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் சென்று சேர்வதன் மூலம் முழுமையான வரலாற்றுப் புரிதலுக்கு வழி சமைக்கும். அந்த வகையில் இந்த ஒலிப்புத்தகம் காலத்தின் தேவை எனலாம்.

5 responses so far

Dec 14 2011

ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்

Published by admin under Uncategorized

ஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார்.
Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பல எழில் மிகு, கட்டிடக்கலை நுணுக்க வேலைப்பாடுகளோடு அமைந்த கட்டிடங்களை அமைப்பதிலும் இவரது பங்கு இருந்திருக்கின்றது. ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.அமரர் வி.எஸ்.துரைராஜா அவர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிட்டிய பெருமிதத்தில் இருந்தேன். அவரின் குத்துவிளக்கு திரைப்படப்பிரதியும், அப்படம் குறித்து அன்றைய காலகட்டத்தில் வெளியான நாளிதழ்களின் பார்வைகள் உள்ளிட்ட கோப்புக்களை முன்னர் எனக்கு அன்போடு அளித்திருந்தார். இவற்றை வைத்து ஒரு ஆவணப்பதிவும் தயாரிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அந்தப் பணி கைகூட முன்னர் வி.எஸ்.துரைராஜா அவர்களின் மறைவுச் செய்தி எட்டியது குறித்து வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். திரு.வி.எஸ்.துரைராஜாவினால் “The Jaffna Public Library Rises From Its Ashes” என்ற நூல் வெளியிடப்பட்ட போது நான் வழங்கியிருந்த அனுபவப் பகிர்வை மீள இங்கு பகிர்கின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜனவரி 19, 2007 சிட்னி, அவுஸ்திரேலியா
ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் “The Jaffna Public Library Rises From Its Ashes” என்ற நூல் சிட்னியில் உள்ள Strathfield நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. உயர் தர வழவழப்பான தாள் கொண்டு 96 பக்கங்களை நிறைத்த ஒரு ஆவணமாக இந்நூல் படங்களோடும், யாழ் பொது நூலகத்து வரலாற்றோடும் ஆங்கில மொழியில் அமைந்து மித்ர வெளியீடாக மலர்ந்துள்ளது.

1981 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடிய செயலின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா.

1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. ஓரளவு நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க நினைத்தார்கள். இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர். அன்றிருந்த கட்டிடம் போலவே மீள அமைக்கப்பட்டது.

பெரியதொரு கனமான நூலாக வந்திருக்கும் “The Jaffna Public Library Rises From Its Ashes” ஐ ஆவலோடு வாங்கி இதழ்களைப் பிரிக்கும் போது, இந்நூல் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களும், அரிய பல புகைப்படங்களும் இயல்பாகவே வியப்பால் விழிகளை விரியச் செய்கின்றன.

இந்த நூலில் இடம்பெறும் புகைப்பட ஆவணங்களைப் பார்த்தோமேயானால் புதிதாக அமையப்பெற்ற நூல் நிலையத்தின் தோற்றம் முதற் புகைப்படமாகவும் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் குறுக்கும் நெடுக்குமான வரைபடங்களும் இருக்கின்றன. பின்னர் யாழ் நூலகத்தின் இரு வேறு தோற்றங்கள் தூரக் காட்சியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

1936 ஆம் ஆண்டில் அமையப்பெற்று பின்னர் 1985 இல் முற்றாக அழியப்பெர்ற யாழ் உள்ளூராட்சி சபை, மாநகர சபை (1949 இல்) இன் மூலத் தோற்றம், அழிவதற்கு முன்னிருந்த சுப்பிரமணியம் பூங்காவின் மூலத் தோற்றம், 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞரால் வரையப்பெற்ற யாழ் நூலக வரைபடங்கள் நான்கும் காணக் கிடைக்கின்றன.

துரையப்பா விளையாட்டரங்கம், அழிந்த சுப்பிரமணியம் பூங்கா, 1982 ஆம் ஆண்டில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்த்திய “Jaffna Public Library Week” இன் பல்வேறு புகைப்படங்கள், மற்றும் மீள நிறுவப்பட்ட யாழ் நூலகத்தின் முழுமையான கட்டிட வரைபடத்தொகுதிகள், மற்றும் மீள நிறுவப்பட்ட நூலகத்தின் பல்வேறு கட்டிட அமைப்புக்கள், காட்சிகள் எனப் புகைப்படங்கள் விரிகின்றன.

1981 இல் அழிந்து இடிபாடுகளோடு இருக்கும் யாழ் நூலகம் பல்வேறு அழிவுத் தோற்றப்படங்களுடனும் பல்வேறு புகைப்படத் தொகுதிகளாக அழிவின் சுவடுகளாகப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.

இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் முன்னாள் யாழ் மேயரின் முகவுரையோடு ஆரம்பித்து, முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானத்தின் செய்திக் குறிப்பும், நூலாசிரியரின் முன்னுரை, யாழ் பொது நூலகத்தின் ஆதி வரலாறு தாங்கிய கட்டுரைகள், 1956 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற நூலகத்தின் இருந்த சகல கட்டிட அமைப்புக்கள் குறித்த முழுமையான கட்டுரை என விரிகின்றன.

தாவீது அடிகளாரின் திடீர் மரணம் உள்ளிட்ட பொது நூலகம் அழியப் பெற்ற கோர வடுக்கள் ஆங்கிலத்தில் வடித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. Who Burnt the precious Books? என்ற தலைப்பில் வரும் ஆக்கத்தில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் குறித்த சாட்சியங்களாக அமைகின்றன. சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை அவர்களின் தூண்டுதலின் பேரில் காடையர்கள் நிகழ்த்திய தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலக அழிவை ஆதரங்களோடு அவை மெய்ப்பிக்கின்றன.

அழிந்தொழிந்த நூலகத்தினை நிர்மாணிக்க எப்படியான முயற்சிகள் ஈழத்தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் எப்படியான வகையில் இந்த நூலகம் மீள எழுந்தது தொடர்பிலும் சில கட்டுரைகள் அமைந்து காணப்படுகின்றன.

எனவே இந்த “The Jaffna Public Library Rises From Its Ashes” என்ற இந்த வரலாற்று நூல் ஓவ்வோர் ஈழத்தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய, மற்றைய சமூகத்தினருக்கும் எம் இனத்திற்கு ஏற்பட்ட இன்னலின் சாட்சியமாகக் காட்ட வேண்டிய ஒரு ஆவணமாகும். சரி இனி இந்த நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போம்.
மாலை ஆறு மணிக்கு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் Strathfield நகர மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொள்ள ஆரம்பமானது. மங்கல விளக்கேர்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர், அன்று யாழ் பொது நூலகம் எரிந்த போது யாழ் நகர மேயராக இருந்த திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள்.
இந்த நிகழ்வு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நூல் ஆய்வு ஆங்கில அமர்வு, தமிழ் அமர்வு என்ற வகையில் நிகழ்ந்தன. வைத்திய கலாநிதி மனோமோகன் நூல் வெளியீட்டின் அவைத்தலைவராக அமர்ந்து கொண்டார். திரு. வி.எஸ்.துரைராஜா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூலகம் தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்கள் பெரும் திரையில் காண்பிக்கப்பட்டன.

ஆங்கில அமர்வில் முதலில் நூலாய்வை நிகழ்த்தியவர் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள். இந்த நூலை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் யாழ் பொது நூலகத்தில் அரிய ஆவணங்களைத் திரட்டிப் பேணிப் பாதுகாக்கும் நுண் படங்கள் (Micro films) தொழில்நுட்ப வசதிக்காகக் கையளிக்கப்பட இருக்கின்றது. ஆனால் அழிந்த நூலகத்தோடு போன அரிய நூல்களை இன்றும் ஒரு பிரதியாயினும் பெறமுடியாத நிலை இருக்கின்றது. ஏராளமான மூல ஏட்டுச் சுவடிகள் அழிந்தது அழிந்தது தான். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முதல் மாணவர் ஒருவரின் அனைத்து நூல்களும் இந்த நூலகத்துக்கு முன்னர் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவையும் சாம்பலாகிப் போயின என்று ஆதங்கத்தோடு பொன்.பூலோகசிங்கம் பழைய நினைவுகளைத் தன் பேச்சில் மீளக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து பேசவந்த அ.பரராஜசிங்கம் அவர்கள் யாழ் பொது நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவறைக் கொண்டு தனது பேச்சில் பயணித்து, இந்த நூல் நயத்திலும் பின்னர் இணைத்துக்கொண்டார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேதகு Virginia Judge அவர்கள் நூல் வெளியீட்டுப் பேச்சை வழங்கிய பின்னர் முதற்பிரதிகளை சிட்னி வாழ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்.
Virginia Judge ஏற்கனவே வன்னி சென்று எம்மக்களின் வாழ்வியலை அறிந்து கொண்டவர். இன்று வரை தொடர்ந்து தனது ஈழத்தமிழர் மீதான கரிசனையைக் காட்டி வருபவர். தனது பேச்சில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐரிஸ் போராட்டத்தோடு தொடர்புபடுத்தியதோடு, Schindler’s Ark என்ற நாவலை (பின்னர் Schindler’s List என்று படமாக வந்தது) எழுதிய Thomas Keneally என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளரின் The Great Shame என்ற நாவலை எடுத்து வந்து அதில் உள்ள அம்சங்களைத் தொட்டு, எமது மக்களின் சுதந்திர வேட்கை தொடர்பான தன் கரிசனையைத் தன் பேச்சில் கொண்டு வந்தார்.

இடைவேளையின் பின்னர் இந்நூல் ஆய்வின் தமிழ் அரங்காக அமைந்தது.
“யாழ் நூலகம் எம்மினத்திற்கோர் வெள்ளை மாளிகை, ஆனால் இது அழிவுக்குத் துணை போன வெள்ளை மாளிகை அல்ல, அறிவு சால் ஆக்கத்துக்குத் துணை போன வெள்ளை மாளிகை” என்று ஆரம்பித்து, தான் இளைஞராக இருந்த காலத்தில் நிகழ்ந்த அனர்த்ததை தன் பேச்சில் கொண்டு வந்தார் தமிழறிஞர் திரு.திருநந்தகுமார் அவர்கள். 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நூலக அனர்த்ததை 2001 ஆம் ஆண்டில் தான் அரச சார்பு ஆங்கில நாளேடு Daily News தன் ஆசிரியர் தலையங்கத்தில் கண்டித்த வேடிக்கையும், இந்நூலில் காணப்படும், பிரேமதாச ஒக்டோபர் 1991 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவில் காமினி திசாநாயக்கா கூட்டணியினர் தான் இந்த நூலக எரிப்புக்கான காரணகர்த்தாக்கள் என்று சொன்ன குற்றச்சாட்டையும் திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருமதி கலையரசி சின்னையா அவர்கள், தாம் பேராதனையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்த காலகட்டத்தில் , ஈழத்து இலக்கிய முயற்சிகளை இன்னும் பெருக்க வேண்டிய அவசியத்தை பல்கலைக்கழகமட்டதினூடாக பேராசிரியர்கள் செயற்படுத்த முனைந்த வேளை யாழ் பொது நூலகம் தந்த பாரிய உசாத்துணையைக் காட்டி “நூலகமும் சமூகத் தொடர்பும்” என்ற பேச்சில் கொண்டு வந்தார்.
பல்கலைக்கழகமாக ஆகுவதற்கு முன் இருந்த பரமேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஹாட்லி கல்லூரியின் பாரிய, அரிய நூற் தொகுதிகள் அழிவதற்கு முன்னிருந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவை யாவும் அழித்தெரிக்கப்பட்டன என்று கவலையோடு தெரிவித்தார். நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நூலாய்வின் தமிழ் அமர்வில் நிறைவாக திரு எம்.தனபாலசிங்கம் அவர்களின் “ஒரு மக்களின் பாரம்பரியத்தின் கருமூலமே நூலகங்கள்” என்ற அரியதொரு ஆய்வுப் பேச்சை வழங்கிச் சிறப்பித்தார். ‘ எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர் ”

“ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்,
” Where they have burned books, they will end in burning human beings ” –Heinrich Heine (1797-1856)
என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படையெடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை. ” the burning is but a prologue: where books are burned, people in the end are burned too ” என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர் என்று தன் பொருள் பொதிந்த பேச்சினை ஆரம்பித்துத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டு, இறுதியில் எம் மக்களின் சுதந்திர வேட்கையையும் தொடர்புபடுத்தி நிறைவான ஒரு விழாவை நிறைவாக்கினார் மா.தனபாலசிங்கம் அவர்கள்.

நன்றியுரையை நூலாசிரியரின் பேரன் ரிஷ்யன் வழங்க, இந்நூல் வெளியிடு இனிதே நிறைவேறியது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்

1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.

1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.

2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.

உசாத்துணை:1. “யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்”, மூதறிஞர் க.சி.குலரத்தினம்,
மித்ர வெளியீடு, 1997

2. “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது”, நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.

புகைப்படங்கள்:
1. என் புகைப்படத் தொகுப்பு
2. “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது”, நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.
3. http://www.lines-magazine.org

One response so far

Dec 11 2011

வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்

Published by admin under Uncategorized

“நான் எப்போதும் நானாகத் தான் இருக்கிறேன், மற்றவர்கள் தான் என்னில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்”, சமீபத்தில் ட்விட்டரில் நான் இட்ட கருத்து ஒன்று. சிறுவயதில் இருந்து தீவிர வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது சிறுவர் கதை, கட்டுரை என்று எழுதி பள்ளிக்கூடக் கையெழுத்துப் பத்திரிகைகளில் இருந்து, ஈழநாடு, அர்ச்சுனா போன்ற இதழ்களில் வந்தது ஒரு சில என்றால் அனுப்பியும் அச்சில் வராத எழுத்துக்கள் ஓரு நூறு பெறும். கடந்த ஆறுவருஷ வலைப்பதிவு அனுபவம் எனக்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டதாகத் தான் எண்ணத் தோன்றுகின்றது.

நேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.

மடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.

“நினைவு நல்லது வேண்டும்” என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.

எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக

மடத்துவாசல் பிள்ளையாரடி

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக

றேடியோஸ்பதி

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக

உலாத்தல்

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர

வீடியோஸ்பதி

இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,

நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர

கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.

இவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/

மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

www.kanapraba.com

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்

2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்

“முகத்தார்” என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்

இலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் “முகத்தார்” எஸ்.ஜேசுரட்ணம்.

1.1.11 - “கத தொடருன்னு”

1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன்.

“இராவண்ணன்” படைத்த சுஜித் ஜி

“வான்மீகி வரைந்த இராமாயணத்தால்

ஆரியன் இராமன் ஆண்டவனானான்

அயலவன் வாலி குரங்கானான் - என்

முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்

ஆரியத்துக்கு நான் இராவண்ணன்”

காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.

காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே… ;-)

ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்

ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன்.

முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்

தமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது.

கும்பிடப் போன தெய்வம்

எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)

ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்

கே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.

“சத்யசாயி சென்ரர்” மானிப்பாய் வீதி, தாவடி

அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது.

அகவை எழுபதில் BBC தமிழோசை

“தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு” அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.

விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்

கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன்.

யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்

“தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே”

ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.

காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்

“சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ”

எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.

மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை

சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், “முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்”என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.

இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை

இணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது.

“சிவபூமி” என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்

சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார்.

பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.

ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.

தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை

இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.

ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

திருநந்தீஸ்வரம் கண்டேன்

ஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை.

Steve Jobs படைத்த Apple உலகில் நான்

கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன்.

படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு

ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.

மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்

இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன்.

தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி

ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.

19 responses so far

Dec 08 2011

தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி

Published by admin under Uncategorized

ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ள முனைவர் சீதாலட்சுமி ராமசாமி அவர்கள் கடந்த மாதம் சிட்னிக்கு வந்திருந்தார்.
தமிழகத்தின் திருச்சிப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஆகாசவாணியின் “இளைய பாரதம்” மூலமாகத் தன் ஊடகப் பங்களிப்பையும் வழங்கிருந்தார்.
நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றுக்காக வந்திருந்த அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானொலி நேர்காணல் கண்டிருந்தேன்.

இந்தப் பேட்டியின் வாயிலாக சிங்கப்பூரின் தமிழ் இயங்கும் சூழல்,மற்றும் தன் ஆய்வுப்பணி அனுபவங்களை விரிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் சீதாலட்சுமி இராமசாமி அவர்கள்.

தரவிறக்கிக் கேட்க

நேரடியாகக் கேட்க

No responses yet

Nov 15 2011

மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்

Published by admin under Uncategorized

இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன். அந்தக் காலத்தில் என் மூத்த அண்ணாவும், இளைய அண்ணாவும் யாழ்ப்பாணத்திலேயே சித்தி வீட்டாரின் வளர்ப்பில்.அப்போதுதான் பிறந்த எனக்கோ அடித்தது யோகம் அப்பா, அம்மாவுடன் கைக்குழந்தையாகக் கூடவே ஹற்றனில் வாழவேண்டிய பாக்கியம் கிட்டியது. ஆனால் என்னுடைய ஆறுவயதுக்குட்பட்ட அந்தக் காலம் இன்னும் மங்கலாகத் தான் நினைவில். எண்பதுகளிலே அப்பாவும் அம்மாவும் மாற்றலாகி சொந்த ஊரான யாழ்ப்பாணம் திரும்பிவிட, என் நினைவு தெரிந்த நாள் எல்லாமே மலையகம் பற்றி வெறும் வானொலி, பத்திரிகை சார்ந்த செய்தி என்ற எல்லைக்குள்ளேயே இருந்து விட்டது. தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.
காளிமுத்து, ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.
“அம்மா! பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா வளந்துட்டார்ங்கம்மா” ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும் போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே
“போய்ட்டு வர்ரேன் சார்” என்று சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால் விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.

எப்போதாவது ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின் கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல இன்னும் பலர்.

முப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித் திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில் கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும் நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. எனவே தனியாகவே பயணிக்க வேண்டிய நிலை எனக்கு.

வெள்ளவத்தைக் கடற்கரைப் பக்கமாக மாலை நடைப்பயிற்சி செய்து கொண்டே போகும் போது, தீடீரென்று ஒரு யோசனை உதிக்க வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறேன். அங்கே ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பவரைப் பார்த்தால் தமிழராக இருக்கிறார் என்று நான் நினைப்பதற்குள், பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டே தன் செல்போனில் உரக்கத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் குறையும்வரை காத்திருக்கும் என்னை விநோத ஜந்துவாக அவர் பார்க்க, மலையகம் போகும் விஷயத்தை மெல்ல அவிழ்க்கிறேன்.
“அதுக்கு நீங்கள் உடரட்ட மெனிக்கே ரயில் எடுக்கோணும், கோட்டை ஸ்ரேசன் போய்த்தான் புக் பண்ணோணும். நல்ல சுப்பறான ட்ரெயின், கண்ணாடிக் கிளாசுக்கிளால மலை எல்லாம் பார்த்துக் கொண்டு போகலாம், இப்பவே புக் பண்ணுங்கோ, இப்ப ஓவ் சீசன் எண்டதால ஹோட்டல் எல்லாம் எடுக்கலாம் பிரச்சனை இல்லை”.

கொழும்பு வந்து கோட்டே புகையிரத நிலையத்திற்குச் செல்கிறேன். அங்கே தான் மலையகம் பயணிக்க வேண்டிய ரயிலுக்கு ஆசன முற்பதிவு செய்யவேண்டும். முன்பின் அனுபவம் இருந்தால் தானே எனக்கு. ஆசனப்பதிவுக் காரியாலத்தில் இருந்தவரிடம் ஹற்றன் போவதற்கான பதிவு செய்யவேண்டும் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அவரோ விட்டேனா பார் என்று சிங்களத்தில் ஏதேதோ சொல்கிறார். ஒருமாதிரி சமரசமாகி அவர் ஆங்கிலம் பேசுவதற்குள் எனக்கு இரண்டு முழு எலிபண்ட் பிறாண்ட் ஒரேஞ்ச் பார்லி குடிக்கவேண்டிய களைப்பு. உடரட்ட மெனிக்கே ரயிலுக்குப் பதிவு செய்தாச்சு. ஆனால் பயணத்தில் ஒரு மாற்றம், ஹற்றன் தாண்டி நுவரேலியா போய் அங்கிருந்து ஏதாவது பஸ்ஸில் ஹற்றனுக்கு வருவம் என்று நினைத்து நானு ஓயா வரை டிக்கட்டைப் பதிவு செய்தாச்சு. நுவரேலியாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. நானு ஓயா சென்று தான் பஸ் பிடித்து பத்து நிமிட ஒட்டத்தில் நுவரேலியா செல்லவேண்டும் என்றும் கோட்டை பாடம் கற்பித்தது.
கூகிளாண்டவரிடம் முறையிட்டேன் நல்லதொரு ஹோட்டலை காட்டு என்று. அவர் சொன்ன ஹோட்டல் பட்டியலில் ஒன்றுக்கு அழைத்துப் பதிவு செய்தாயிற்று.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் பயணம். ஏழரை மணிக்கே வந்தாச்சு. சரக்கு ரயில்களுக்குப் போகவேண்டிய மூட்டைகளுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் இருந்து வெற்றி எஃப் எம் காதுக்குள் கிசுகிசுக்க நேரம் போனதே தெரியவில்லை. உடரட்ட மெனிக்கே வந்து விட்டது. பதிவு செய்யப்பட்ட முதல்வகுப்பு ஆசனங்கள் எந்தப் பக்கம் என்று அங்கும் இங்கும் எட்டிப்பார்த்து, கும்பலாகப் போன பொலிசாரில் ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கைகாட்ட, ரயிலில் தாவினேன்.

எவ்வளவு நேரம் சிக்கிரமாகப் போய் என்ன பயன், வந்த ரயிலில் உடனடியாக ஏறத்தெரியாமல் என்று முணுமுணுத்தேன். முதல் வகுப்பு ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருக்க என் ஆசனத்தில் இன்னொருவன். டிக்கட்டைக் காட்டினேன், சிரித்துக் கொண்டு வழி விட்டுக் கொண்டு அடுத்த பெட்டிக்குப் போகிறான். ஜன்னல் ஓரமாகப் என் ஆசனம். உல்லாசப்பயணிகள் அதிகம் பயணிக்கும் ரயில் இது. ஆனால் இருக்கைகளில் இறப்பர் பாலும், பிசினும் கிளறி எடுக்கலாம். அடுக்கடி மூட்டைப் பூச்சி போல ஏதோவொரு வஸ்து கிளுக்கிண்டியது. ஏஸி இருக்கிறதாம். பயங்கரப்புழுக்கமாக இருக்க ஜன்னலைத் திறக்கிறேன் திறக்கவில்லை. முன்னால் இருந்தவர் கை கொடுக்கிறார். ஜன்னலை உடைத்துத் திறந்தார். அப்படித்தான் திறக்கவேண்டுமாம். ஒலிபெருக்கியில் சன்னமாக உடரட்ட மெனிக்கே புறப்படப் போகிறாள் என்று அறிவிப்பு வருகிறது. எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இந்த அறிவிப்பாளர் குரல் அப்படியே இருக்கு.

மெல்ல மெல்லத் தன் ஓட்டத்தை எடுக்க ஆரம்பிக்கிறாள். சிட்னியில் நிதமும் அலுத்துப் பயணிக்கும் ரயில் பயணம் போல அல்ல இது. ஜன்னலூடே தண்டவாளங்களுக்கு அப்பால் பரந்து விரியும் மக்களின் வாழ்க்கையைக் காட்டிக் கொண்டே பயணிக்கிறாள். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட்டுக்களைக் கூர்ந்து பார்த்து தன் குறிப்பேட்டில் பேனாவால் கிறுக்குக் கிறிக்கி விட்டுத் தருகின்றார்.

வடே வடே வடே , பார்லி பார்லி பார்லி என்று கூவிக்கொண்டே ரயில் பெட்டிக்குள் தம் வியாபாரத்தை ஆரம்பிக்க வந்து விட்டார்கள் அன்றாடம் இந்த ஓட்டத்தை நம்பிப் பிழைக்கும் வியாபாரிகள். பொல்காவலை வருகிறது. இங்கே தான் யாழ்தேவி மூலம் வரும் வடபகுதி மக்கள் மலையகத்து ரயிலுக்காக மாறவேண்டிய இடம். அதுவும் கடந்து பயணிக்கிறது. எதிர்ப்படும் ஸ்டேஷன்களில் நறுக்கிய மாம்பழத்துண்டங்களுக்கும், அன்னாசிப்பழங்களுக்கு மிளகாய்த் தூள், உப்புப் போட்டு திசுப்பையால் கட்டி, ரயில் நிற்கும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகள். ரயில் பெட்டிகளுக்குக்குள்ளிருந்து கை நீட்டுப்பவர்களுக்குப் பொட்டலங்களைத் திணிக்கும் முனைப்பு காசை வாங்கிவிடவேண்டும் என்பதில் இல்லை என்பது போல சாவகாசமாக ஒவ்வொரு பெட்டியாகக் கொடுத்துக் கொண்டே ரயில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது ஓடியோடிக் காசை வாங்கித் திணிக்கிறார்கள். சிலர் பெட்டிகளுக்குள் தாவி ஏறிக் காசை வாங்கிப் பின் வேகமெடுக்க முன்னர் பாய்கிறார்கள்.

ஒரு மாம்பழ நறுக்குப் பொட்டலம் வாங்கிப் பிரித்துச் சுவைக்கின்றேன். நுனி நாக்கில் உப்பும் மையத்தில் மிளகாய்த்தூளும் கடவாய்ப் பக்கம் இனிப்புமாக வாயில்”ஜலதரங்கம்”.
முன்னால் இளம் காதலர்கள் ஏதோ பேசிச் சிரிக்கிறார்கள். அவன் கோக் வாங்கிப் பாதி குடித்து மீதியை அவளிடம் நீட்டுகிறான்.


பேராதனைச் சந்தியில் பெருமூச்சு விட்டு நிற்கிறாள் உடரட்ட மெனிக்கே. பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற இலங்கையின் புகழ்பெற்ற பெரும் பல்கலைக்கழகத்தை அடைவதற்கான ரயில் நிலையம் அது. ஆச்சி பயணம் போகிறாள் என்ற செங்கை ஆழியானின் நகைச்சுவை நவீனத்தில் இந்த ரயில் நிலையம் எல்லாம் வந்து போகும், அந்த நேரம் யாழ்ப்பாணத்து ஆச்சிதான் நினைவுக்கு வந்தார். யாழ்ப்பாணத்தில் மிகவும் பழைய மரபில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆச்சி தன் மகனுடனும் அவனின் முறைப்பெண்ணுடனும் ரயிலில் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவைச் சித்திரத்தின் கரு.

பசிக்கிறது, ரயில் பெட்டிக்குள் வந்து வியாபாரம் செய்யும் கடலை வடை வியாபாரியிடம் ஒரு பொட்டலம் வாங்கினேன். கைக்கடக்கமான சின்னஞ்சிறு வட்டங்களாக மொறுகிப் பூத்த வடைகள், ஆங்காங்கே செத்தல் மிளகாய் பல் இளிக்க.

ஜன்னலால் தாவிப் பார்க்கின்றேன். வெளியே தண்டவாள எல்லைகளுக்கு அப்பால் உயர்த்திக் கைகாட்டிக் கொண்டே பார்த்துச் சிரித்து ரசிக்கும் சிறார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை ரயில்களை இவர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் இதே பூரிப்புத்தான் அப்போதும் இருக்கும் போல.
நாவலப்பிட்டி ரயில் நிலையம், நாவலப்பிட்டி என்றதும் இங்கே இருந்து ஆன்மீகப் பணி செய்து “ஆத்மஜோதி” என்ற சஞ்சிகையைப் பலவருஷங்களாக வெளியிட்ட ஆத்மஜோதி நா.முத்தையா நினைவுக்கு வருகிறார். அந்தக் காலத்தில் எங்கள் அப்பா என் வயதுக்கு வாசிக்க உகந்தது என்று அங்கீகரித்த ஒரே சஞ்சிகை இது ;)




மலைகளைக் கிளறிக் கொழுந்து விதைத்த தேயிலைத் தோட்டங்கள் பச்சை நிறப் பெருங்கம்பளங்களாகப் பரந்த வெளிகளிலே, கீறல் கோடுகளாக வளையம் போட்ட பாதைகள். ஆங்காங்கே லயன்களும், களஞ்சியங்களும் கவிழ்த்து வைத்த கோப்பைகள் போல. ஜன்னலூடாக மலையகத்தின் எழிலை ரசித்துக் கொண்டு ரயில் பயணத்தைத் தொடர்கின்றேன். அலுக்கவில்லை, கண்கள் குத்திட்டு இயற்கை அன்னை கொடுத்த அந்த மலை முகடுகளையும், தேயிலைத் தோட்டங்களையும், ஆங்காங்கே கடந்து போகும் சிறிதும் பெரிதுமான நீர் வீழ்ச்சிகளையும் என்னுள் ஏற்றுகின்றேன்.
நானு ஓயா அடுத்த தரிப்பு என்று உறுதி செய்து கொண்டு இறங்க ஆயத்தப்படுத்துகின்றேன்.

24 responses so far

Nov 03 2011

படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு

Published by admin under Uncategorized

ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன். அந்த ஒலிவடிவைக் கேட்க

திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் குறித்து தமிழ் விக்கிபீடியா வழியாக
இலங்கையின் வடமாகாணத்தில், அல்வாய் மேற்கு, அல்வாய் பிரதேசத்தில் ‘திக்கம்’ எனும் கிராமத்தில் கணபதிப்பிள்ளை சிதம்பரம்பிள்ளை, பொன்னையா மயிலப்பிள்ளை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த தர்மகுலசிங்கம் தனது ஆரம்பக்கல்வியை நெல்லியடி மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியிலும் பெற்றார். பின்பு தனது பல்கலைக்கழகக் கல்வியை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்த இவர், வரலாற்றுத்துறை சிறப்புப் பட்டதாரியாவார், தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்டு வசித்து வருகின்றார். இவரின் மனைவி லட்சுமிதேவி.

தொழில் ரீதியாக 1977 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை ‘விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியாக’ நாட்டின் பல பாகங்களிலும் சேவையாற்றியுள்ளார். தனது கல்வித் தகைமைக்கேற்ப தொழில் கிடைக்கவில்லை என இன்றுவரை ஆதங்கப்படும் இவர், 2003ஆம் ஆண்டிலிருந்து சேவை ஓய்வுபெற்றார்.

படிக்கும் காலங்களில் நகைச்சுவை ததும்ப எழுதுவதும், நகைச்சுவையாக நண்பர்களுடன் பழகுவதும் இவருக்கு இயல்பாகவே காணப்பட்ட உணர்வுகளாக இருந்தன. இந்த அடிப்படை மனோநிலையைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் இருந்தும், பின்பு யாழ்ப்பாணத்தில் இருந்தும் வெளிவந்த நகைச்சுவைச் சஞ்சிகையான சிரித்திரன் சஞ்சிகையை தனது இலக்கிய ஈடுபாட்டின் வெளிப்பாட்டு முதற்களமாக அமைத்துக் கொண்டார்.

1966ஆம் ஆண்டில் சிரித்திரன் பத்திரிகையில் ‘நாட்டுப்புற பாடல்களும், நகைச்சுவைகளும்’ எனும் தலைப்பில் இவரின் கன்னியாக்கம் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நகைச்சுவை ததும்ப பல்வேறு தலைப்புகளில் பல்வேறுபட்ட கட்டுரைகளையும், ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 1987 வரை சிரித்திரன் பத்திரிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். இதன் மூலமாக ‘நகைச்சுவையால் சிந்திக்கும் ஒரு எழுத்தாளன்’ என இலக்கிய உலகம் இவரை இனம்கண்டு கொண்டது.

“சிரித்திரன் சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நின்று அரும்பணியாற்றியவர் இவர்” என்று செங்கை ஆழியான் ‘கார்ட்டூன் ஓவிய உலகில் நான்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிரித்திரன் சஞ்சிகையில் இவர் பல்வேறு புனைபெயர்களில் எழுதியுள்ளார். அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், திக்கவயல்தர்மு என்பன இவரின் புனைபெயர்கள்.
எழுதியுள்ள ஊடகங்கள்

நகைச்சுவையாக்கங்கள், தத்துவக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை முன்னூற்றுக்கும் மேல் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் சிரித்திரன், எக்காளம், மல்லிகை, தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினக்கதிர் (மட்டக்களப்பு), உதயன், சஞ்சீவி, ஈழநாடு, இடி, ஞானம், ஆலயமணி (சஞ்சிகை), தமிழமுது ஆகிய தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.

இவர் இதுவரை எட்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

தத்துவப்படகு 1985
வரலாற்றில் தமிழும், தமிழரும் 1999
சிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003
திருவள்ளுவர் திடுக்கிடுவார் 2004
மட்டக்களப்பில் கண்ணதாசன் 2003
தமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002
சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004
நாட்டுக் கருடன் பதில்கள் 2005

வெளியிட்ட சஞ்சிகைகள்

இவரை ஆசிரியராகக் கொண்டு இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தன.

‘சுவைத்திரள்’ என்ற நகைச்சுவை
‘கவிதேசம்’ என்ற கவிதைக்கான இலக்கியச் சிற்றேடு

விருதுகள்

இவரின் இலக்கியச் சேவையினைப் பாராட்டி கண்டி கலையிலக்கியக் கழகம் நடத்திய சிரித்திரன் சுந்தர் நினைவு விழாவில் ‘இலக்கியச்சுடர்’ எனும் கௌரவத்தை வழங்கியது.

4 responses so far

Oct 06 2011

Steve Jobs படைத்த Apple உலகில் நான்

Published by admin under Uncategorized


Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs

கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகுதியில் இருக்கும் Apple Store இற்க்குக் கால்கள் இழுக்க அந்தத் திசையில் நடந்தேன். அந்த வளாகத்தின் முகப்பில் இழவு வீட்டுக்குக் கூடி நிற்கும் இனசனங்கள் கூட்டம் திரளத் தொடங்கியது. கடை முகப்பில் Steve Jobs இன் புகைப்படத்துக்கு முன் மலர்க்கொத்து ஒன்று. அங்கிருந்து மெல்லக் கிளம்பி Dymocks புத்தகசாலை சென்று அங்கே நிரப்பியிருந்த புத்தகப் பரப்புகளில் இருந்து iCon என்ற Steve Jobs குறித்த நூலை வாங்கிக் கொண்டு திரும்புகின்றேன். காலை வந்த செய்தியை உணர்ந்த அதே நிலையில் இன்னும் வைத்திருக்கும் அளவுக்கு நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தி விட்டார் இந்த மனிதர். கடந்த இரண்டு ஆண்டுகாலம் என்னைச் சுற்றி இயங்கிய உலகத்தை நினைத்துப் பார்க்கின்றேன். இவையெல்லாமே i வரிசையாக அமைந்திருக்கின்றன.

Steve Jobs என்ற மனிதரின் வாழ்க்கையை தேடிப்பிடித்து அவர் இது நாள் வரை செய்த சாதனைகளைச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு அவரை நான் அறிந்திருக்கவில்லை அல்லது ஆர்வமும் ஏற்படவில்லை. ஒரு சில வருஷங்களுக்கு முன் என்றோ ஒரு நாள் இலத்திரனியல் கடைவளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட iMac கணினியின் புறத்தோற்றத்தைக் கண்டு மயங்கிக் கூட வந்த நண்பனிடம் இந்தக் கொம்பியூட்டரை வாழ்நாளில் வாங்கி வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையைச் சொல்லிவைத்ததோடு சரி. எப்போதோ என் மனக்கிணற்றில் போட்ட அந்தக் கல் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மிதந்தது. இடையில் iPhone என்ற கைத்தொலைபேசியின் வரவு இந்த Apple உலகம் எப்படியிருக்கும் என்று ஒரு முன்னோட்டம் வைக்க உதவியது. அதற்கும் முன்னால் வாங்கிய iPod வெறும் பாட்டு உலகத்தோடு சுருங்கியதால் ஆப்பிள் உலகத்தை அதிகம் தெரிந்திருக்க வைப்பிருக்கவில்லை.
அப்போது iMac வெறும் காட்சிப் பொருள் அல்ல, விண்டோஸ் இற்கு மாற்றீடான இன்னொரு பொருள் என்ற நிலையை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லும் யுகப்புரட்சி மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வந்தது. அப்போது என்னிடம் பாவனையில் இருந்த கணினியும் மெல்லத் தன் ஓட்டத்தை நிறுத்த, iMac ஐ வாங்கும் வேளை வந்தது. ஆனால் எனக்குத் தெரிந்த நண்பர்கள் யாருமே வைத்திருக்காத ஒன்றை வாங்கிவிட்டுப் பின் ஏதாவது தொல்லைகள் வந்தால் என்ன செய்ய என்ற ஒரு தயக்கமும் இருந்தது. எனவே ட்விட்டரில் iMac பாவனையாளர்களின் அனுபவங்களைக் கேட்டேன். 14 வருஷங்களுக்கு முன் மெல்பனில் பல்கலைக்கழக வாழ்வில் நான் வாங்கிய முதற்கணினியை சுவாமி அறையில் வைத்துப் பூஜிக்க வைத்து விட்டுத் தான் அதை இயக்க வைத்தான் கோயம்புத்தூரில் இருந்து வந்து என்னோடு தங்கியிருந்த சகாபாடி. இடையில் எத்தனையோ கணினிகள் வந்து போய்விட்டன. ஆனால் iMac ஐ வாங்கித் திறந்த நாள் என் முதல் கணினியை வாங்கிய அதே த்ரில்லோடு அமைந்தது. iMac இன்று இரண்டாவது ஆண்டாக என் வாழ்வோடு பயணிக்கின்றது. GarageBand இல் இசைத்துணுக்குகளை ஒலிப்பதிவு செய்யவும் ரிங்டோனாகவும் மாற்றவும் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டேன். 12 வருஷமாக விண்டோஸ் பாவனையாளனாக இருந்து திடீரென்று நுழைந்த ஆப்பிள் உலகம் புதுமையாகவும் தினம் ஒரு பாடம் நடத்தும் பள்ளியாகவும் இருக்கின்றது.


iMac வீட்டுக்கு என்றால் வீதிக்கு iPhone என்று ஏற்படுத்திக் கொண்டேன். ரயிலில் பயணிக்கும் போது வானொலி கேட்க ஏதுவாக tuneinradio ஐ இறக்கிக் கொண்டேன். இன்றுவரை அதுதான் என் வழித்துணை. மெல்ல மெல்லத் தேவையான ஒவ்வொரு iPhone app ஐயும் இறக்கிப் பார்த்துச் சோதனை செய்து அதன் பயன்பாடுகளை விலாவாரியாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நாளாக முனைப்பாக மாறிப்போனது. காரில் பயணிக்கும் போது அது நாள் வரை இருந்த சீடி ப்ளேயரில் இருந்த நாட்டம் விலகி iPhone வழியாக இணைய வானொலிகளைக் காரின் FM Tuner வழி இயக்கிக் கேட்பது இன்னொருபக்க சுவாரஸ்ய அனுபவம்.

நண்பர்களின் பிறந்த நாள், களியாட்டங்களுக்குப் பாடல்களைப் போடும் பொறுப்பும் அவ்வப்போது கிடைக்கும் கெளரவங்களில் ஒன்று. இதற்கும் பெரிய சீடி ப்ளேயரைக் கட்டிக்காவ வேண்டுமே என்று நினைத்தபோது யதேச்சையாக ஒரு இலத்திரனியல் கடையில் கண்ட Party Walker இன்னொரு தீர்வைத் தந்தது. இந்த Party Walker இன் தலையில் ஐபோனையோ ஐபொட் இனையோ செருகினால் போதும் அட்டகாசமான உலகத்தரத்தில் இசை முழங்கும். அதையும் வாங்கிவைத்துக் கொண்டேன். களியாட்டங்களுக்கு மட்டுமன்றி வீட்டில் இருக்கும் போதெல்லாம் சத்தமாகப் பாட்டைக் கேட்டுக் களி கொள்ளும் தருணங்களில் Party Walker துணை நிற்பார்.

அவ்வப்போது சிட்னியின் நகர மையத்தில் அமைந்திருக்கும் Apple Store சென்று என்ன சமாச்சாரங்கள் புதிதாக வந்திருக்கின்றது என்று ஆராய்வது என் குழந்தைத்தனமான வேலைகளில் ஒன்று. அப்படியாக நெடுநாள் கண்வைத்துக் கியூவில் நின்று வாங்கிய பெருமையைக் கொடுத்தது iPad 2 இன் வரவு. தாயகத்துக்குப் பயணப்பட்ட போது Dialog Sim பொருத்தி iPad 2 வழியாக அப்போதெல்லாம் உலகைத் தரிசித்தேன். இப்போதும் படுக்கைக்குப் போகும் முன் iPad இல் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வராவிட்டால் எனக்கு இருப்புக் கொள்ளாது.


நண்பர் கே.ஆர்.எஸ் சென்ற மாதம் காட்டிய இன்னொரு சமாச்சாரம் தான் நான் சமீப காலத்தில் வாங்கிய இன்னொரு ஆப்பிள் சார்ந்த சமாச்சாரம். வானொலி ஊடக உலகில் இருக்கும் இதுநாள் வரை நேரடியாக வானொலி ஒலிப்பதிவுக்கூடத்துக்குக் கலைஞர்களையோ அல்லது பேட்டி காணும் இன்ன பிறரையோ அழைத்து வந்தே ஒலிப்பதிவு செய்யும் சாத்தியம் இருந்து வந்தது. ஆனால் iRig என்ற ஒலிவாங்கி ஐபோன் அல்லது ஐபாட் ஐ இணைத்து ஒலிப்பதிவுக்கூடம் தவிர்ந்த வெளிப்புறங்களிலும் வானொலி சார்ந்த பேட்டிகளைச் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றேன்.

இப்படியாக ஆப்பிள் உலகத்தின் ஒவ்வொரு சாதனங்களோடும் என்னைத் தீவிரமாக இணைக்க முடிந்தது அந்த உலகத்தைக் காட்டிய பிதாமகர் Steve Jobs உழைப்புத் தான். என்னைப்போல எத்தனையோ மில்லியன் நுகர்வோரைக் கவர்ந்த அந்த மகாமனிதரின் செயல்திறனும் காலத்துக்கேற்ப நுகர்வோர் சந்தையில் ஏற்படுத்தி வந்த சத்தமில்லாப்புரட்சிகளுமே இந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட மறைமுகமான விளம்பரங்களை ஆப்பிள் உலகின் பாவனையாளர்களாலேயே கொடுக்கும் அளவுக்கு மாறியிருக்கின்றது. சாம்பல் பின்னணியில் கடித்த கறுத்த ஆப்பிள் இந்த முத்திரைக்குள் அடங்கி அமைதியாக இருக்கின்றது Steve Jobs இன் ஆன்மா.

11 responses so far

Next »