ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் பேசுகிறார்

admin July 15th, 2010

“உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது” எழுபதுகளில் ஆரம்பித்து இன்றும் நம்மவர் நெஞ்சங்களில் மெல்லிசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இந்த ஈழத்து மெல்லிசைப்பாடலுக்குப் பின்னால் அந்தக் காலத்தில் புகழ்பூத்து விளங்கிய எம்.பி.பரமேஷின் எழுத்தாக்கமும், குரலினிமையும் இணைந்திருக்கின்றது. ஈழத்துப் படைப்பாளிகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்தேன். ஈழத்தின் முக்கியமானதொரு இசைக்கலைஞனின் வாழ்வின் பெரும்பகுதியை வானலை வழியே பகிரும் வகையில் இரண்டு மணி நேரமாக அவரது வாழ்வியல் அனுபவங்களை எங்களுக்குத் தந்தார். அதனை இங்கே ஒலி, மற்றும் எழுத்து வடிவ ஆவணமாக உங்களுக்குப் பகிர்கின்றேன்.

எம்.பி.பரமேஷ் அவர்களின் புகழ்பூத்த மெல்லிசைப்பாடல் “உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது பாடலைக் கேட்க

எம்.பி. பரமேஷ் அவர்கள் வழங்கிய பேட்டியின் பகிர்வு ஒலி வடிவில்

கேட்க

தரவிறக்க



இந்த இரண்டு மணி நேர ஒலிப்பகிர்வைபெற்ற திரு எம்.பி.பரமேஷ் அவர்கள் இதை சந்திரகெளரி சிவபாலன் மூலமாக முழுதுமாகத் தமிழில் தட்டச்சிப் பகிர்ந்து கொண்டதால் அதனை எழுத்து வடிவ ஆவணமாகவும் பகிரக் கூடியதாக இருக்க்கின்றது. அந்த வகையில் சந்திரகெளரி சிவபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

ஈழத்து இசை ரசிகர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு நிகராகவும் மிகையாகவும் ஈழத்து மெல்லிசைப் பாடல்களையும் பொப் இசைப் பாடல்களையும் ரசித்தனர், போற்றிப் பாதுகாத்தனர். அந்தவகையில் ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவ பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர் எம்.பி. பரமேஷ் அவர்கள் இன்றைய தித்திக்கும் வெள்ளி நிகழ்ச்சியில் இணைந்திருக்கின்றார்.

~~உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது’’ என்ற பாடலுடன் எம்.பி. பரமேஷ் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அறிமுகமாகின்றார்.

எம்.பி. பரமேஷ் : வணக்கம்! பிரபா

கானாபிரபா:
ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் அவர்களே, உங்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இன்றைய சிறப்பு நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்கான நன்றியையும் தெரிவித்துக் கொண்டு இந்த அரிய சந்தர்ப்பத்திலே உங்கள் ஆரம்ப காலம் இசைப் பயணம் எப்படி அமைந்திருந்தது என்னும் விபரத்தைச் சற்று
விரிவாகச் சொல்லுவீர்களா?

எம்.பி.பரமேஷ்:
ஆரம்பகாலத்திலே இவ்வாறு வானொலிகள் என்னைப் பேட்டி காணவேண்டும். வானொலிகளில் என் பாடல்கள் ஒலிக்க வேண்டும். திரைப்படப்பாடல்களுக்கு இணையாக என் பாடல்கள் அமைய வேண்டும் என்ற எவ்வித கற்பனைகளும் எனக்கு இருந்ததில்லை. எனது தந்தையார் அவர்கள் ஒரு பிள்ளைப் பாட்டுக் கவிஞர். நீங்கள் அனைவரும் படித்த பாலபோதினி என்னும் அரிவரிப் புத்தகமாகிய பாலபோதினியில் ~~அந்த மரம் ஆலமரம் அழகான நல்ல மரம்’’ என்ற பாடலை எழுதி பிள்ளைப்பாட்டுக் கவிஞர் என்ற கௌரவ விருதை இந்தியக் கலைஞர்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார். அவரின் அருளும்; அவரிடம் நான் கற்ற தமிழறிவுமே என்னைக் கவிஞனாக்கியது. சில இசைக்குழுக்களில் பாடுவதற்கு நான் ஆசைப்பட்டேன். ஆனால் சந்தர்ப்பங்கள் நழுவி விட்டன. ஆனால், இசைத்துறையில் எனக்கிருந்த ஆர்வத்திற்கு யாரும் காரணமல்ல. எனது தாயார் ஹார்மோனியம் வாசிப்பார். அவரிடமிருந்தே நானும் கோணோஷும் ஹார்மோனிய வாத்தியத்தைக் கற்றுக் கொண்டோம். ஆனால், அவர் எங்கள் குருவாக இருக்கவில்லை.

கானா பிரபா:
உங்களுக்கு இந்த இசையின் மீது எப்படி நாட்டம் உருவானது? அதன் தொடர்ச்சியாக நீங்கள் பாடகரான கதையை நான் அறிய விரும்புகின்றேன். அத்துடன் நீங்கள் இப்படி ஒரு சிறந்த பாடகனாவதற்கு உங்கள் தந்தையாரின் க வித்திறனும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றது இல்லையா?

எம்.பி.பரமேஷ்:
நிச்சயமாக. அவருடைய அருளும். அவர் என்னை ஊக்குவித்த விதமும் இந்த அளவிற்கு என்னை உருவாக்கியிருக்கின்றது. நாங்கள் எல்லோருமாக குடும்பத்தில 8 பிள்ளைகள் அதில் நான் கூடுதலாக அவருடைய புத்தகங்ளைச் சேகரித்தும் அவருடன் பல இடங்களுக்குச் சென்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சைவநற்சிந்தனை என்ற நிகழ்ச்சிக்கு அவர்; சொற்பொழிவாற்றச் செல்லும் போது அவருடன் சென்றும் என் தந்தையுடனேயே அதிகமான பொழுதைக் கழிப்பேன். அங்கு பிரபல கலைஞர்கள் விவியம் நமசிவாயம், திரு.நடராஜா, திரு சுந்தரலிங்கம் இவர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் என்னைப் பாடும்படிக் கேட்பார்கள். நானும் பாடுவேன். அப்போதே அவர்கள் என் தந்தையிடம் சொல்வார்கள் உங்களுடைய மகன் ஒரு பாட்டுக்காரனாக வருவான் என்று. அது எனக்கொரு ஆசீர்வாதமாகக் கிடைத்தது. ஆனால், இசைத்தட்டு தயாரிக்க வேண்டும் என்ற முயற்சி எப்படி வந்ததென்றால், சில இசைக்குழுக்கள் எமக்கு முன்பு இருந்தன. அவற்றில் நான் பாடியிருக்கின்றேன். பாடகர்கள் இல்லாத போது ஆரம்பப் பாடல்கள் கூடப் பாடியிருக்கின்றேன். பின் வேறு கலைஞர்கள் வந்த போது அதிலிருந்து விலகிக் கொண்டேன். அவ்வேளை ஒரு இசைக்குழு அமைக்க வேண்டும் என்று நாம் எண்ணிய போது எங்கள் வகுப்பில் படித்த முகுந்தன், மோகன், கங்கா, சிவானந்தன், மற்றும் எனது வகுப்பு நண்பர்கள் என்னை வைத்து ஒரு இசைக்குழு ஆரம்பிப்போம் என்ற போது கோணேஸ் அவர்களும் இணைந்து கொண்டார்கள். அவருடன் இணைந்தே மகேஷ் அவர்களும் இணைந்து கொண்டார்கள். இந்த இணைப்பிலேயே பரமேஷ்கோணேஷ் என்ற பெயரும் உருவானது. இப்படியான முயற்சிகளில் நாம் பெற்ற வெற்றிகளில், முதலில் நான் பாடிப்புகழ் பெற்ற ~~உனக்குத் தெரியுமா…..’’ என்ற பாடலானது முதலில் இந்த வரிகளில் அமையவில்லை. ~~துணிந்து செல்லடா! துயர் சுவரைத் தாண்டடா! பணிந்து செல்வதா’’ என்ற வரிகளில் ஒரு வீரம் சொரியும் பாடலாகவே அமைந்திருந்தது. இந்தப் பாடலைத்தான் காதல் பாடலாக நான் மாற்றிப் பாடினேன். இதுவே இசைத்தட்டிலும் வந்தது. இதுவே எனது ஆரம்பம். இதற்கு முன் எப்படி ஒவ்வொரு படிகளாக நான் முன்னேறினேன். என்பது பற்றிய விபரங்களை எனது அடுத்த புத்தகத்தில் விபரமாக எழுதுகின்றேன்.

கானா பிரபா
நிச்சயமாக ~~; இனிய இசைப்யணங்களில்’’ என்ற உங்கள்
புத்தகத்தில் உங்கள் ஆரம்பகால நிகழ்வுகள் ஆரம்ப கால
அழகான புகைப்படங்கள் எல்லாம் இணைக்கப்பட்டு மிக
அழகாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த நூலிலுள்ள
விடயங்களைப் பார்க்கும் போது இந்த காலகட்டத்திலே ஒரு
மெல்லிசை என்ற வடிவத்திலே இப்படியான பாடல்கள்
இல்லாத காலத்திலே ஒரு இடத்தைத் தக்க வைக்க
வேண்டும் என்ற ஒரு முனைப்பு உங்களுக்கு
வந்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் நித்திகனகரெட்ணம்
அண்ணா அவர்கள் பொப் இசைப் பாடல்கள் என்னும் ஒரு
பாணியிலே தன்னுடைய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
இந்த மெல்லிசை என்றால் என்ன என்பது பற்றி
உங்களுடைய பார்வையில் கூறுவீர்களா?

எம்.பி.பரமேஷ்: நித்திகனகரெட்ணம் அவர்கள் எனக்கு மூத்தவர். எனது
உறவினரும் கூட அவருக்குக் கொடுக்கப்பட்ட ~~பொப் இசை
பிதா’’ என்ற கௌரவவிருது மிகமிகப் பொருத்தமானது. யார்
அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்கள் என்பது எனக்குத்
தெரியாது. இந்த பொப் இசை என்னும் துள்ளிசையில்
முதன்முதலில் தமிழில் வந்த முதல் பாடல் பாடியவர்
சந்திரபாபு அவர்கள். இவர் இலங்கையில் பிறந்தவர். இதன்
பின் இல் கிற்றார் வாத்தியத்தைக் கையில்
வைத்துக் கொண்டு நித்திக்கனகரெட்ணம் அவர்கள்
முதல்முதலில் பாடினார். ஆனால், இசைத்தட்டு முதல்முதலில்
செய்தது நாங்கள் தான். இதை நான்
ஏற்றுக்கொள்ளுகின்றேன். இக்காலத்தில் ஏ.இ. மகோகரன்,
அமுதன் அண்ணாமலை, ரெனிஸ் சிவானந்தன், ராமச்சந்திரன்,
டேவிட் ராஜேந்திரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
இருந்து பலர் பொப் இசைப் பாடல்களைப் பாடியிருந்தார்கள்.
இதைவிட அப்துல் கமீட் அவர்கள், ஒவ்வொரு
சனிக்கிழமைகளிலும் பொப் இசை நிகழ்ச்சியை மிகமிகத்
திறமையாக நடாத்தியிருந்தார். அதைக் கேட்பதற்கு அத்தனை
வானொலிப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடுகளிலும் இயங்கிக்
கொண்டிருக்கும். அக்காலம் போல் மீண்டும் வரவேண்டும்
என்பதே எனது ஆசை. அக்காலத்தில் சின்னமாமியே பாடல்
எப்படிப் பிரபலம் அடைந்ததோ அதே போல் இக்காலத்திலும்
ஏ.இ. மனோகரன், நித்திகனகரெட்னம் பாடலை எல்லோரும்
விரும்பிக் கேட்கின்றாhகள். திருகோணமலையைச்: சேர்ந்த திரு
இமானுவேல் அவர்கள் ~~சித்திரக் கன்னியர் ஊர்வலம்
போகும்’’ என்ற பாடலைப் பாடியிருந்தார். இதைவிட
டென்மார்க் நாட்டில் வாழும் திரு சன் அவர்கள் ~~குளிரடிக்குது
கண்ணே பொன்னம்மா….’’ பாடலைப் பாடியிருந்தார். இதுவே
சிங்களத்தில் ~~ஒஞ்சிலிசிலி சில்ல மலோயா….’’ என்ற வடிவில்
வந்தது. ஒரு தமிழர் பாடிய பாடல் சிங்களத்திலும் மேலாக
ஒலித்ததும் பெருமையான விடயமாக இருந்தது. இது பற்றி
நீங்கள் அறிந்தவற்றையும் கூறுங்களேன.;

பிரபா: இல்லை இது பற்றிய விபரங்கள் நீங்கள் சொன்னபோதுதான்
அறிந்து கொண்டேன். ஆனால் இந்த மெல்லிசைப் பாடலில்
தனித்துவம் மிக்கவராக நீங்கள் இருக்கின்றீர்கள் அந்த
மெல்ல்லிசைப்பாடலின் வரைவிலக்கணங்கள் பற்றிச்
சொல்வீர்களா?

எம்.பி.பரமேஷ்: மெல்லிசை என்பது பாடலை
இசையமைப்பவர் அந்தக் கட்டத்திற்குள் போய்ப் பாடலை
இசையமைப்பார். இது அந்த நேரத்திற்குரிய தன்மையைக்
குறிக்கும். திருமணவீட்டில் இசைக்கும் மங்கள இசை எவ்வாறு
மக்கள் மனதிற்குள் சென்று அந்த திருமணவிழாவை அவர்கள்
அநுபவிக்கச் செய்கின்றதோ, அந்த நடைபெறும் சம்பவத்திற்கு
எது மென்மையாக அமைகின்றதோ அதுவே மெல்லிசை
எனப்படும். உண்மையில் மிகமிகக் கடினமான இசை. கர்நாடக
இசையினை 5,6 வாத்தியங்களுடன் இணைத்து ஆலாபனை,
தாளக்கட்டு இவையெல்லாம் சேர்த்து இசைக்கின்றார்கள்.
ஆனால் மெல்லிசை அப்படியல்ல எங்களுக்கென்று ஒரு
உரிமை இருக்கின்றது. நாம் எந்த ராகத்தையும் எதற்குள்ளும்
புகுத்துவோம். தவறான இசையைக் கூட
கொடுத்துவிட்டு அதற்கு ஒரு இனிமையைப் புகுத்துவோம்.
அதனாலேயே ஒரு இனிமையான இசையும் வருகின்றது.
இதற்கு கர்நாடக இசையில் சந்தர்ப்பம் இல்லை. இதனால்
மெல்லிசை உடனேயே மக்கள் மனதில் இடம்பிடிக்கின்றது.
உருளைக்கிழங்கு இருக்கின்றதே, அதை ஏழைகளின் உணவு
என்பார்கள். ஆனால், அதுவே இன்று பிரதான உணவாக
இருக்கின்றது. இதே போல்த்தான் நாட்டுக்கூத்து, நாட்டுநடனம்
இவையெல்லாம் காட்டுமிராண்டிகள் செய்யும் நடனம் என்று
ஒரு காலத்தில் இருந்தது. இதே நடனம் தான் பின்
துள்ளிசையாக மாறியது. ~~பொப் இசையில் பாடல் கேட்டு
ஆட்டம் போடுங்கள்’’ என்ற பாடலில் இதுபற்றி நான்
குறிப்பிட்டிருக்கின்றேன். மெல்லிசை என்பது மெல்லப்
பாடுவதல்ல. மெல்லிசை என்பது மென்மை இசை. ஒரு
கவிஞன் சூழ்நிலைக்கேற்ப பாடலை இயற்ற இந்த
சூழ்நிலையை மெருகேற்ற இசைப்பதுதான் மெல்லிசை
எனப்படும். சோகவரிகள் என்னும் போது அந்த
சோகவரிகளுக்கேற்ப சோகத்தைக் கூட்டுவது தான்
மெல்லிசை. இது மிகக் கடினமான இசை.

கானாபிரபா:
ஆம் மிகச்சிறப்பாக மெல்லிசைக்குரிய விளக்கத்தைக்
குறிப்பிட்டிருந்தீர்கள். இலஙகை வானொலி இதற்கு ஆற்றிய
பங்களிப்பினையும் பி.எச். அப்துல்கமீட் மெல்லிசை என்றொரு
நிகழ்ச்சி நடத்தியமை பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இலங்கை வானொலியிலே உங்கள் அறிமுகம் எப்படி
ஏற்பட்டிருந்தது?

எம்.பி.பரமேஷ்: இலங்கை வானொலியில் மதிப்பிற்குரிய எஸ். மயில்வாகனம்
அவர்கள். தற்பொழுது கனடாவில் வசிக்கும் நாகலிங்கம்
அவர்கள் ஐ.ஏ.எஸ் நிறுவனத்தினால் அரங்கேற்றம் என்ற
நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். இதில் பலரும் போய்ப்
பாடுவார்கள்: லத்தீப் அவர்கள் இசையமைத்துக்
கொண்டிருந்தார்கள். பாடலைக் கொடுப்பார்கள். பாடகர்கள்
பாடுவார்கள். மூன்று பாடல்களைக் கொடுப்பார்கள். இந்த
மூன்று பாடல்களைப் பாடுபவர்களில் முதல்
இடம்பிடிப்பவருக்கு 25 ரூபாய்கள் பரிசாகக் கிடைக்கும். இந்த
வேளையில் எங்கள் இசை நிகழ்ச்சிகளைப் பார்த்த
மயில்வாகனம் அவர்களும் செந்தில்மணி அவர்களும் இந்த
அரங்கேற்றம் நிகழ்ச்சிக்கு ஒலிப்பதிவு செய்யும் படிக்
கேட்டார்கள். நானும் கோணேஸ{ம் சம்மதித்து ஒரே
தடவையில் 5 வார நிகழ்ச்சிகளை ஒரே தடவையில்
ஒலிப்பதிவு செய்தோம். இது வழமையாக பம்பலப்பிட்டியில்
இருந்த ரணவீர ஸ்ரூடியோவில் நடைபெறும். இங்கு பலரும்
வருவார்கள். லத்தீப் அவர்கள் போலன்றி இசைத்தட்டிலுள்ள
இடை இசையை அப்படியே வாசிப்போம். இதனால் ஒரு தனிப்
பெருமை எங்களுக்குக் கிடைத்தது. 52 வாரங்கள் தொடர்ந்து
இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நான் அங்கு பாடிய பாட்டு ~~பட்டுப்
பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா’’ என்ற பாடல். இந்தப் பாடல்
வேதா அவர்கள் இசையமைக்க ஜெய்சங்கர் நடித்திருநந்தார்.
மிகப் பிரபல்யமான பாடல் அதில் முதல் பரிசு எனக்குக்
கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்குத் திருக்கோணமலையிலிருந்தும்
சிலரை அழைத்து வரும்படிக் கேட்டிருந்தார்கள். அப்படிப்
பாடியவர்கள் தான் என் மனைவி மாலினிக்கு முன் என்னுடன்
பாடியவர்கள். இப்போது கனடா நாடடில் வாழ்ந்து
கொண்டிருக்கும் கே.ஆர்.கமலா அவர் சகோதரி பமலா, விமலா
ஆகியோர் எமிலி கிரௌடன் அவர் இப்போது எங்கே வாழ்ந்து
கொண்டிருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது. மற்றும் பலர்.
இவர்களைத்தான் பின்பு எமது இசைக்குழுவில் சேர்த்துக்
கொண்டோம். இவ்வாறே அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து
கொண்டிருக்கும் ரோலின் வில்லியம் என்ற பெண்மணி கூட
பாடியிருந்தார். இவர் ~~ பளிங்கினால் ஒரு மாளிகை’’ என்ற
பாடலைப் பாடினார். இதைவிட ரெஜினா,
கே.எஸ்.பாலச்சந்திரன், கெங்காதரன் போன்றோரும்
எங்களுடன் பாடினார்கள். இந்த 52 நிகழ்ச்சிகளையும்
எத்தனை ஆயிர்ம் பேர் கேட்டிருப்பார்கள். இலங்கை
வானொலியில் ஒருவர் பாடிவிட்டால், தமிழகம் எங்கும்
கேட்கும். ஏனென்றால், வானொலி என்றால் அது ஒன்றுதான்
வேறு ஒன்றும் இருக்கவில்லை. சினிமாப் பாடல்கள் என்றால்
அது இலங்கை வானொலிதான். தற்பொழுதுதான்
இந்தியாவில் சினிமாப் பாடல்களை வானொலிகளில்
ஒலிபரப்புகின்றார்கள். இந்த சந்தர்ப்பம் தான் எங்களுக்கு
அமைந்திருந்தது. அதற்கு எஸ்.பி.மயில்வாகனம்
அவர்களுக்கும் நாகலிங்கம் அவர்களுக்கும் நன்றி கூற
வேண்டும். மற்றது பி.எச்.அப்துல் கமீட் அவர்கள் மெல்லிசை
நிகழ்ச்சி நடத்தவில்லை. பொப் இசை நிகழ்ச்சியையே
சனிக்கிழமைகளில் 3 மணியிலிருந்து 3.30 மணிவரையில்
நடத்தியிருந்தார்.

கானா பிரபா: ஆமாம். இந்த பொப் இசை என்று நிகழ்ச்சியில் ஆரம்ப
காலகட்டங்களில் நித்தி அண்ணா போன்றவர்கள்
பாடியிருப்பார்கள் இல்லையா?

எம்.பி.பரமேஷ்: நிச்சயமாக இல்லை. நான்,
கோணேஷ், நித்தி, ஏ.இ.மனோகரன் போன்றோர்
வானொலிக்குள் போகாமல் வெளியிலிருந்தே
பிரபலமானவர்கள். பிரபலமான பின்பு தான் வானொலிக்
கலையகத்திலிருந்து அழைப்புக்குள் கிடைத்தன.
பரமேஷ்கோணேஷ் இசைத்தென்றல் நிகழ்ச்சிக்கு
வானொலியில் 15 நிமிடங்கள் விளம்பரஙங்கள் கொடுத்தோம்.
நாங்களாகவே இசைத்தட்டு தயாரித்துக் கொடுத்த பின்பு
தான் வானொலியில் அது ஒலிபரப்பப்பட்டு எங்களைப்
பிரபலமாக்கியது. நித்தி;, மனோகரன் கூட இப்படித்தான்.
இதனால் வானொலிக்கு வெளியில் நின்று நாம்
பிரபல்யமானோம்.

பிரபா:
இப்போது எம்.பி.பரமேS அவர்களுடன் உரையாடுவதற்கு வந்திருப்பவர் பொப்
இசையின் பிதா எனப் போற்றப்படும் நித்தி கனகரெட்ணம்
அவர்கள்.

நித்திகனகரெட்ணம்:வணக்கம் பரமேஸ். பரமேஸ் அவர்கள் எனது உறவினரும்
கூட. பரமேஸ் அவர்கள் சொன்னது போல் நான் அந்த
இசையை 1967 இல் ஆரம்பிக்கும் போது பொப் இசை என்ற
பெயரை வைக்கவில்லை. சிவநாயகம் ஆசிரியர் அவர்கள்
தான் இந்தப் பெயரை வைத்தார். பரமேஸ் அவர்கள்
ஆரம்பித்த காலகட்டத்திலேயே நானும் அந்த பொப்;
இசைக்குள் குதித்துக் கொண்டேன்.

பிரபா: அந்தக் காலகட்டத்திலே பொப் இசை, மெல்லிசை போன்ற
வடிவங்களுக்கு ரசிகர்களுடைய வரவேற்பு எப்படி இருந்தது.

நித்திகனகரெட்ணம்:மிகவும் வரவேற்பு இருந்தது பரமேஸ் சொன்னது போல்
வானொலி என்ற வட்டத்தினுள் இல்லாமல் வெளியிலேயே
திருகோணமலை யாழ்ப்பாணத்தில் பிரபலமடைந்து 2
வருடங்களுக்குப் பின்பு தான் வானொலி எங்களை
தங்களுக்கூடாகப் பாடும்படி அழைத்தது. அதற்கு முன்னமே
ஒரு தனித்துவமாகவே இயங்கினோம்.

கானாபிர: வேறு வேறுபட்ட இசை வடிவங்களில் இலங்கையில்
பிரபலமடைந்த நீங்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய
மேடைகள் அக்காலத்தில் அமைந்திருந்தனவா?

நித்திகனகரெட்ணம்:இல்லை, இல்லை. நான் 3 வகையான கிற்றார் வாத்தியத்தை
வைத்துக் கொண்டு பொப் இசையைப் பாடிக்
கொண்டிருந்ததனால், நானும் அவரும் ஒன்றாக இணைந்து
நிகழ்ச்சிகளை நடத்தும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
பரமேஸ் அவாகள் சக்சஸ்போன் என்னும் ஆங்கில
வாத்தியத்தை வாசித்தார். பப்பா மிஸ்கின் என்பவர் ரம்பட்
வாசித்தார். அந்த வகையில் வித்தியாசமான முறையில்
தங்கள் இசையை இசைத்துக் கொண்டார்கள். ஆனால் பின்பு
பப்பா மிஸ்கினை இணைத்துப் பாடக்கூடிய நிலை எனக்கு
ஏற்பட்டது. ஆனால் எங்களால் சேர்ந்து எங்கள் இசைகளைக்
கொண்டு போகக் கூடிய முறையில் அமைக்கவில்லை.

பரமேஷ்: பப்பா மிஸ்கின், கிளம்கோனர் இவர்கள் இருவரையும் விட
நாங்கள் இளமையானவர்கள். பப்பா மிஸ்கின் இலணடனில்
இறந்துவிட்டார். அவருக்கும் எனது அஞ்சலிகள். இவாகளைக்
கூறும் போது பப்பா மிஸ்கின் எங்களைத் தூக்கிவிட்டு
உச்சத்துக்குக் கொண்டு போனவர். எங்களுக்கு மேலும்
உற்சாகத்தைத் தந்தவர். குடிகாரன் எப்படிக் குடிக்க
வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாக வாழ்ந்தவர். ரம்பற்
அவர்கள் கைகளில் நின்று விளையாடும். இவர்களைத்
தனியே வாசிக்கவிட்டு அவர்களுக்கென்றே கைத்தட்டல்கள்
அமோகமாக வந்து விழும். இவர்கள் போக்குவரத்து,
தங்குமிட வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து
இவர்களுக்காகப் பல செலவுகள் செய்தோம். இதுவும்
எங்கள் இசைத்தென்றல் நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு
காரணமாக அமைந்தன. அவர்கள் எங்கள் குரு என்று
சொல்லலாம்.

நித்தி;கனகரெட்ணம்: பப்பா மிஸ்கின் என்னுடைய ~~கள்ளுக்கடை பக்கம்
போகாதே…..’’ ~~சின்னமாமியே …..’’ ~~திங்கட்கிழமை
வெள்ளிக்கிழமை…..’’ போன்ற பாடல்களுக்கும் அருமையாக
ரம்பட் வாசித்தார். சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்ற
வித்தியாசம் இல்லாமல் இசை வாசித்த ஒரு முதிர்ந்த
சுத்தமான மனதுடன் இசை தந்த ஒரு இசைக்கலைஞன்
பப்பா மிஸ்கின். இவர் இறந்து போனாலும் என்றும் எனது
மனதில் நிறைந்திருக்கும் ஒரு இசைக்கலைஞன்.
பரமேஷ{க்கு மட்டுமன்றி எனக்கும் கூட அவர் மனதில்
நிறைந்திருக்கும் ஒரு கலைஞன்.

பரமேஷ்: அதாவது அனைத்துச் சிங்களப் பாடல்களிலும் அவர்
பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதைப் பற்றி
மேவின் றொற்றிக்கோ கூறுவார். தெரிந்தால் அவரைப்
பற்றியும் கூறுங்கள்.

நித்திகனகரெட்ணம்: மேவின் ரொற்றிக்கோ என்பவர் தமிழ்நாட்டில் பல
பாடல்களுக்குப் பெரிய அளவில் ரெகோடிங் செய்தவர்.
அவர் எனக்குப் பல பாடல்களுக்கு உதவியிருக்கின்றார்.
என்னை மிகவும் நண்பனாகவும் ஆசிரியன் போலவும்
வற்புறுத்தி பாடல்களுக்கு இசையமைப்பார். என் இடுப்பில்
வந்து இடித்து இடித்து பாடல்களின் கவிவடிவம் வெளியே
வர மிகவும் உதவியாகப் பெரிய அளவில் பாடுபட்டார்.
அப்படியான ஒரு கலைஞன் அவர். அப்படியே தான்
பரமேஷ் அவர்களுக்கும் உதவியிருப்பார் என்று
நினைக்கின்றேன். இந்தவகையில் அவர் எங்கள: பேருக்கும்
புகழுக்கும் மிகவும் உதவியாய் இருந்தவர் என்றதனால்
அவரை என்றும் நான் நினைப்பேன். என் வீட்டில் அவர்
படத்தை வைத்திருந்து அடிக்கடி பார்த்துக் கதைப்பேன்.
இப்படியான ஒரு கலைஞன் இப்போதுள்ள பாடகர்களுக்கோ
இசை ஆர்வலர்களுக்கோ கிடைப்பது மிகவும்
அருமையாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

பிரபா: அதேவேளை பரமேஷ் அண்ணா! நான் நினைக்கின்றேன்.
நீங்கள் இருவரும் வானலையில் சந்திப்பது இதுதான்
முதல்தடவை என்று.

நித்திக்கனகரெட்ணம்:நாங்கள் எப்போதும் உறவினர்களாக வீட்டில் சந்தித்துக்
கொள்வோம். பரமேஷ் ஒரு கலைஞனாக, ஒரு கவிஞனின்
மகனாக, ஒரு கவிஞனாக இருந்த போதும், அவர் எனது
~~கள்ளுக்கடைப் பக்கம்…’’ என்ற பாடலின் வரிகளை
நன்றாக இரசித்தார். நான் எப்போதும் அவரை ஒரு
இரசிகனாகத்தான் பார்க்கின்றேன். நித்தி! உங்கள் வரிகள்
இப்படிப் போகின்ற போது நான் மிகவும்
பெருமையடைகின்றேன். மிகவும் சிறப்பாக இருக்கின்றது
என்றெல்லாம் புகழ்வார். உறவினர் என்பதற்கு மேலாக
அவரை ஒரு இரசிகனாகத்தான் அவரை நான்
பார்க்கின்றேன். ஒரு கலைஞனாகவும் ஒரு இரசிகனாகவும்
இருக்கும் ஒரு சிறப்பு அவருக்கு உண்டு.

பரமேஷ்: நாங்கள் ஒரே மேடையில் தோன்றாததற்குக் காரணம்
என்னவென்றால், எப்படி ரஜனிகாந்த், கமலஹாசனை ஒரே
மேடையில் போட்டால் அந்தத் தயாரிப்பாளர் முறிந்து
போவாரோ, அதேபோல் நித்திக்கனகரெட்ணம்,
ஏ.ஈ,மனோகரன், பரமேஷ்கோணேஷ் இசைக்குழுவை ஒரே
மேடையில் போட்டாலும் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு
பணம் அந்த அளவில் கொடுக்க முடியால் போய்விடும்.
மட்டக்களப்பு எங்கள் கோட்டை என்று சொல்லலாம்.
எத்தனை முறை நிகழ்ச்சி நடத்தினாலும் பணத்தை
அள்ளிஅள்ளிக் கொடுப்பார்கள். அதேவேளை
திருகோணமலையில் அநுமதிச்சீட்டுக்கள் வீடுகளுக்குச்
சென்று நாங்கள் விற்பதில்லை. மண்டபத்திலேயே வந்து
அனைவரும் அநுமதிச்சீட்டுக்களை வாங்குவார்கள்.
எங்களுக்குள் எங்தவிதப் பிரிவினைகளும் இல்லை.
ஆனால், இதுதான் முதல்தடவையாக நாங்கள் இருவரும்
போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றோம்.

பிரபா: நன்றி நித்தி அண்ணா! இந்நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து
கொண்டமைக்காகாவும் உங்கள் பழைய நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டமைக்காகவும்.
நேயர்களே! நீங்களும் எம்.பி. பரமேஷ் அவர்களோடு
கலந்து உரையாடி மகிழலாம். ஆம் இப்போது பாடும் மீன்
தந்த கலைஞன் அண்ணன் சிறிஸ்கந்தராஜா அவர்கள்
கலந்து கொள்ளுகின்றார். மட்டுநகர் தம்மை வாழ வைத்த
நகர் என்று பரமேஷ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அங்கு
நிகழ்ச்சிகளைப் பார்த்த அநுபவம் உங்களுக்கு
இருக்கின்றதா?

சிறிஸ்கந்தராஜா: ஆம் நிச்சயமாக. ஈழத்தின் இரு இசை இமயங்கள் கலந்து
கொண்டு பேசியமை மிகச் சிறப்பைத் தந்தது. இந்த
பரமேஷ்கோணேஷ் அவர்களுடைய பாடல்களையெல்லாம்
இலங்கை வானொலியினர் ஏன் போடுவதில்லை என்னும்
கேள்வி ஒரு காலம் இருந்தது. அதன் பின் இவர்கள்
பாடல்கள் எல்லாம் வரத் தொடங்கிய பின் மக்களிடையே
வரவேற்பு இருந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற
ஊடகங்கள் ஊடாகத்தான் பல கலைஞர்கள்
பிரபலமடைகின்றார்கள். புல திரைப்பட நடிகர்களுக்கும் கூட
தொலைக்காட்சிகள் வாழ்வாதாரம் தந்து கொண்டு
இருக்கின்றது. அந்த முகவரி தேவைப்படுகின்றது. ஆனால்,
இலங்கை வானொலிதான் இந்தியாவில் கூட பேசப்பட்ட ஒரே
வானொலியாக இருந்த போதிலும்கூட வானொலிக்கு
வெளியே இருந்து தமது திறமையை வெளிக்காட்டிப் புகழ்
பெற்று அதன் பின் வானொலிக்குத் தமது திறமையைப்
பயன்படுத்திய ஒரு உத்தம கலைஞர்கள் இந்த
பரமேஷ்கோணேஷ் அவர்களும் நித்திக்கனகரெட்ணம்
அவர்களும். பரமேஷ்கோணேஷ் அவர்களுடைய ~~உனக்குத்
தெரியுமா….’’ என்னும் பாடல் இன்னும் நான்
பாடிக்கொண்டுதான் இருப்பேன். எனது மனைவி கேட்பார்,
~~இப்போதும் இந்தப் பாடல் உங்களுக்கு மனப்பாடமாக
இருக்கின்றதா’’ என்று. மனதுக்குப் பிடித்த பாடல் மனதை
விட்டு அகலமாட்டாது. ஆனால், பாடசாலையில் படித்த பல
பாடங்கள் மறந்துவிட்டன. இவருடைய செவ்வி மிகச்
சிறப்பாக இருக்கின்றது. பரமேஷ் அவர்களே! இப்போதும்
நீங்கள் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றீர்களா?

பரமேஷ்: ஆம், எனது பிள்ளைகள் ரிதம்ஸ் என்ற பெயருடைய
இசைக்குழுவை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனது
மூத்த மருமகன் வேலையின் நிமித்தமாக ரெக்ஸஸ் என்னும்
இடத்திற்குச் சென்றிருக்கின்றார். அதனால் சில
காலங்களுக்கு இசை நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி
வைத்திருக்கின்றோம்.

சிறிஸ்கந்தராஜா: நல்லது பிரபா. அது எனது பழைய நினைவுகளை மீட்டக்
கூடியதாகவும். வளருகின்ற கலைஞர்களுக்கு
வழிகாட்டியாகவும் இருக்கும் என்று நம்புகின்றேன். பரமேஷ்
அவர்களே! கோணேஷ் அவர்கள் இப்போது எங்கே
இருக்கின்றார் என்று அறிய ஆவலாக இருக்கின்றோம்.

பரமேஷ்: அவர் இப்போது ஐ.ரி:ஆர் என்னும் வானொலியை நடத்திக்
கொண்டிருக்கின்றார். இப்போது அது ஐரோப்பாவில்
ஒலிபரப்பப்படுவதில்லை.

சிறிஸ்கந்தராஜா: நல்லது. அப்படியானால் இப்போதும் அவர் கலையோடுதான்
சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்னும் போது சந்தோசமாக
இருக்கின்றது.

அவர் விடைபெற மீண்டும் ஒரு நேயர் மெல்போனில் இருந்து
இணைகின்றார்.

நேயர் 3: யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நான் மிகச்சிறுவனாக
இருக்கும் போது உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கின்றேன்.
மிகவும் அழகாக கவர்ச்சியாகப்
பார்வையாளர்களுக்கு இருக்கும். எத்தனை தடவைகள்
யாழ்ப்பாணத்தில் உங்கள் நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள்?

பரமேஷ்: 5 நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றோம். நீங்கள் குறிப்பிட்டது
போல் எங்கள் வெற்றிக்குக் காரணம் விளம்பரங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகளை நாங்கள்
ஆரம்பிப்பதும் தான். காசிப்பிள்ளை அரங்கில் போட்டியாக நடந்த
நிகழ்ச்சியை மறக்க முடியாது. அது என்னவென்றால்,
அரியாலையில் இருந்து இருபகுதியினர் எங்களிடம் நிகழ்ச்சிக்காக
முற்பணம் கட்டினார்கள். இருவரிடமும் நாங்கள் பணம்
வாங்கிவிட்டோம். எங்களுக்குத் தெரியாது இந்நிகழ்ச்சி ஒரே
மேடையில் நடக்கப் போகின்றது என்னும் விடயம். அன்று
நாங்கள் நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருக்கும் போது
கைதடியில் வைத்து எங்களைக் கடத்திக் கொண்டு
போய்விட்டார்கள். எங்கள் மேடையில் பாடிவிட்டுத்தான் அங்கு
போக வேண்டும் என்றார்கள். பின் ஒருவாறாக இருவரையும்
சமாதானப்படுத்தி இரு நிகழ்ச்சிகளையும் செய்தோம். இது
மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக இருந்தது.

நேயர் 3: அந்தக் காலத்தில் இந்தியச் சினிமாப் பாடல்கள் பிரபல்யமாக
இருந்த காலத்தில் பொப் இசைப்பாடல்கள், பரமேஷ்கோணேஷ்
பாடல்கள் 4, 5 வருடங்கள் மிகப் பிரபல்யமாக இருந்தன.
தமிழகத்தினருக்கே ஒரு விழிப்புணர்வூட்டிய பாடல்கள் என்று
சொல்லலாம்.

நேயர்: அந்தக் காலத்து இளைஞர்கள் பெல்பொட்டம் அணிந்து கொண்டு
இந்தப் பாடல்களைத்தான் பாடிக் கொண்டு திரிவார்கள்.

பரமேஷ்: இலங்கையில் மூவின மக்களையும் ஒன்றிணைத்த பாடல்கள்
இவையென்று சொல்ல வேண்டும். ஓன்றாகப் பாடியாடி
மகிழ்வார்கள்.

கானா பிரபா: இப்போது இணைந்து கொண்டிருக்கும் நேயர் ஒரு இசைப்பிரியர்
அத்துடன் கிற்றார் வாத்தியம் இசைப்பதில் வல்லவர்,
இதுமட்டுமல்ல பரமேஷ் அவர்கள் எங்கே இருக்கின்றார் என்று
அவரைத் தேடி வெறியோடு அலைந்து கொண்டிருக்கும் ஒரு ரசிகர்.

ரவி: நானும் இந்த உனக்குத் தெரியமா என்ற பாடலில் மயங்கி
நேயர் 4 ரசித்தவனே. வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
நானும் சென்றிருந்தேன். இவர்கள் வைத்த இசைப் போட்டியிலே
நானும் கலந்து கொண்டு வெற்றியீட்டியமையினால் பணப்
பரிசினையும் பெற்றிருந்தேன். அதற்குப் பின் இவர்களுடைய
பாடல்களில் எனக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. முதல் இசைத்
தட்டில் வெளிவந்த 4 பாடல்களும் பள்ளிக்கூடப் பாடங்களை விட
மிகவும் மனப் பாடமாக இருந்தன. பரமேஷ் அண்ணா! இந்த
ஆர்வத்தில்த்தான் திருகோணமலைக்கு நான் வந்திருந்தேன். நீங்கள்
பயிற்சி செய்யும் போதெல்லாம் உங்களிடம் வருவேன். பயிற்சியில்
மயங்கி உங்கள் வீட்டு வாசலில் இருப்பேன். எனது அத்தான்
டொக்டர் நவபாலச்சந்திரன் அவர்கள் அங்கு வாழ்ந்தார். அவரிடம்
தான் திருகோணமலைக்கு வந்திருந்தோம்.

ரவி: நான் எக்கவுன்டன்ஸி படித்துக் கொண்டிருந்த போது உங்கள்
பயிற்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்து தான் போவேன்.
இசைத்தட்டுக்களும் வாங்கி வைத்திருந்தேன். ~~பாடல் எனக்கிது
முதல் தரம்தான்…..’’ இந்தப் பாடல் பிரேமா பாடியிருந்தார் என்று
நினைக்கின்றேன். இந்தப் பாடலுக்கு மேலாக பின்னணி இசை
மிகச்சிறப்பாக இருந்தது. நான் நினைத்தேன் நீங்கள் பாடல்களை
எழுத கோணேஷ் அவர்கள்தான் இசை அமைப்பார் என்று அது
உண்மையா? உங்கள் பாடல் வரிகள் அத்தனையும் அருமையானது.
மற்றும் உங்கள் இசைத்தட்டுக்கள் இருந்தால் தயவுசெய்து உங்கள்
புத்தகத்துடன் அனுப்பி வைப்பீர்களா? என்று கேட்டபடி மற்றைய
நேயர்களுக்கு வழிவிட்டு விடைபெறுகின்றேன்.

பரமேஷ்: இசையமைப்பது என்பது நானே தான். கோணேஷ் எனக்கு
உதவியாத்தான் இருந்தார். என்னுடைய பெயரை மட்டும் போடுவது
அவருக்கு கௌரவக் குறைவு என்ற காரணத்தினால்த்தான்
பரமேஷ்கோணேஷ் என்று போட்டேன். கோணேஷ் அவர்கள் கனடா
போனதன் பின் எந்த இசையமைப்புக்களும் செய்யவில்லை.
ஆனால், எங்களுடைய இசைத்தட்டுக்களைத் தனது வானொலியில்
போடும் போது இசை எம்.பி.கோணேஷ் என்று ஒலிபரப்பினார். நான்
அதைத் தடைசெய்தேன். பெயரைப் பிரிக்கக் கூடாதென்று. நீங்கள்
நினைப்பது தவறில்லை. நான் அப்படித்தான் இலங்கையில்
உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம். 8 வருடங்களின் பின் அவர்
எங்களை விட்டுப் பிரிந்து செல்ல நானும் எனது மனைவி
மாலினியும் இணைந்தே இசைத்தட்டுக்களை நடத்திக்
கொண்டிருந்தோம். தொடர்ந்து 14 வருடங்கள் செய்தோம்.
அப்போதும் பரமேஷ்கோணேஷ் என்றே நடத்திக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால், திரும்பவும் அவர் என்னுடன் வந்து செய்வார் என்ற
எண்ணம் இருந்தது. அந்தப் பெயருக்கே ஒரு தனி மரியாதை
இருந்தது. எனது மனைவி வீதியில் போகும் போது கேட்பதை
வீட்டிற்கு வந்து சொல்வார். ~~என்ன நீங்கள் இருவரும் இப்படியொரு
ஒற்றுமையா?’’ என்று. வீதியில் போகும் போது பரமேஷ்கோணேஷின்
மனைவி போகுதென்றே சொல்வார்கள்.

பிரபா: உங்களுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். 8 இலக்கம்
உங்களுக்குப் பொருந்துவதில்லை. 8 ஆவது நிகழ்ச்சியுடன் தான்
உங்கள் தம்பி கோணேஷ் உங்களை விட்டுப் பிரிந்து போனதாக
குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அவர் பிரிந்து போனதற்குரிய காரணத்தைக்
கூற முடியுமா?

பரமேஷ்: அவரின் திருமணத்தின் பின்பே பிரிவினை ஏற்பட்டது. என்னுடன்
மட்டுமல்ல. ஜேர்மனியில் கூட அவருக்குப் பிரச்சனைகள் இருந்தது.
நான் பிறருடன் சகஐமாகப் பழகும் போது கட்டுப்பாடு போடுவார்.
அவர் அப்படி யாருடனும் பழக மாட்டார். நான் நண்பர்களைத் தேடி
வர அவர் அந்த நட்பை உடைத்துவிடுவார். அது தான் பிரிவினை
ஏற்பட்டதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. பிரிவினை ஏன்,
எப்படி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியாது. அவருக்குத்
தெரிந்திருக்கும்.

ரவி: உங்கள் பாடல் வரிகள் மிகவும் எனக்குப் பிடிக்கும். அக்காலத்தில்
ஓட்டோகிராப் எழுதும் போது ~~ இதயம் ஒரு வழிப்பாதை ….’’ என்ற
வரிகளை எழுதுவேன்.

பரமேஷ்: இதை நான் ஒரு இந்திய இசையமைப்பாளரிடம் கொடுக்கவிருந்தேன்.
அப்போது எனது மகளின் தோழி கூறினார். இந்தப் பாடல் வரிகள்
சில நாட்களில் திரைப்படத்தில் வரும். அதனால், இதைக்
கொடுக்காதீர்கள் என்று சொன்னார். ~~இந்தத் தெருவிளக்கணைந்தால்
மறுவிளக்கு. மணவிளக்கணைந்தால் புது வழக்கு மலர்ச்சரம்
அருந்தும் மலர் இருக்கும். மனச்சரம் அறுந்தால் எது இருக்கும். நீ
வாழுமிடம் எங்கே?’’ இந்த வரிகளைப் பார்த்த எனது தந்தையே
சந்தோஷப்பட்டார்.
( அவர் விடை பெற அடுத்த நேயர் இணைகின்றார்)


நேயர்4 அருண்விஜயராணி:
வணக்கம். நான் சிறுவயதில் ரசித்த ஒரு பாடகரை இன்று கொண்டு வந்திருக்கின்றீர்கள். உண்மையில் எனக்குச்சந்தோஷமாக இருக்கின்றது பிரபா. அவர்களுடைய பாடல்கள் எனக்கு இன்னும் மனதில் இருக்கின்றது. சாஸ்திரமுறைப்படிப் பாடல்களை விரும்பாத
காலத்தில் இவர்களுடைய பாடல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன. எளிமையான பாடல்
வரிகள் இந்திய இசைக்கு ஒப்ப இசையமைக்கப்பட்டிருந்தமை வரவேற்கப்பட்டது. வணக்கம்
அண்ணா! உங்களுடைய குரலைப் பல வருடங்களின் பின் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. நீங்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ~~நான் உன்னைத் தேடும்; நேரம்‘‘ அந்தப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த வரிகள் மிகவும் சிறப்பான வரிகள். ~~பூவில் மலர் தேடும் வண்டாய் நாளும் மலர் தேட வேண்டாம். நாதம் பல மீட்ட இங்கு நல்ல ஒரு வீணை போதும் எத்தனை வருடங்கள் கழித்தும் அந்த வரிகள் என்மனதில் இடம் பிடித்திருக்கின்றது. இந்தப் பாடல்கலை நீங்காளாகவேதான் எழுதுவீர்களா? அத்தனை பாடல் வரிகளும் சிறப்பானவை.

பரமேஷ்:
அனைத்துப் பாடல் வரிகளையும் நானாகவே எழுதுவேன். அன்று நான் எழுதிய பாடலுக்கு எனது மகள் பிரபாலினி பிரபாகரன் இசையமைத்திருக்கின்றார். அப் பாடலை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். ( பாடல் வந்த பின் ) எப்படி இருக்கின்றது பாடல். அப்பாவை மிஞ்சிவிடுவார் மகள் என்று நினைக்கின்றீர்களா? நடிகர் விஜய் இன் தந்தையார் கூறியதைத் தான் இப்போது நான் நினைவு கூறுகின்றேன். அவர் வீதியில் நடந்து கொண்டு செல்லும் போது முதல் டைரக்ரர் நடந்து போகின்றார் என்பார்களாம். இப்போது வீதியில் போகும் போது விஜயின் அப்பா போகின்றார் என்பார்களாம்.

கானாபிரபா:
உங்கள் கலையுலக வாரிசு பிரபாலினி பிரபாகரன் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். உங்கள் காதல் மனைவி மாலினி பரமேஷ் பற்றி சிறிது கூறுங்களேன்.

பரமேஷ்: அவரை நாம் இழந்துவிட்டோம்: சங்கீத பூஷணமாக இருந்து அரங்கேற்றம் செய்த பின் அப்படியே இருந்து விடாது மெல்லிசைக் கலைஞர்களுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தவர் இவர். நான் ஒரு சங்கீத பூஷணமாயிருந்தாலும் ஒரு மெல்லிசைக் கலைஞனை நான் திருமணம் செய்கின்றேன் என்று அவர் என்னைத் திருமணம் செய்ததை நான் என்றும் மறக்க முடியாது. அந்தக் காலத்தில் ஒரு பெண் பாடகி எடுப்பதென்றால், மிகவும் கஷ்டம். இப்படியிருக்கும் போது என்னை இவர் திருமணம் செய்தது என் இசைக்குழுவில் இருந்த எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், நிரந்தரமாக ஒரு பாடகி எங்களுக்குக் கிடைத்துவிட்டார் என்பதுதான். மாலினிக்கு முன் நான் நன்றி கூற வேண்டியவர்கள் ஈ.ஆர்,பிரேமா, எமிலி குரௌடர், கமலா, பமலா, விமலா போன்றோர். திருமணத்தின் பின் தான் மாலினி என்னோடு இணைந்து பாடுவதற்கு வந்தார். கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் மெல்லிசை பாடக் கூடாது என்று நம்பப்பட்ட காலத்திலேயே
அவர் வந்தார். நான் பல விளக்கங்கள் கொடுத்தேன். சீர்காழி கோவிந்தராஜன், சௌந்தரராஜன், ஜேசுதாஸ் போன்றோர் மெல்லிசைப் பாடல்கள் பாடவில்லையா என்றெல்லாம் உதாரணங்கள் காட்டினேன். அவர் என்னோடு இணைந்திருந்த காலத்தில் சிறப்பான பல பாடல்களைத் தந்திருந்தார். ஜேர்மனியில் நாங்கள் வெளியிட்ட சங்கீத சாம்ராஜ்யம் என்ற இசைத்தட்டில் அவருடைய பாடல்கள் இருக்கின்றன.

நேயர் 5:
வணக்கம், எம்.பி.பரமேஷ், பிரபா.
புழைய நினைவுகளை மீட்டுகிறது இன்றைய நிகழ்ச்சி. இந்தப் பரமேஷ் கோணேஷ் எல்லாம் இருந்தார்கள் இப்போது என்ன ஆனார்கள் என்று நான் பல தடவை நினைத்துப் பார்ப்பேன். இன்று அவரின் உள்ளங்கவர்ந்த நேயர்களை அழைத்து அவரை இன்று முன் கொண்டு வந்திருக்கின்றீர்கள். மிக்க சந்தோஷமாக இருக்கின்றது. நான் அவருடைய நிகழ்ச்சியை சிறீதர் தியேட்டரிலே பார்த்திருக்கின்றேன். நான் சிறுவனாக இருக்கும் போது இதைப் பார்த்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இப் பாடல்கள் ஒரு கூத்தாட்டமாக இருந்தது. அந்தக் காலத்தில் திருமணவீடுகள், பிறந்தநாள் வீடுகளில் இப்பாடல்களே ஒலிக்கும். மிகவும் துள்ளிசையாகத்
துள்ளாட்டமாக இப்பாடல்கள் அமைந்திருக்கும். மிகவும் இந்தப் பேட்டியை நான் அநுபவித்துக் கேட்டேன். வணக்கம் பரமேஷ் அண்ணா! உங்கள் பாடல்களை மிகவும் லயித்துக் கேட்கும் ஒரு ரசிகன் யான். தீருகோணமலையில் ஒரு புத்தகம் வந்தது அதில் உங்களைப் பற்றிய விபரங்களைப் பார்த்திருக்கின்றேன் .நீங்கள் போடும் கண்ணாடிச்சட்டம் ஒரு ஸ்ரைலாக இருக்கும். கண்ணன் கோஷ்டியில் இருக்கும் கண்ணன் என்பவருடைய தலைமயிர் வெட்டைச் சிலர் கண்ணன் வெட்டு என்று வெட்டுவது போல் அந்தக் கண்ணாடிச் சட்டம் ஒரு ஸ்ரைலாக ஆக வந்தது. இப்படி ஒரு கலைஞரை இன்று கொண்டு வந்திருக்கின்றீர்கள் க.பிரபா சந்தோஷமாக இருக்கின்றது. ஒரு கவிஞன் பாடகன் என்பதைவிட ஒரு அறிவிப்பாளருக்குரிய குரல்வளம் இவருக்கு இருக்கின்றது.

நல்லது பிரபா! இந்த அரிய சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியமைக்கும் பழைய நினைவுகளை மீட்டச்
செய்தமைக்கும் நன்றி கூறுகின்றேன்.

( நான் வாழும் இடம் எங்கே….என்னும் பாடல் ஒலிபரப்பப்படுகிறது.)

கானா பிரபா:
இந்த இனிமையான பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருந்தவர் எம்.பி.பரமேஸ்
அவர்கள். நல்லது பரமேஷ் அண்ணா! உங்களுக்கு இந்த மெல்லிசை மன்னன் என்ற பட்டத்தைத் தந்தவர் யாரென்பதைக் கூறுவீர்களா? அந்த அந்த அநுபவங்களைக் கொஞ்சம் மீட்டுங்களேன்.

பரமேஷ்:
1972 ம் ஆண்டு எனக்கும் கோணேஷ் அவர்களக்கும் மகேஷ் அவர்களுக்கும் இந்தக் கௌரவ விருது வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் கொடுத்திருந்தார். இது எனக்குப் பெருமையாக இருந்தது. மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருதல்லவா. இவ்விருது கிடைத்தன் பின்பு தான் நான் மெல்லிசை மன்னனாக வாழவேண்டும் என்று இன்றும் புதிய பாடல்களை எழுதிப் பாடிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய பிள்ளைகளையும் இசைத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றேன். இவ்விருது கிடைத்த போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய மனைவி மாலினியுடைய குடும்பத்தினர் அனைவரும் அன்ற அங்கு மேடையின் முன்புறத்தில் இருந்தார்கள். அது எனக்குப் பெருமையாக இருந்தது. இதை ஒழுங்குபடுத்தியவர்களை மறந்துவிட்டேன். அவர்கள் இதை மன்னிக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் விஸ்வநாதன் ராமமூர்த்தி போல் எங்களுக்கு நீங்கள் இருவரும் தான் என்று எங்களுக்கு இந்த விருதை வழங்கினார்கள். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் கே.பி. சுந்தராம்பாளைக் கூட ஈழத்துக்கு அழைத்து வந்து மேடையேற்றியவர். நவாலியூரைச் சேர்ந்தவர். திரைப்படம் தயாரித்த ரகுநாதன் கூட நவாலியூரைச் சேர்ந்தவர் தான். அப்படிப்பட்ட ஒருவரிடம் இந்த விருதைப் பெற்றது பெருமையாக இருந்தது. இதைவிட பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் இயல்இசைக்கலைஞர் என்ற விருதைக் கொடுத்தார். எங்களிடம் இருந்த திறமை அந்தச் சிறுவயதில் எங்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் எடுத்தச் சொல்லும் போது தான் எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், இப்போதும் நான் அந்தத் துறையை விட்டு நீங்கவில்லை. இந்த கலையரசு சொர்ணலிங்கம் அவர்களும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களும் யாரும் நெருங்க முடியாத கௌரவம் பெற்றவாகள். ஆனால் எனது தந்தையாரிடம் மதிப்புக் கொண்டவர்கள். துந்தையாரின் செல்வாக்கும் இவர்களுக்கு எங்களை அடையாளப்படுத்தியிருக்கும்.

கானா பிரபா:
உங்கள் காதல் மனைவி மாலினியவர்களும் நீங்களும் இணைந்து மெல்லிசைப் பாடல்கள் ஏதாவது பாடியிருக்கின்றீர்களா?

பரமேஷ்:
அவர் ஆரம்பத்தில் சினிமாப் பாடல்களைப் பாடுவார். என்னோடு இணைந்து சங்கீத சாம்ராஜ்யம் இசைத்தட்டில் பல பாடல்கள் பாடியிருக்கின்றார். 2000ஆம் ஆண்டு அவரை நான் இழந்ததனால் தொடர்ந்தும் என்னால் அவருடன் பாடமுடியாமல் போய்விட்டது. எனவே மேடையில் அன்றி இசைத்தட்டில் நாமிருவரும் இணைந்த மெல்லிசைப் பாடல்கள் பாடியிருக்கின்றோம்.

கானா பிரபா:
மெல்லிசைப் பாடல்களுடன் இணைத்து திரைஇசைப் பாடல்களையும் நீங்கள் பாடுவீர்கள் என்று கூறியிருக்கின்றீர்கள். ஈழத்துத் திரைப்படப் பாடல்களில் உங்கள் பங்களிப்பு
எப்படியிருந்தது?

பரமேஷ்:
அதாவது ஈழத்தில் நாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் 36 படங்கள் தான் வெளிவந்தது என
தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்துதான் அறிந்த கொண்டேன். இந்த 36 படங்களும் நாங்கள் பிரபல்யமாக முன்பே வந்துவிட்டன. இசையமைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. மஞ்சள்குங்குமம் என்ற படத்திற்கு இசையமைப்பதற்கு எம்.பி.பாலன் அவர்கள் அழைத்திருந்தார். அங்கு போனபோது மோகன் ரங்கனுடைய தந்தையவர்கள் திரு. முத்துசாமி அவர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார். நாங்கள் கொங்கோ, போன்றவற்றை நாங்கள் பயன்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. அப்போது இசை எங்களுக்கு தொழிலாக இருக்கவில்லை. ஆனால், முத்துசாமி போன்றோருக்கு தொழிலாக இருந்தது. அதன்பின் அவரே இசையமைத்தார்.. ஆனால் இப்படம் ராணி தியேட்டரில் வெளியான போது வீரசிங்கம் மண்டபத்தில் எங்கள் இசைத்தென்றல் நிகழ்ச்சி 2 நாட்கள் வெற்றி நடைபோட்டது. அப்படத்திற்கு சென்றவர்களை விட எங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிகம். அதனால், அவர்கள் ஒரு பெரிய பலகையில் இந்தப் படத்திற்கு இசையமைத்தவர்கள் பரமேஷ்கோணேஷ் என்று எழுதிவிட்டார்கள். இதனால் இந்தப் படம் இன்னும் 3 நாட்கள் அதிகமாக ஓடியது. இதனைத் திரு.வாசகர் அவர்கள் இது தவறு என்று கண்டித்து விமர்சனத்தைத் பத்திரிகையில் எழுதியிருந்தார். பின்பு டென்மார்க்கில் இருக்கும் சன் அவர்கள் படத்திற்குப் பாடும்படி கேட்டிருந்தார். இவரும் அர்ஜுனன் என்பவரும் இணைந்து கலியுககாலம் என்னும் ஒரு படம் எடுத்திருந்தார். இந்தப்படம் கலியுககாலய என்னும் சிங்களப் படத்தை டப் பண்ணி எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் சுஜாதா அத்தநாயக்கா அவர்களுடன் இணைந்து ~~கலியுககாலம் மனம்போல் வாழ்வு இனியொரு குறையில்லை’’ என்னும் பாடலை அவர் கேட்டதற்கமைய நான் பாடியிருந்தேன். இதனையே கே.எஸ்.ராஜா இப்பட விளம்பரத்திற்கு
பயன்படுத்தியிருந்தார். இந்தப் பாடலுக்காகவே இந்தப் படம் சிறப்பாக ஓடியது. திருகோணமலையில் மாத்திரம் 2 வாரங்கள் இப்படம் ஓடியது. எனவே இந்த ஒரு திரைப்படத்திலேயே நான் பாடியிருக்கின்றேன். திரைப்படத்தில் பாடவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தில்லை. ஏனென்றால், திரைப்படத்தைவிட எங்களுடைய இசைத்தென்றல் நிகழ்ச்சி பிரபல்யமாக இருந்தது.

கானா பிரபா:
மேடை நிகழ்ச்சிக்கென்றே பல ரசிகர்களை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். இலங்கையில் பிரபல்யமாக இருந்த இசையமைப்பாளர்கள் முத்துசாமி, ரொக்சாமி இவர்களைப் பற்றிச் சொல்வீர்களா?
பரமேஷ்:
ரொக்சாமி என்பவருடைய பெயர் ஆரோக்கியசாமி. தனது பெயரை ரொக்சாமி என்று மாற்றியிருந்தார். இவர் அதிகமாக சிங்களப்படங்களுக்குத் தான் இசையமைத்திருந்தார்.
கோகிவர்த்தனி சிவராஜாவும் எஸ்.கே.பரராஜசிங்கமும் பாடிய ஒரு ஈழத்துப் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ~~நெஞ்சினில் ஊறும் நினைவுகள் யாவும் உன் உறவன்றோ என் உயிரே’’ என்ற அருமையான பாடல். எங்களுடைய முதலாவது இசைத்தட்டு சிறப்பாக வந்ததுக்குக் காரணம் சிறந்த இசைக்கலைஞர்களை நாம் பயன்படுத்தியிந்தோம். குறிப்பாக பப்பா மிஸ்கின், கிளன் குரோனர், மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த முறைப்படி சங்கீதம் கற்ற இசைக்கலைஞர்கள் போன்றோர் காரணமாய் இருந்தார்கள். இவர்கள் எங்களுக்கு ஏற்றாற் போல் மனச்சந்தோஷமாய் தொழிற்பட்டதும் சிறப்பாய் இருந்தது. இந்த உனக்குத் தெரியுமா என்ற பாலின் முதலில் வரும் Pயைழெ இசையை இசைத்தவர் திரு ரொக்சாமி அவர்கள்தான். சில தோல்விகள் எங்களுக்கு வெற்றியாக அமைந்தன. சில இசைக்கலைஞர்கள் எங்களை விட்டுப் பிரிந்து போனார்கள். இவர்கள் போன பின் நானும் கோணேஷும் இணைந்து இசைப்பதிவுகள் செய்தோம். இதனால் பல மேடைநிகழ்ச்சிகள் எமக்கு வந்தன. அப்போதுதான் பப்பாமிக்சின் கிளன் குரோனர் போன்றோருக்கு மேலதிக பணம் கொடுத்து மேடைநிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தோம்.

ஏனென்றால், புதிய கஞைர்கள் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மேலும் பல சிறப்பான கேள்விகள் கேட்டு என்னை மகிழ்சிப்படுத்தியிருந்தீர்கள். இந்த வேளையில் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

கானா பிரபா:
நன்றி அண்ணா! இதேவேளை உங்கள் அடுத்த புத்தகமும் விரைவில் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் புதிய பாடல்களையும் எதிர்பார்த்துக் காத்திருந்து நிகழ்ச்சியை நிறைவுசெய்கின்றேன்.

(தாய்நாடு விட்டுப் புலம்பெயர்ந்து நாம் வாழ்ந்து கொண்டிருந்தபேர்தும் சிறுவயதில் எமது சிந்தனையில் கலந்துவிட்ட சில நினைவுகள், இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்திருக்கின்றன. அவற்றை நடைமுறை வாழ்வுச் சில நினைவுகள் தட்டி எழுபபுவதோடு அதனோடு தொடர்பு கொண்ட பல நடந்து முடிந்த நிகழ்ச்சிகளும் மூளைப்பதிவிலிருந்து எடுத்துவரபப்படுவதும் இயற்கையே. இவ்வாறே என்னைத் தட்டி எழுப்பிய நிகழ்ச்சி தாய்நாட்டில் பலரையும் தட்டி எழுப்பும் என்னும் நம்பிக்கையில்;; விரல்கள் தந்த படைப்பு இதுவாகும். மறைந்து நிற்பன என்றும் மறைந்து நிற்பதில்லை. அது மறுவடிவம் பெறுவதே முயற்சி மிக்க மனிதவாழ்வின் நியதி.)

படங்கள் நன்றி: ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களின் “என் இனிய இசைப்பயணங்களில்)

ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்

admin June 30th, 2010

“கலைத்துறையைப் பொறுத்தமட்டில் 1983-ல் இனக்கலவரங்கள் வெடிப்பதற்கு முந்திய அமைதிக்காலகட்டத்தில் கூட ஈழத்தமிழர்களிடமிருந்து ஒரு உருப்படியான சினிமா முயற்சி கூட நடந்ததில்லை. அதே சமயம் சிங்களப்படைப்பாளிகள் உலகத்தரத்திலான திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கு தமிழகத்தின் மசாலா படம் தான் ரோல் மாடலாக இருந்திருக்கின்றது”
மேற் சொன்ன கருத்துக்களை தனது குமுதம் “ஓ பக்கங்களில் எழுத்தாளர் ஞாநி 09.06.2010 தேதியிட்ட இதழில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தை இன்று தான் பார்க்கக் கிட்டியது. பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

சமீப வருஷங்களாகவே ஈழத்து அரசியலில் இருந்து கலை, இலக்கியம் வரை எழுந்தமானமாக ஒரு கல்லை விட்டெறிந்து விட்டுப் போகும் போக்கு தமிழக அரசியல்வாதி எழுத்தாளர் சிலருக்கு கைவரப்பெற்றிருக்கின்றது. அந்த வகையில்இலங்கையில் நடந்த ஐபா விழாவிற்கு தமிழ்த்திரையுலகம் புறக்கணித்ததைக் கண்டிக்கும் நோக்கில் கூடவே வழக்கம் போல தி.மு.க சார்ந்த இராம நாராயணனையும் வாரிவிட்டு ஈழத்தமிழ் சினிமா குறித்த தமது “புரிதலை”யும் சொல்லிக் கல்லறிந்து போயிருக்கிறார் இவர். ஐபா விழா புறக்கணிப்பு ஏன் அவசியம் என்பதை தாமரை உட்பட பலர் ஒப்பீட்டு உதாரணங்களோடு ஞாநிக்கும் அவர் சார்ந்தோருக்கும் விளக்கிவிட்டார்கள். எனவே அந்தப் பக்கம் நான் வரவில்லை. ஈழ சினிமா குறித்து இவர் சொன்ன “விஷம்” போன்ற கருத்துக்கு எந்த வகையான ஆதாரங்களை ஞாநியால் முன் வைக்க முடியும்?

இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா? காரணம் பொன்மணி உட்பட ஒரு சில படங்களைத் தவிர தமிழகத்தில் ஈழத்துச் சினிமா எதுவும் திரையிடப்படவில்லை. 1983 இல் அழிக்கப்பட்ட படங்களின் சாம்பல் தான் மிச்சம். சிங்களவரோடு கைகோத்துக் குலாவ வேண்டும் என்று சாத்வீகம் பேசும் ஞாநி அவர்களே அதைத்தான் நாமும் செய்தோம். ஆனால் குலாவிக்கொண்டே அவர்கள் கைவத்தது யாழ் நூலகம் போன்ற அறிவுக்களஞ்சியத்தில் இருந்து இப்படியான கலைப்படைப்புக்கள் வரை. காரணம் தமிழனுக்கு என்று காணி மட்டுமல்ல வரலாறும் ஈழத்தில் இருக்கக்கூடாது என்ற அவர்களின் முனைப்புத் தான். இது அரச மட்டத்தில் இருந்து சிங்கள இனவாதிகள் வரை இன்று வரை செழுமையாகவே இருக்கின்றதை அறிவீர்களா?

1983 இற்கு முன் வெளிவந்த படங்களில் பெரும்பான்மையானவை ஹாலிவூட், கோலிவூட், பாலிவூட் என்று எந்த வகைக்குள்ளும் அடக்காதா ஈழத் தமிழரின் வாழ்வியலைப் பேசும் படங்களாக வந்திருக்கின்றன. பொன்மணி என்ற திரைப்படத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்களாக இருப்போர் இணைந்து நடித்து எடுத்து வெளிவந்த படம். தெய்வம் தந்த வீடு ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வாழ்வியலைப் பேசும் சினிமா. நெடுந்தீவு என்னும் கடலோரப் பிரதேச வாழ்வியலைக் கூறும் சினிமா வாடைக்காற்று என்ற சினிமா பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? இல்லையாயின் ஆது பர்றி நான் எழுதிய பதிவைப் படிக்கவும். ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முழு நீள சினிமா “கடமையின் எல்லை” இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் சிலதை 1983 இற்கு முன் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொடராகப் போட்டார்கள்.

1983 இற்குப் பின் பல கலைஞர்கள் ஈழத்தை விட்டுப் புகலிடம் தேடி ஓடிட, புலிகளின் காலத்தில் பிறந்தது ஈழத்து போர்ச் சூழலின் அவலம் பேசும் சினிமாக்கள். புலிகள் என்றாலே சீண்டப் பிடிக்காத உங்களுக்கு இன்னொன்றும் சொல்லி வைக்கிறேன். அந்தப் போர்க்காலச் சினிமாக்களிலும் புலிகளின் பிரச்சாரப்படங்கள் என வகைப்படுத்தி முத்திரை குத்திப் பார்க்கும் படங்களைத் தவிரவும் ஈழத்து மக்களின் போரியல் அவலங்களைக் காட்டும் படங்களும் வந்திருந்தன.

சிங்கள சினிமாவை உலகத்தரத்தோடு ஒப்ப்பிட்டுப் பார்க்கும் உங்களுக்கு ஓருண்மை சொல்வேன். 1983 இற்கு முன் வந்த 99% மான ஈழத்துப் படங்கள் எந்த வித தமிழக, பாலிவூட் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புக்களாகவோ இல்லையோ அதே போல் 1983 இற்கு முன்னும் பின்னும் வெளிவந்த 99% மான சிங்களத்திரைப்படங்கள் பிரபல ஹிந்தி, தமிழ்ப் பாடல்களை உரிமம் பெறாது காப்பி அடித்தும், கதையை அப்படியே பிரதி பண்ணியும் தான் வந்திருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எப்படி கோடம்பார்க்கத்து சினிமா பிடிக்குமோ அது போல் சிங்களவருக்கும் ஹிந்தி சினிமா தான் உயிர் என்பதை அறிய ஒரு நடை கொழும்புக்குப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.

சிங்களக் கலைத்துறை, சினிமா உட்பட இலங்கை அரசின் பேராதரவோடு இயங்கி வருகின்றது. இந்த நிலை தமிழ்க்கலைஞர்களுக்கும், படைப்புக்களுக்கும் இல்லை. யாராவது ஒரு பெரும் சிங்களக் கலைஞர் மனம் வைத்து இரங்கினால் ஒழிய.

ஆகவே ஞாநி அவர்களே, எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நீங்கள் அயலகத்து விடயங்களைப் பற்றிப் பேசும் போதோ எழுதும் போதோத நன்கு உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொண்டு கருத்தைச் சொல்ல முயலுங்கள். நாளைக்கு நீங்களே “இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தமிழ் படித்த சிங்களவர்கள்” என்றும் சொல்ல முனைவீர்கள். எமது தமிழ் எழுத்துலகின் சாபக்கேடே எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்தவன், எதற்கும் எப்படியும் கருத்துச் சொல்லலாம் என்பதே.

உங்கள் பார்வைக்கு தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய “இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை”

வாடைக்காற்று நாவல், சினிமா பற்றி நான் எழுதிய முந்திய பதிவு


செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா?” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் “இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே”. இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.

இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.

இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.

மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.


செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.

இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது “செம்மீன்” போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
” எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்” என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். “ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.

இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது” படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து ” கல்லுக்குள் ஈரம்” வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.

வாடைக்காற்று திரைப்படமான போது


கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , “நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்” என்றாராம்.

நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்

திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)

“வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.

LP Records சுழற்றும் நினைவுகள்

admin June 26th, 2010

சமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் மூழ்கியிருக்கும் போது, “இளையராஜாவின் The Music Messiah என்ற இசைத்தட்டு இருக்கிறதா” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கடைக்காரரைக் கேட்கும் போது என் கவனத்தை அங்கே பதித்தேன். கடைக்காரர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நான் ஏற்கனவே சல்லடை போட்டுத் தேடிய அனுபவத்தால் “இல்லை” என்று சொல்லி விட்டு வேறு சில ஆல்பங்களை கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளருக்குக் காட்டினேன். தன்னை ஒரு தெலுங்குக்காரர் என்று அறிமுகப்படுத்தி விட்டு மெல்ல திரையிசை குறித்த சிலாகிப்பை ராஜாவில் இருந்து ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் அன்றிலிருந்து இன்றுவரை என் மனசில் பதியம் போட்டிருக்கிறது. அது “என்னதான் சீடி யுகம் வந்தாலும் ஒருகாலத்தில் இருந்த எல்.பி ரெக்கார்ட்ஸ் இல் பாட்டுக் கேட்பதே சுகமான அனுபவம் தான்” என்றார்.

மெல்ல என் பழைய நினைவுகளில் கரைகின்றேன். எண்பதுகளில் எங்களூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில ஓடியோ கடைகள் இருக்கும். தவிர யாழ்ப்பாண நகரப் பக்கம் போனால் நியூ விக்டேர்ஸ், விக்டர் அண்ட் சன்ஸ், றேடியோஸ்பதி போன்ற பிரபலமான பாடல் பதிவு நிலையங்களும் இருந்தன. அங்கெல்லாம் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் புதுசு புதுசாக வரும் LP Records எனப்படும் பெரிய இசைத்தட்டுக்களின் கவர்களை முகப்புக் கண்ணாடிகளில் ஒட்டியிருப்பார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படியான LP Records ஐ தருவிக்கும் இப்படியான கடைகள் பின்னர் இசைப்பிரியர்கள் ஒரு துண்டுத்தாளில் எழுதிக் கொடுக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இசைத்தட்டுக்களை எல்.பி ரெக்கார்ட்ஸ் இயங்கும் கிராமபோன் கருவியில் ஒலிக்கவிட்டு ஓடியோ கசெட்டாக அடித்துக் கொடுப்பார்கள். எனவே புதுப்படம் ஒன்று வருகின்றதென்றால் இந்த பெரும் கறுப்பு நிற இசைத்தட்டுத் தாங்கிய வெளி மட்டைதான் ஒரு விளம்பரமாகச் செயற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எதிர்ப்படும் எங்களூரில் இருந்த அந்தப் பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்கு அடிக்கடி சென்று புதிதாக வந்த இசைத்தட்டு மட்டையைப் பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம் தான் அப்போது. கடைகளில் ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான இந்த மட்டையில் குறித்த படத்தின் ஸ்டில்லும் இசையமைப்பாளர் விபரமும் இருக்கும். புதிதாக ஒரு இசைத்தட்டு வருகின்றதென்றால் சுத்துப்பட்டி கிராமங்களே கேட்கும் அளவில் அதிக டெசிபெல்லில் அந்தக் கடைக்காரர் ஒலிக்க விட்டு ஊரைக் கூட்டுவார். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்கள் மனதில் அந்தப் பாடலைப் பதிய வைத்து அவர்களைக் கடைக்கு இழுக்கும் உத்தி அது.

அப்போதெல்லாம் பாடல் இசை வெளியீடுகளிலும் இந்த எல்.பி. ரெக்கார்ட்ஸ் ஐத்தான் வருகின்ற சிறப்பு விருந்தினருக்குக் கையளிப்பார்கள். அந்த அளவுக்கு மவுசு பெற்றவர் இவர். சரஸ்வதி ஸ்டோர்ஸ் காலத்தில் இருந்து ராஜாவின் பொற்காலமாகத் திகழ்ந்த எண்பதுகளில் ECHO மற்றும் சங்கர் கணேஷ்- ராமநாராயணன் போன்ற பட்ஜெட் இசைக்கூட்டணிக்கு ஆபத்பாந்தவனாக இருந்த லகரி என்று எல்லாமே இந்த LP Records ஐ வெளியிட்டன. ஓடியோ காசெட்டுக்களை இவை வெளியிட்டாலும் அந்த ரெக்கார்ட்ஸ் கொடுக்கும் பிரமாண்டமே தனி.

LP Records எனப்படும் இந்த வகை இசைத்தட்டுக்களில் பாடல் கேட்பதே ஒரு சுவையான அனுபவம். எங்கள் அம்மம்மா வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்தக் கருவிக்குத் தீனி போடுவது போல எண்பதுகளில் வந்த ஒரு சில படங்களின் இசைத்தட்டுக்களும், ஒரு சில பழைய பாடல்கள் கொண்ட தொகுதிகளுமாக ஒரு கண்ணாடி அலமாரியை வைத்திருந்தார்கள். சின்னப்பிள்ளை எனக்கெல்லாம் அப்போது அந்த அலமாரியைத் தொட்டுத் திறக்கவோ, கிராமபோன் கருவியை இயக்கவோ எல்லாம் அனுமதி கிடையாது. அந்த ஏகபோக உரிமையை அப்போது என் சின்ன அண்ணன் தான் எடுத்திருந்தான். அவனுக்கு குஷியான மூட் வரும் போது ஏதாவது ஒரு இசைத்தட்டை எடுத்து மெதுவாக ஒலிக்க விடுவான். ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். இசைத்தட்டை அலுங்காமல் குலுங்காமல் அந்த கிராமபோனில் கிடத்தி விட்டு, அதன் ஊசியைப் பொருத்தி விடுவான். தனக்கான சக்தியைப் பெற்ற கணம் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பிக்கும் அந்த கிராமபோன், எங்கள் அம்மா நிதானமாக தோசைக்கல்லில் வளையமாக தோசைமாவைச் சுழற்றி விடுமாற்போல. அந்த நேரம் கிராமபோன் தருவிக்கும் அந்த இசைமழையை சோபா செட்டுக்குள் கூனிக்குறுகிக் கொண்டே கேட்டுக் கொண்டே பள்ளியில் படித்த அந்த நேரத்துக் காதலியோடு டூயட் பாடுவது போலக் கனவு காண்பது ஒரு சுகமாக அனுபவம். அடிக்கடி போட்டுத் தேய்ந்த சில இசைத்தட்டுக்கள் தாம் பாடும் போது அடிக்கடி “டொப்….டொப்” என்று தம் பட்ட விழுப்பூண் கீறல்களை ஒலியாக எழுப்பி மாயும். சிலவேளை கிராமபோனில் பொருத்தியிருக்கும் ஊசிக்கும் இசைத்தட்டுக்கும் ஊடல் வந்தால் ஆபத்துத்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பழங்காலத்து பாலசரஸ்வதிதேவி குரல் மாதிரி பெண் குரலாகும், எஸ்.ஜானகி குரலோ அப்போது தான் மகரக்கட்டை உடைந்து குரல் மாறிய விடலைப்பையன் குரல் போல நாரசமாக இருக்கும். இப்படித்தான் ஒருமுறை என் சின்ன அண்ணன் ஒலிக்க விட்ட பில்லா பாடல்களில் ஒன்றான “இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்” பாடல் வேகமாக மாறி ஒலித்து என்னை அப்போது கிச்சுக்கிச்சு மூட்டியதை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன். பெரியதாக இருந்த அந்த கிராமபோன் இசைத்தட்டுக்கள் தவிர ஒரு சில இப்போது வரும் சீடிக்களின் அளவுகளில் சின்னதாகவும் இருந்ததைக் கண்டிருக்கின்றேன்.

அப்போது வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலுமே இந்த கிராமபோனே தெய்வமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை வானொலியில் இருந்த அளவுக்கு வேறெங்கும் ஒரு பெரிய இசைத்தட்டுக் களஞ்சியம் உண்டா என்று தெரியவில்லை என்று அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

எனக்கு குறித்த வெறியைப் புகுத்தியது அந்த கிராமபோன் அப்போது ஏற்படுத்திய பிரமிப்பும் கொண்டு வந்து மனதில் புகுத்திய இசையும் தான். பெரியவன் ஆனாதும் எனக்கும் ஒரு இசை லைபிரரி வைத்துக் கொள்வேன், அங்கே நிறைய எல்.பி.ரெக்கார்ட்ஸைச் சேர்த்து வைப்பேன் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. இப்போதும் எங்காவது வணிக வளாகத்தில் ஏதோ ஒரு அரும்பொருள் விற்கும் கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமபோனைப் பார்த்து மனதுக்குள் அஞ்சலி செலுத்துகின்றேன். ஆசையாக ஒன்றை வாங்கிப் பக்கத்தில் வைக்கவேணும் ஒன்றை

பழையன கழிதலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னுமாற்போல இந்த கிராமபோனையும் எல்.பி.ரெக்கோர்ட்ஸையும் ஒழித்துக் கட்ட நவீன சீடிக்கள் எல்லாம் வந்து விட்டன. தொண்ணூறுகளின் மத்தியில் ஆரம்பித்த சீடிக்கள் யுகம் இன்று முழுமையாகத் தின்று தீர்த்து விட்டது. கூடவே இந்தப் புதிய யுகத்தால் பாடல்களை இலகுவாகப் பிரதியெடுக்கவும், தரம் கெட்ட ஒலி வடிவில் பெறவும் முடிகின்றது என்பது இசையுலகத்துக்குக் கிட்டிய சவால். இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

admin June 7th, 2010

“பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே” என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் “ஜோதி ஸ்டோர்ஸ்” புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக
தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.

இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
“என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே” (பெண் குரல்)
“பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது” (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.

இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான “தணியாத தாகம்” நாடகத்தில் வரும்
“அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே” என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய “தங்கமே தங்கமே” என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த “திரைவிருந்து”என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.

சிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.

அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் “ப்ரூ காபி” விளம்பரமும் இத்தகையதே”.

வானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.
தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கும் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.

விளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).

அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. “போகாதே போகாதே” என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் “…..அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே” என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.

வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

admin May 24th, 2010

பதுளை, வெலிமட, மஹாநுவர,
தம்புல்ல, குருநாகல, வியங்கொட,
பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ,
குளியாப்பிட்டிய, கொஹ_வல, றம்புக்கன

வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்
பழிகிடக்கின்றன ‘யாப்பன’ பார்க்க!

நகரத்துத் தெருக்களிலும்
நாகவிகாரை முன்னும்
நல்லூரான் வீதி தொட்டு
நாவாந்துறை வரையும்
வண்ண வண்ண வண்டி அணி
வந்து நிக்குது
கண்ணிரண்டும் கண்டு கண்டு
வலி எடுக்குது!

கொய்த கனிகளொடு
கொய்யாக் கனிவகையுமு;
வேர்க்கடலை, சோளம்,
விறகு, பலகை, முகம் -
பார்க்கும் கண்ணாடி,
பற்றறி, மின்சாதனங்கள்
பிளாஸ்ரிக்கில் பூவும்,
பிரமிக்கும் பாத்திரங்கள்
கண்டகண் மற்றொன்றும் காண முடியாது -
திண்டாட, யாழ்ப்பாணத்
தெருநீளம் கடை விரித்தீர்!
தெருவோரம் மரநிழலில்
தண்டிறங்கிச் சமைக்கின்றீர்
வருவோரை வரவேற்று
வரலாறு படைத்தவர் நாம்!
யாழ்ப்பாணத்தான் செல்வம்
யார் யாரோ கொள்ளையிட்டார்
நீர்வாரிப் போனாலும்
நின்று பிடிக்க வல்லான்!

தலையைக் கவிழ்த்தபடி
தாம் தொலைத்த வாழ்க்கையினை
தேடுகிறார் தமிழர்கள்!
தென்னிலங்கைச் சோதரர்காள்,
இந்த மயானத்தில்
என்னத்தைத் தேடுகிறீர்?
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

- கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப)

நன்றி : இருக்கிறம் சஞ்சிகை

பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம் “தீட்சண்யம்”

admin May 15th, 2010

நாங்கள் பேசுவதில்லை
அதனால்
நாங்கள் ஊமைகளென்பதல்ல

நாங்கள் பேசுவதில்லை
ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்

“தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன்

இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும் செய்தவர்களும், சாத்வீகம் பேசிச் சாகடித்த புனித புருஷர்களும் (!) அவரவர் வழியே போய் விட்டார்கள். கண்ணுக்கு முன்னால் ஒவ்வொன்றாகத் தொலைகின்றது மெல்ல மெல்ல குருதி குளித்துத் திரும்ப எடுத்துக் கொண்ட தேசமும் அதில் தொங்கியிருந்த வரலாற்றுச் சுவடுகளும்.பிராந்தி ய வல்லுறவால் சிதைக்கப்பட்டுச் சின்னாபின்னமாய் ஒடிந்து போயிருப்பது நம் தேசம் மட்டுமல்ல நம்மவர் மனங்களும் தான். “தீட்சண்யம்” கவிதைத் தொகுதியை மெல்லப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கின்றேன்.

“எங்கோ ஓர் ஆற்றுப் படுக்கையில்
சரிந்த
ஏதோ ஒரு மரத்தினால்
திசை மாறியது
அந்த ஆறு மட்டுமல்ல
வெறும் சில
பேராறுகளும்!

ஈழத்தின் போர்க்காலக் கவிஞர்கள் என்ற வரிசையில் மட்டுமல்லாது களப்பணியிலும் தம்மை ஈடுபடுத்தி வந்தோர் பலர். அவர்களில் ஒருவர் தான் தீட்சண்யன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த எஸ்.ரி.பிறேமராஜன். தான் வாழ்ந்த காலத்தின் கடைசிச் சொட்டு நாளையும் விடுதலை என்னும் பெரு நெருப்புக்குக் கொடுத்த அந்த முனைப்பின் சாட்சியமாக விளங்குகின்றது “தீட்சணம்” என்ற இவரது கவிதைத் தொகுப்பு.

தாயகத்தில் நான் இருந்த காலத்தில் சகபாடி ஒருவன் நன்றாகக் கவிதை சமைப்பான். தாயகக்கவி புதுவை இரத்தினதுரையிடம் சென்று அவரிடம் தன் கவிதைகளைச் செம்மைப்படுத்துமாறு ஒரு நாள் அவன் கேட்டிருக்கின்றான்.
“தம்பி! உன் எழுத்துக்களில் இருக்கும் வீரியத்தை இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்துக்குத் திருப்பு, காதல் காத்திருக்கும்” என்றாராம்.
தீட்சண்யன் கவிதைகளைப் படிக்கும் போது இந்தச் சம்பவம் திடீரென்று என் ஞாபகக் கூட்டிலிருந்து வந்தது. தான் வாழ்ந்த காலப்பகுதியில் தன்னைச் சுற்றிய போர்ச்சூழலே “தீட்சண்யன்” என்ற பிறேமராஜனின் கவிதைகளின் கருவியாக அமைந்திருக்கின்றது.

பிறேமராஜன் மட்டுமல்ல இவரை ஒத்த பாணியில் போராளிக்கவிஞர்கள் பலர் இதே வகையான பாதையில் தம் கவிப்பகிர்வைச் செய்திருக்கின்றார்கள். தமிழ்த்தாய் பதிப்பகம் போன்ற தாயகத்தில் ஒருகாலத்தில் நிலைகொண்டிருந்த அச்சூடகம் அதற்குத் துணை நின்றிருக்கின்றது. தவிரவும் புலிகளின் குரல், வெளிச்சம், ஈழமுரசு போன்ற ஊடகங்களில் உடனடி அரங்கேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இவை வெறுமனே பிரச்சாரக்கண்ணோடு பதியப்பட்டவை என்றால் குறித்த படைப்புக்களை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கின்றோம் என்ற கேள்வியும் தானாக எழும். தன் கண்ணுக்கு முன்னே கனன்று கொண்டிருக்கும் விடுதலை என்னும் ஆகுதியின் சமையலாய் அமைந்து விட்ட யதார்த்தமே பிறேமராஜனின் கவிதைகளில் இருக்கின்றன. வெறும் சொற்கட்டுக் குவியலாக அமைத்துச் சேர்த்த கவிதை ஜாலமாக அமையாமல் தன்னைச் சுற்றிய விடுதலை வேட்கையை நேர்மையோடு பதிவு செய்திருக்கின்றார் இந்தக் கவிஞன்.

“மாற்றான் எறிகணையால் கால் ஒன்று துண்டு பட, மறுகாலும் கையும் ஊனமுற ஆற்றல் போச்சே என்று அந்தரித்து அமர்ந்திருந்த ஆசான். அந்த நிலையிலும் கன்னித்தமிழில் கவிப்புனல் சுரந்த ஊருணி.
புத்தி வாத்தி என்ற பெருமையினை மறந்து, தன்னைத்தான் சொத்தி வாத்தி என்று சொல்லிக் கொண்டு தாழ்வுச்சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தவன். பின்னர் தன் வாழ்வுச் சிக்கலுக்கு விடை தேடி விழி மூடிக் கொண்டான்”
இப்படியாக “தீண்டிச் சென்ற தீட்சண்யன்” என்று தன் மனப்பதிவைச் சொல்லியிருக்கின்றார் ஈழத்தின் இன்னொரு ஆளுமை நாவண்ணன் அவர்கள்.

பிறேமராஜன் , 1958 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 2000 ஆண்டு வரை வாழ்ந்தவர். ஈழத்தில் பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வற்றாப்பளை, முள்ளியவளையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியைப் பருத்தித்துறை, ஹாட்லிக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை கண்டி, பேராதனையிலும் கற்று ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார்.

1990 இலிருந்து, தீட்சண்யன் என்ற புனைபெயருடன் , உலகெலாம் பரந்திருந்த போராட்டம் சம்பந்தமான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் பணிபுரிந்தார். தன் தம்பியர் இருவரை மட்டுமல்ல, மகன் பரதனையும் தேசவிடுதலைக்காய் காணிக்கையாக்கியவர் இவர். சிங்களத்தின் எறிகணை வீச்சினால் தன் காலை இழந்தாலும் தொடர்ந்தும் தேசப்பணி ஆற்றியவர் தன் இறுதி மூச்சு வரை.

“தீட்சணயம்” என்ற பெயரில் எஸ்.ரி.பிறேமராஜனின் கவிதைகள் திரட்டப்பட்டு மன ஓசை வெளியீடாக கடந்த மே 2009 இல் வெளியாகியிருக்கின்றது. மொத்தம் 92 கவிதைகள் 174 பக்களில் பதிவாகியிருப்பதோடு ஒவ்வொரு கவிதைகளுக்கும் பொருத்தமான கீற்றல் சித்திரங்கள் அமைந்திருக்கின்றன. கூடவே தீட்சண்யன் என்ற பிறேமராஜனின் வாழ்வியல் பதிவாக புகைப்படங்களும் அமைந்து காணப்படுகின்றன. ஓவியர் மூனாவின் ஆளுமை மிக்க சித்திரக்கீற்றல்களோடு பதிப்பாசிரியர் திருமதி சந்திரவதனா செல்வகுமாரனின் நேர்த்தியான தொகுப்பாக நூலகப் பிரதியாக கனத்த அட்டையோடு இருப்பது வெகு சிறப்பு.

“அண்ணனா ..தீட்சண்யனா..?
எனக்குள் என்றும் உயிர்ப்புடன்
கிளைவிடும் பெரு விரூட்சம் போல…!
அவ்வப்போது ஆறுதலுக்காய்…
அதன் கீழ் நான்…!

தன் அண்ணனின் இந்தக் கவிதைகளைத் தொகுதியாக இழைத்துப் பண்ணும் பேற்றை நிறைவாகச் செய்திருக்கின்றார் சந்திரவதனா என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கும் போது உணர முடிகின்றது.

“தீட்சண்யம்” என்ற இந்த நூல் வடலி இணையமூடாக விற்பனையிலும் இருக்கின்றது இங்கே

கவியரங்களில் பேசப்படுகின்ற கவிதை மொழிகளும், அச்சூடகத்துக்கு உண்டான சொற்கட்டுக்களும் என வகையான கவிதைகள் இருந்தாலும், இங்கே அதிகம் திரட்டியிருப்பது புலிகளின் குரல் வானொலியில் பகிர்வான கவிதைகளே. தியாகி திலீபன் அடங்கலாக மாவீரர் திறன் பாடும் கவிதைகளும், சமுதாய எழுச்சி நோக்கிய கவிதைகளும், பொருளாதாரத் தடையைச் சந்தித்த காலகட்டத்தின் அவலக் கவிதைகளும், போர்க்காலகட்டத்தின் தேவையை நோக்கிய அறைகூவலுமாகத் தீட்சண்யனின் இந்தக் கவிதைகள் விளங்கி நிற்கின்றன.

வாழ்ந்தீர்
வாழும் காலம் வரை வீரத்திலேயே வளர்ந்தீர்
தேசத்தின் விடிவுக்காய் தீ சுமந்தீர்
தீராத வேட்கையிலே தின வெடுத்தீர்
களங்களிலே கதை படித்தீர்
கடைசியிலே வீழ்ந்தீர் - ஆயினும்
வித்தாகவே புனிதப் புதைகுழியில்
புலிக்கொடி உடல் போர்த்திச் சாய்ந்தீர்
தீட்சண்யன் (பிறேமராஜன்)

இந்த நூலுக்கு அணிந்துரை பகிர்ந்த இலக்கியப்படைப்பாளி, கல்வியாளர் முல்லைமணி வே.சுப்ரமணியத்தின் பதிவாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் முருகையன் முதல் இளையதலைமுறைக் கவிஞர்களின் இலக்கியப்பதிவுகளும் அந்த வகையில் தீட்சண்யன் சென்ற பாதையையும் பொருத்தமான அவர்தம் கவிதைகளை எடுத்தாண்டு விளக்கியிருக்கின்றார்.
“கவிஞர் பிறேமராஜன் மரபுக்கவிதையிலும், புதுக்கவிதையிலும், பரிச்சயமுடையவர் என்பதை “தீட்சண்யம்” கவிதைத் தொகுதி காட்டுகின்றது. சாதாரண கிராமிய வழக்குச் சொற்களை மரபுக் கவிதையில் பயன்படுத்தி கவிதையை மிகவும் எளிமையாக்கியுள்ளார். இக்கவிதைத் தொகுதீல் சமகால நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்” இவ்வாறு சொல்கின்றார் முல்லைமணி வே.சுப்ரமணியம்.

….சொந்த மண்ணிலே வீதியிலே
எங்கள் காணிகள் மனைகளில்
மனைவிகளில் கூடவா
மாற்றானின் விரல்கள்…?
தீட்சண்யன் (பிறேமராஜன்)

“வன்னியிலே கவிபடித்த வானம்பாடி வற்றாது நீர் சுரந்து நின்ற தமிழின் ஊற்று” என்றதோர் பகிர்வாக பிறேமராஜன் அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கின்ற “தூரிகை”யின் பகிர்வும் நூலின் ஒரு பகுதியாக இருக்கின்றது.

தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி என்று சொல்லியவாறே முன்னுரை பகிர்ந்த திரு க.ஜெயவீரசிங்கம் ஆசிரியர், பிறேம் மாஸ்டர் என்ற தன் நண்பர் “தீட்சண்யன்” என்ற இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிருப்பதாகக் குறிப்பிடும் அவர் குறித்த கவிதைத் தொகுயில் தென்படும் பல்வேறு கவிதைக் கூறுகளைத் தன்பாணியில் சிலாகித்துப் சிறப்பிக்கின்றார்.

தீட்சண்யன் கவிதைகளைப் படித்து முடித்தால் எத்தனை வகையான மன உணர்வுகள் கலவையாக….
போரியல் வரலாற்றின் சுவடுகளாக, பொருளாதார நெருக்கடிகளின் பதிவுகளாக, அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தில் நிரந்த விடிவை நோக்கிய வேண்டுதலாக தம் மனப்பதிவுகளை நேர்மையோடு பதிவு செய்திருக்கின்றார். ஈழப்போராட்டத்தில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இருந்து இரண்டாயிரம் மிதக்கும் வரையான காலப்பகுதி மிக முக்கியமான தடைகளை, நெருக்கடிகளை, சவால்களைச் சந்தித்தது என்பதை மீண்டும் மீண்டும் கிளறி எடுத்துத் தருமாற் போல ஒவ்வொரு கவிதைகளும்.

புரிந்து கொள்ளுங்கள்! இது சிதையல்ல!
பட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது!

வேண்டுமென்றா செத்தேன்? இல்லை!
நாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்
கொடுமைக்கு நானும் பலியானேன்!

தன் சாவு நெருங்குவதைத் தான் உணர்ந்து தீர்க்கதரிசியாய் தீட்சண்யன் எழுதி வைத்த மேற் சொன்ன கவிதை வரிகள் அவருக்கு மட்டுமல்ல இன்றைய நம் தேசத்துக்கும் பொருந்தும்.

விதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ

admin April 28th, 2010

சிட்னி Taronga மிருகக்காட்சிச்சாலைக்காரருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம். இருக்காதா என்ன, சில மாதங்களுக்கு முன்னர் தான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானைக் குட்டி “Luk Chai” ஐ ஈன்றெடுத்த மண் என்ற பெருமையோடு லுக் சாயை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் வேளை இன்னொரு குட்டியும் இன்னும் சில மாதங்களுக்குள் பிறக்கப் போகிறதே என்ற இன்னொரு இனிப்பான செய்திதான் அது. இப்போது வளர்ந்து வரும் Luk Chai இன் தாய்க்காரி Thong Dee படுகண்டிப்பானவள். Luk Chai பால் குடிக்க வரும்போதெல்லாம் நெட்டித் தள்ளுவாள். அத்தோடு இவனின் வால்தனத்தை எல்லாம் கண்டு பேசாமல் இருக்கமாட்டாள். மண் மேட்டில் ஏறுகிறேன் பேர்வழி என்று மெல்ல மெல்லத் தாவி ஏறிப்போய் சரார் என்று இவன் வழுக்கி விழுந்த அனுபவத்தை எல்லாம் பார்த்துச் சகிக்காமல் தன் கையுக்குள்ளும்,காலுக்குக்குள் பொத்திப் பொத்தி வளர்த்தாள். ஆனால் Luk Chai அடக்குமுறையெல்லாம் துச்சமென்று மதிப்பவன். மிருகக்காட்சிச்சாலைப் பணியாளர்களுக்கே பெண்டு நிமித்தும் வேலை வைப்பான். கறுத்தப் பெட்டி போட்ட பந்தை உருட்டி முன்னங்காலால் சடாரென்று கோல் போடுவதில் அவனுக்கு நிகர் அவன் தான். தன் தாய்க்கு மட்டுமல்ல சித்திமார் வந்தால் கூட தன் பந்து விளையாட்டில் பங்கு கொடுக்காத கஞ்சப் பிறவி இவன்.

இப்படி Luk Chai தனிக்காட்டு ராஜாவாக ஆறு மாதங்களாக வளைய வரும் போது, அவனது சித்தி Porntip இன் உடலில் பெருத்த மாற்றம் மெல்ல மெல்ல ஏற்படுகிறது. இதற்கிடையில் மெல்பன் மிருகக்காட்சிச் சாலையிலும் Mali என்ற பெண் குட்டி பிறந்து விட்டாள். ஆனால் அவள் பெண் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசித்து விட்டார்கள். Porntip மிகுந்த பொறுமைசாலி என்று பெயரெடுத்தவள். தன் வயிற்றுக்குள் நூற்றுச் சொச்சம் கிலோ எடையுள்ள குழந்தையைச் சுமக்கிறோம் என்று எள்ளளவு வருத்தமோ வலியோ இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாளாம். Porntip தன் சுகமான சுமையை இறக்கும் காலமும் வந்தது. ஆனால் அதுவரை அவளுக்கு மட்டுமல்ல மிருகக்காட்சியில் விசேடமாக வரவழைக்கப்பட்ட மருத்துவருக்கும், அவரோடு அங்கே இருந்த பணியாளர் குழாமுக்கும் தெரிந்திருக்காது Porntip மிகப்பெரிய சவாலைச் சந்திக்கப் போகின்றாள் என்று.

மார்ச் 2010 ஆரம்பக் கிழமை அது. Porntip இருப்புக் கொள்ளாமல் தன் இருப்பிடத்தில் அங்குமிங்கும் அலைகிறாள். வயிற்றுக்குள் இருக்கும் தன் பிள்ளை அலுங்காமல் குலுங்காமல் வெளியே வரவேண்டும் என்ற கவலையை விட, தன் வயிற்றுக்குள் இருக்கும் வரை இதமான நிலையில் இருக்க வேண்டும் என்ற பெருங்கவலை தான் அவளைப் பீடித்தது. அதனால் ஒரு வாரகாலமாக உறக்கமற்ற இரவுகளில் கூட தன் இருப்புக் கூண்டின் இரும்புச் சட்டங்களில் தன் காலை ஒருக்களித்து வைப்பதும் பின்னர் இறக்குவதுமாக இருக்கிறாள். இதையெல்லாம் தூக்கம் தொலைத்த சிவப்புக் கண்களோடு மருத்துவர் குழாம் நேரடியாக வீடியோ கருவி மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அந்த அவதானம் மெல்ல மெல்லக் கவலையாக உருவெடுக்கிறது. இதற்கு மேல் பொறுமையிழந்த அவர்கள், மெல்ல எழும்பி வந்து Porntip இன் உடலைப் பரிசோதிக்கிறார்கள், அல்ட்ரா சவுண்ட் கருவி மெளன மொழி பேசுகின்றது. அந்தக் கணம் அவர்கள் உடைந்து போகிறார்கள், விரக்தியோடு ஆளையாள் பார்த்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மார்ச் 8, 2010

Taronga மிருகக்காட்சியின் பேச்சாளர் ஊடககங்களுக்குத் தன் வாயைத் திறக்கிறார். Porntip உடலில் இது நாள் வரை சுமந்து வந்த குட்டி இறந்து விட்டது என்ற அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் முதன்மைச் செய்தியாக வந்து கவலை ரேகையைப் பரப்புகின்றது. அதைவிடக் கொடுமை Porntip இன் உடலில் இருக்கும் அந்த செத்த பிள்ளையை வெளியே எடுக்க முடியாது, அது இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் அப்படியே தாயின் உடலுக்குள் சமாதியாய் இருக்க வேண்டியது தான். செத்துப் போன குட்டியை எடுக்கும் முயற்சியில் Porntip இன் உயிருக்கே உலைவைத்து விட வேண்டிய துர்பாக்கிய நிலை வந்து விடும் என்று கூட இருந்த வைத்தியர்கள் கவலையோடு சொல்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் Porntip இருப்பாளோ என்னமோ, தன் இருப்பிடத்தில் இன்னும் ஒரு அமைதி நிலையற்று துர்பாக்கியவதி போன்று அலைந்து திரிந்து கொண்டிருந்தாள்.


மார்ச் 10, 2010

அதிகாலை மூன்று மணியைத் தொடுகிறது. இது நாள் வரை தொடர்ச்சியாக ஒவ்வோர் இரவும் மருத்துவ தீவிர கண்காணிப்பில் இருந்த Porntip களின் இற்கு இதெல்லாம் இல்லாத ஒரு இரவு. அவள் மட்டும் தன் கூட்டில் இருக்க,Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளோடு Thong Dee உம் ஒருக்களித்து ஒரே கூண்டில் படுத்திருக்கிறாள். Thong Dee இன் வால் பையன் Luk Chai நேரம் மூன்று மணியாகியும் நித்திரை வராமல் அதே கூண்டுக்குள்ளே சுற்றும் வளைய வந்து கொண்டிருந்தான். இந்த நேரம் நீச்சல் அடிக்கவும், கால் பந்து விளையாடவும் ஆட்களைத் தேடியிருப்பான் போல. Luk Chai இற்கும் சிறிது நேரத்தில் களைப்பு வந்து தன் தாய் Thong Dee இன் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெருக்கமாகத் தூங்கிப் போகிறான்.

ஒரு வீடியோ கண்காணிப்புக் கருவி மட்டும் அமைதியாக இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

நேரம் அதிகாலை 3.27

Porntip தன் அரைத்தூக்கத்தை உத றிவிட்டுத் தன் கூண்டில் இருந்து வெளியே ஓடுகிறாள். கூண்டின் புறப்பகுதியில் இருந்த சதுக்கம் அது. அங்கே போனதும் தான் தாமதம் அப்படியே தன் வயிற்றில் இருந்ததைக் கொட்டுகிறாள். அந்து ஒரு சதைப்பிண்டமாக சதுக்கத்தின் குழிக்குள் போய் விழுகிறது. இது நாள் வரை மலையே சரிந்தாலும் தன் கவலை தன்னோடு என்று க ர்ப்ப உபாதையை அடக்கப் பழகிக் கொண்ட Porntip இந்தக் கணம் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு பெருங்குரலெடுத்தவாறே அழுகிறாள். சத்தம் கேட்டதும் தான் தாமதம் படுத்திருந்த யானைகள் திடுக்கிட்டு எழுந்து ஆளுக்கொரு திசையாக பிளிறிக் கொண்டே போகின்றன. Tang Mo என்பவள் மட்டும் Porntip இன் சத்தம் வரும் திசையைக் கண்டுணர்ந்து அந்தப் பக்கம் ஓடுகின்றாள். அங்கே Porntip குழியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறாள். இவளை ஆறுதல்படுத்துமாற் போல Tang Mo என்ற அந்தப் பெண் யானை பக்கத்திலேயே நிக்கிறாள். ஆனால் இருவருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்.

காலை புலர்கிறது. யானைப்பணியாளர்கள் இவர்களின் இருப்பிடத்துக்கு வருகிறார்கள். ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை மட்டும் அவர்களால் உணர முடிகிறது. மெல்ல மெல்லத் தயங்கி அந்தச் சதுக்கத்துக்கு வருகிறார்கள். அங்கே Porntip உம் Tang Mo நிற்கும் கோலமும் கீழே அந்தக் குழியில் ஒரு உருவம் மிதப்பதையும் பார்த்த கணம் திடுக்கிடுகிறார்கள். அந்த வயதான ஆண் உதவியாளர் உடனே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கூட வந்த அந்த இளம் பெண் பணியாளரை ஒரு துணியைச் சீக்கிரமாகக் கொண்டு வருமாறு கட்டளை இடுகின்றார். அவள் அழுதுகொண்டே ஓடிப்போய் எடுத்து வருகிறாள். முதலுதவி ஆரம்பமாகிறது, யாருக்கு? குழிக்குள் அசைந்து கொண்டிருக்கும் அவனுக்குத் தான்.

தன் தாய் Porntip பக்கபலமாக இருக்க நடந்து முடிந்த முதலுதவியும், உடனடி சக்தி மருந்தும் அவனைத் தெம்பாக்குகிறது. காலனுக்குக் கண் அடித்து விட்டு மெல்ல எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் உடனே முடியவில்லை. இன்னும் மெல்ல இன்னும் மெல்லெ என்று எழும்பி எழும்பி மீண்டும் விழுவதும் சறுக்குவதுமாக இருக்கிறான், ஆனாலும் விடவில்லை. தன்னை நெருங்கி வந்த சாவையே விரட்டியவன், தனக்கு மரண சாசனம் எழுதியவர்களின் நினைப்பையே மாற்றியவன் அல்லவா அவன். ஆம் மெதுவாக….ஆனால் நிதானமாக…உறுதியாக எழ ஆரம்பித்தான் ஐந்து மணி நேரம் கடந்து. மிருகக்காட்சிச் சாலைப் பணியாளர்களின் கண்கள் ஆனந்தத்தால் அல்ல ஆச்சரியத்தால் நிரம்பியதை கண்ணீரால் உறுதிப்படுத்தினார்கள். Porntip முறுவலிப்போடு தன் சிங்காரப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் வந்து வேண்டிய மட்டும் ஆசை தீரத் மடியில் பாலைக் குடிப்பதை அமைதியோடு அனுமதிக்கிறாள். 116 கிலோ குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கின்றது.

மிருகக்காட்சிச் சாலை இயக்குனர் Cameron Kerr, சொன்னார் இப்படி ” his birth was set to rewrite the textbooks”. மருத்துவ நிபுணர் Dr Thomas Hildebrandt (Berlin Institute for Zoo and Wildlife Health), such an outcome after a protracted labour has never been seen before” என்று சொல்லி வியக்கிறார்.


Sydney’s baby elephant ‘miracle’: he’s alive

இப்படிக்கொட்டை எழுத்துக்களில் சிட்னியின் முன்னணிப் பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுமளவுக்குப் பிரபலமாகி விட்டான் இவன்.

Pathi Harn என்று அவனுக்கு அவனின் தாய் வழி தேசமான தாய்லாந்து மரபுப் பெயரும் வைத்தாகி விட்டது அவன் பெயருக்கு அர்த்தமே அதிசயம் (miracle) தானாம்.

இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.

கண்களை அகல விரித்துக் கொண்டே தன் தாயின் மடி தரும் நிழலில் அவளோடு ஒட்டியவாறே மெல்ல நடக்கிறான் இந்த விதியைத் துரத்திய யானைக் குட்டி.

Luk Chai இன் பிறப்பு பற்றிய எழுதிய முந்திய பதிவு:
ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு

உசாத்துணை மற்றும் படங்கள்:
Taronga மிருகக்காட்சிச் சாலை பிரத்தியோகத் தளம்
Channel 7 இன் விவரணச்சித்திரம் The Zoo
The Sydney Morning Herald

வரியப்பிறப்பு வந்துட்டுது…..

admin April 12th, 2010

புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.

வரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்குள்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார்.

நித்திரை வந்தாத் தானே, நாளைக்கு வரியம் பிறக்கும் எண்டு மனசுக்குள்ளை ஒரே புழுகம்.

அந்த நாளும் வந்திட்டுது. வருசம் பிறக்கிறதுக்கு முன்னமேயே முதல் நாள் வாங்கி வச்ச மருத்து நீரை எல்லாற்றை தலையிலும் தடவி விடுவார் அப்பா, கடைசியா தன்ர தலையில் மிச்சத்தை ஒற்றி விட்டுட்டு கிணத்தடிப் பக்கம் அனுப்புவார். ஏற்கனவே அயலட்டைச் சனமும் பங்குக் கிணற்றுக்கு இரண்டு பக்கமும் நிண்டு தண்ணி அள்ளித் தோஞ்சு கொண்டு நிக்கும் பாருங்கோ. நாங்களும் அதுக்குள்ளை ஒருமாதிரி இடம்பிடிச்சு சலவைக் கல்லுக்கு மேலை குந்திக் கொண்டிருப்பம். துலாவாலை அள்ளின தண்ணீரை அப்படியே சளார் எண்டு பாய்ச்சுவார் அப்பா.

தோஞ்சு போட்டு தலை எல்லாம் ஈரம் போகத் துவட்டி விட்டு சாமியறைப்பக்கம் போவம். அங்கை எங்களுக்கு முன்னமே அப்பா நிண்டு தேவாரம் படிச்சுக் கொண்டிருப்பார். எங்கட கண் போறது வெத்திலைக்குள்ளை மடிச்சு வச்சிருக்கிற காசுப் பக்கம். ஆனா அது உடனை கிட்டாது.
“வருசம் பிறக்கேக்கை கோயிலடியில் நிக்கோணும், வாருங்கோ பிள்ளையள்” கும்பிட்டுக் கொண்டு நிண்ட அப்பா திருநீற்றை எங்கட நெத்தியிலையும் ஒரு இழுப்பு இழுத்து விட்டு சைக்கிளில் ஏத்திக் கொண்டு போவார் மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு.

கோயில் மணிக்கூட்டுக் கோபுரத்தில கட்டியிருக்கிற லவுட்ஸ்பீக்கரில் செளந்தர்ராஜன் குந்தி இருந்து
“உச்சிப்பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சியின் மலையினிலே” பாடிக்கொண்டிருக்கிறார்.
அண்டைக்கு வாற சனமெண்டா சொல்லி மாளாது. கோயிலின்ர சந்து பொந்தெல்லாம் சனம் சனம் தான். வருசப்பிறப்பு மத்தியானம் ஒரு மணிக்குப் பிறந்தால் என்ன, விடியக்காத்தாலை இரண்டு மணிக்குப் பிறந்தால் என்ன இப்பிடித்தான் ஒரு கூட்டம் இருக்கும். பிள்ளையார் புதுப்பட்டு கட்டி அந்த மாதிரி இருப்பார். கோயில் மேளமும் நாதஸ்வரமும் பலமான ஒரு உச்சஸ்தாயியில் முழங்கும்போது ஐயர் மூலஸ்தானத்தில் பஞ்சாராத்தி காட்டிக்கொண்டிருப்பார். வருசம் பிறந்திட்டுதாம். புது வெள்ளை நோட்டை அருச்சனைத் தட்டில் வச்சு கியூவில் நிண்டு அருச்சனை செய்வம்.
எப்படா வீட்டை போவம் எண்டு உள்ளுக்கை இருக்கிற வேதாளம் அடிக்கடி கேட்கும்.

வீட்டை வந்தாச்சு. சாமியறையில் இருந்து அப்பா கூப்பிடுறார். முதலில் அம்மா, அடுத்தது பெரியண்ணா, அடுத்தது சின்னண்ணா, பிறகு நான் ஒவ்வொருவருக்கும் சாமிப்படத்துக்கு முன்னாலை இருக்கிற தட்டிலை வெத்திலையில் மடிச்சு வச்ச புதுத்தாளைக் கைவியளமாகத் தருவார் அப்பா.
அப்பர் ஒரு கிழமைக்கு முன்னமே பாங்க் ஒவ் சிலோனுக்குப் போய் தன்ரை பழைய நோட்டுக்களைக் கொடுத்து புதுசாக்கி வச்சிருந்தவர். ஒவ்வொருவரின் வயசுக்கு ஏற்ப கைவியளம் கொடுக்கிற காசின் பெறுமதியும் வித்தியாசப்படும். அம்மாவுக்கு தான் நூறு ருவா தாள், நான் தான் கடைசி, இரண்டு ருவா தாள் :( அப்பாவுக்கு ஆர் கைவியளம் கொடுப்பினம் எண்டு அப்ப நான் என்னையே கேட்பன்.

“வாத்தியார்! நான் மார்க்கண்டன் வந்திருக்கிறன்” தோட்டத்திலை வேலை செய்யிற மார்க்கண்டனும் ஒரு நாளும் இல்லாத திருநாளா புது வேட்டி கட்டி வந்திருக்கிறான், வழமையா செம்பாட்டு மண் எல்லாம் அப்பி ஒரே சிவத்த நிற அழுக்கு வேட்டி தானே கட்டியிருப்பான். மார்க்கண்டனோட அவன்ர மேள்காறியும் வந்திருக்கு.
“இரு மார்க்கண்டன் வாறன்” அப்பா உள்ளுக்கை நிண்டு சொல்லுறார். அம்மா அரியதரத்தட்டை மார்க்கண்டனுக்கும் மகளுக்கும் நீட்டுறா. மார்க்கண்டன் மகள் அரியதரத்தை வாங்கிக் கொறிச்சுக் கொண்டு முற்றத்திலை நிண்டு விடுப்புப் பார்க்குது. இங்கேயும் சீனியாரிட்டி படி மார்க்கண்டனுக்கு அம்பது ருவா தாளும், மகளுக்கு ஒரு ருவா குத்தியும் கொடுக்கிறார் அப்பா. நான் களவு களவா நான் என்ர ரண்டு ருவா தாளை காட்டி காட்டி பாசாங்கு செய்யிறன் அவளுக்கு.

ஹீரோ சைக்கிளில் சித்தப்பா வாறது தெரியுது. சைக்கிளை ஸ்ராண்டிலை நிப்பாட்டுக்கையே “பிள்ளை! ஒரு எல்லுப்போல தண்ணி தா, போதும்” அம்மாவிடம் கேட்கிறார். புதுவருசம் பிறந்ததும் சொந்தக்காரர் வீட்டிலை நாளுக்கு தேத்தண்ணியாதல் வாங்கிக் குடிக்கவேணும் எண்டது இன்னொரு சடங்கு. சித்தப்பா தன் சேர்ட் பொக்கற்றுக்கை கை விட்டு ஒவ்வொருவரா கைவியளம் தாறான். வாங்கின காசையெல்லாம் மடிப்பு குலையாமல் பொத்தி வைச்சிருக்கிறன்.

“அப்பு வீட்டை போகோணும், மினக்கடாம வாருங்கோ எல்லாரும்” அம்மாவுக்கு தன்ர இனசனம் வீட்டை போறதெண்டா டபிள் மடங்கு சந்தோசம். எனக்கும் அப்பு வீட்டை போகப் பிடிக்கும். ஊரில் பெரும் பணக்காரர் அவர். ரவுணில் ரண்டு கடை, பளையில தென்னந்தோப்பு, இப்ப புதுசா பவர் லூம் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கிறார். அப்பு வீட்டுப்பக்கம் போனால் ரஜினிகாந்தின்ர வீட்டு முகப்பு மாதிரி ஒரே சனக்கூட்டம். அப்புவிடம் வேலை செய்பவர்கள், அயலவர்கள் என்று குழுமி இருந்தார்கள். எல்லாருக்கும் ஒரு பெரிய நோட்டும் ஒரு ருவாயும் வச்சு வெத்திலையிலை குடுத்துக் கொண்டிருக்கிறார். நூறு ரூவா தாள் குடுக்கக்கூடாது, நூற்றி ஒண்டாத்தான் குடுக்கோணும்.

அப்பு வீட்டிலை மத்தியானச் சாப்பாடு அறுசுவையோடு கிடைக்கிது. வடிவாச் சாப்பிட்டாத் தான் தட்டில இருக்கிற கறுத்தக்கொழும்பான் மாம்பழம் கிடைக்குமாம், சித்தி சொல்லுறா.

சாப்பிட்டு முடிச்ச கையோட, விறாந்தையில் இருந்து சித்தி மகளோடையும், மாமான்ர பிள்ளையளோடையும் இருந்து எங்கள் ஒவ்வொருவருக்கும் சேர்ந்த காசை எண்ணிக்கொண்டிருக்கிறம்.
பச்சை, மண்ணிறத்தாளில் தமிழ் எழுத்துக்களில் அச்சொட்டாக எழுதியிருக்கு. சிங்கள எழுத்தை வளைச்சு வளைச்சுப் பார்க்கிறம். பராக்கிரமபாகுவின்ர படம் போட்டிருக்கு.

நியூவிக்ரேசில் எடுத்த படக்கொப்பியோட அண்ணர் வாறார். றஜனியும், கமலும் நடிச்ச ஆடுபுலி ஆட்டமாம். றஜனி எத்தினை தரம் சிகரட்டை இழுக்கிற சீன் வந்தாலும் பார்க்க அலுக்காது. பழைய படம் எண்டாலும் இண்டைக்கு நித்திரை கொள்ளாமல் பார்த்து முடிக்கோணும்.

000000000000000000000000000

ஏப்ரல் 13 திகதி, 1994
மடத்துவாசல் பிள்ளையாரடியின் தேர் முட்டிக்கு கீழை இருந்து ஐயர் வீட்டுப் பக்கமா மருத்து நீர் வாங்கப் போறவாற சனத்தை வேடிக்கை பாத்துக் கொண்டு இருக்கிறம். பழைய கோக் போத்தலில் இருந்து, யானை மார்க் சோடாப் போத்தல் ஈறாக ஆளாளுக்கு ஐயர் வீட்டுப் பக்கம் போய் போத்தல் ஒரு ரூவாய் கணக்கில் வாங்கிக் கொண்டு வருகினம். எல்லாருக்கும் முதல் நாங்கள் இந்த வேலையைச் செய்து முடிச்சதுக்கு சாட்சியமாக எங்கட காலுக்கை மருத்து நீர் போத்தல்கள் இருக்கினம். செம்மஞ்சள் அடிச்ச வானம் கொஞ்சம் கொஞ்சமா கறுப்புக் கலருக்கு மாறுது. ஐயர் வீட்டுப் பக்கம் போகும் கூட்டமும் மெல்ல மெல்லக் குறையுது. பிள்ளையார் கோயில் கதவும் மூடுப்படுகுது. அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் கடைசி வகுப்பு முடிஞ்சு சுதுமலை, மானிப்பாய் பக்கம் பெட்டையள் சைக்கிளில் போகினம். கொஞ்சம் கொஞ்சமா சைக்கிளில் வரும் பெடியள் கூட்டம் பிள்ளையாருக்கு எட்டி நின்று கும்புடு போட்டு விட்டு எங்கட அரட்டைக் கச்சேரியில் வந்து சேருகினம். ஆறு மணிக்கு தொடங்கினால் சாமம் சாமமாக அலட்டல் கச்சேரி தான் தான். சுத்துமுத்தும் கரண்ட் காணாத கும்மிருட்டு, அயலட்டை வீடுகளில் இருக்கிற குப்பி விளக்குகள் பெருங்கிழவனின் பொக்கை வாய் மாதிரி தெல்லுத் தெல்லா தெரியினம்.

ஐயர் வீட்டிலை மருத்து நீரை வாங்கிக் கொண்டு வாறம்.
“மச்சான், நாளைக்கு ஒரு புதுமையா எல்லாக் கோயில் பக்கமும் போயிட்டு வருவம்” இது சுதா.

வருசப்பிறப்பு நாள் அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி குளிச்சு முழுகி நிற்கிறேன். சுதா லுமாலாவில் வந்து என்னை ஏத்துறான். அரவிந்தன், சந்திரகுமார், கிரி, இன்னொரு சுதா எல்லாரும் கோயில் பக்கம் வெளிக்கிடுறம். முதலில் பிள்ளையார் கோயில், பிறகு பக்கத்திலை இருக்கிற இணுவில் கந்தசாமி கோயில், நல்லூர் எல்லாம் கண்டு, தாவடிப்பிள்ளையாரடிக்கு வந்து அங்கே அன்று ஓட இருக்கும் வெள்ளை, சிவப்புத் துணியால் அலங்கரிச்ச கட்டுத்தேரைப் பார்த்துக் கொண்டே மருதடிப்பிள்ளையார் கோயிலடிக்கு மானிப்பாய் றோட்டால் சைக்கிள்களை வலிக்கிறோம்.
பலாலிப்பக்கமா ஒரு பொம்மர் போகுது, இண்டைக்கு அவங்களுக்கும் கொண்டாட்ட நாள் தானே.

நான்கு வருசங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பனி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காறனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்காத்து மூஞ்சையிலை அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்……..

அருட்செல்வம் மாஸ்டர் வீடு

admin April 2nd, 2010

“அம்மோய்! அருச்செல்வம் மாஸ்டர் வீட்டை போட்டுவாறன்” பள்ளிக்கூடத்தால் வந்த களைப்பை முகம் அலம்பி தண்ணி தெளிச்சுக் கலைத்த பின்னர் உடையை மாற்றிக் கொண்டே ஓடுகிறேன் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூசனுக்கு. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னர் என் ஆரம்ப வகுப்பு நாட்களின் தினசரி வாடிக்கை இது. இந்த ஓட்டம் எனக்கு மட்டுமல்ல, ஒத்த அயற்கிராமத்தில் வாழ்கின்ற பள்ளிப்பிள்ளைகளுக்கும் ஒரு வாடிக்கையாய் போய் விட்ட நிகழ்வு இது.

“இரா. அருட்செல்வம்” இந்த மந்திரச் சொல்லை உச்சரிக்காத இணுவில் கிராமவாசிகள் மட்டுமல்ல, அயற்கிராமங்களான உடுவில், தாவடி, மானிப்பாய், கோண்டாவில் பிரதேசவாசிகள் இல்லையென்றே சொல்லலாம். ரியூசன் வகுப்புக்கள் எனக்கு அறிமுகமாகாத காலகட்டத்தில் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரீயூசனுக்கு அண்ணன்மார் போகும் போது நான் வீட்டு கேற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்கிய காலம் உண்டு. ஆறாம் வகுப்பில் இருந்து தான் அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுப் படலை திறக்கும். அந்த நாளும் வந்தது. நல்ல நாளொன்றில் தான் புது வகுப்புக்களை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் புதுக்கொப்பி, ரெனோல்ட் போனையுடன் அதிகாலையில் முதல் ஆளாய் போய் நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக என் வயதையொத்த வாலுகள் வந்தன. எல்லோருமே ஆளையாள் பார்த்துக் கொண்டே வாங்கில் இருந்தோம். அருட்செல்வம் மாஸ்டர் வருவார் என்று. வந்தவர் அவருடைய தம்பி திருச்செல்வம். அப்போதெல்லாம் திருச்செல்வம் மாஸ்டர் தான் ஆரம்ப வகுப்புக்களை எடுத்துக் கொண்டு வந்தொருந்தார். மிகவும் கண்டிப்பான மனுசன். நாங்கள் புது வகுப்புக்குப் போன முகூர்த்தமோ என்னமோ திடீர் வெளிநாட்டு வாய்ப்புக் கிட்டி திருச்செல்வம் மாஸ்டர் வெளிநாடு போய் விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் மேலதிகமாக படிக்கக் கூடிய அதிஷ்டமும் எங்களை வந்து சேர்ந்தது.

அருட்செல்வம் மாஸ்டரை நினைத்தால் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டி கையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.

அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர் வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்ததால் சில சமயம் அங்கிருந்து எங்கள் வகுப்புக்கு வர காலதாமதமாகும். அந்த அவருடைய கடைசித் தங்கை அருட்செல்வி அக்காவிடம் தான் எங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு விடப்படும். ஆனால் எங்கள் வால்தனங்கள் எல்லை மீறி கூச்சலும் கும்மாளமுமாக மாறும் போது அருட்செல்வி அக்காவுக்கு அநாதரட்சகராக வருவார் அவர் தாய் ஆச்சி. செறிந்து வளர்ந்த செவ்வரத்தமரத்தின் கிளையை ஒடித்து வந்து எங்களுக்கு ஆச்சி கொடுக்கும் பூசை மறக்கமுடியாது.

அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. “விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா” என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து “என்னடா உடுப்பிது” என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.

அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு
படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.

பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா ” எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்” பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.

எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு “விதுரன் கதை” நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.
பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு ” அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் ” என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.

O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.

அருட்செல்வம் மாஸ்டரின் ரியூசன் வருவாய் தான் அவர்களின் குடும்பத்துக்கு பெரும் பலமாக இருந்தது. இடையில் வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டிய வேளை நாம் ஓ எல் படித்துக் கொண்டிருந்தோம். அவர் இடத்துக்கு இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். எங்களுக்கோ “கடவுளே!, அருட்செல்வம் மாஸ்டர் திரும்பி வரவேணும்” என்ற பிரார்த்தனை. எங்கள் பிரார்த்தனை மடத்துவாசல் பிள்ளையார் காதில் கேட்டிருக்க வேணும். அருட்செல்வம் மாஸ்டர் மீண்டும் பழையபடி தன் ரியூசன் வகுப்புக்கு வந்து சேர்ந்தார். அதுக்குப் பிறகு அவரும் வெளிநாட்டுக்குப் போகும் யோசனையை கைவிட்டு விட்டார். அருட்செல்வம் மாஸ்டரிடம் அடிப்படைக் கல்வியைக் கற்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக என்று ஏராளம் விழுதுகள்.

ரியூசனில் இருக்கும் குழப்படிகாறப் பெடியளில் நானும் வெகுவேகமாக முன்னேறி வந்து விட்டேன். பள்ளிக்கூடத்தில் பெட்டிபாம்பாய் இருந்த குழப்படிகளை ரியூசனில் காட்டுவதே வாடிக்கையாகிவிட்டது. அருட்செல்வம் மாஸ்டருக்கு மட்டும் என் பெயர் “கள்ளப்பிரபு”. “எங்கே எங்கள் கள்ளப்பிரபு வந்துவிட்டானா?” என்று சொல்லிக் கொண்டு வகுப்புக்குள் வருவார். ஆனால் ஒரு நாள் கூட அவர் கை என்னைப் பதம் பார்க்கவில்லை. அருட்செல்வம் மாஸ்டருக்கு கோபம் வந்தாலும் அவர் அதை பக்குவமான அறிவுரையாக மாற்றி பேசும் போது எங்கள் குழப்படிகளுக்கு சூடு வைக்கும். அருட்செல்வம் மாஸ்டரின் அன்பைப் பெறுவதற்காகப் போட்டி போட்டுப் படித்தவர்கள் பலர். ஆனால் நம்ம ராசிக்கு கணக்குத் தான் சுட்டுப் போட்டாலும் ஏறாதே.

அருட்செல்வம் மாஸ்டரிடம் இருந்த நேசம் மரியாதையாக மாறி இன்றும் என் மனதில் இருப்பதற்கு ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நடக்கும் காலம் நெருங்கி விட்டது. அப்போது தான் என் சின்ன அண்ணனின் துர் மரணம் வந்தது. பரீட்சை நடக்க ஒரே மாதம் தான். மரண வீட்டில் பாடப்புத்தகத்தைத் திறந்து படிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம். புத்தகத்தைத் திறந்தால் அண்ணனின் முகமும், பக்கத்து அறையில் அம்மாவும், உறவினர்களும் அழுது புலம்பும் வேதனை ஒலிகளுமாக. என்ன செய்வது, யாரிடம் போவது?, பக்கத்து வீடுகளிலும் அந்த நேரத்தில் அண்டமாட்டார்கள், துடக்குகாரர் (தீட்டு)தம் வீட்டுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் தான். அப்போது தான் அருட்செல்வம் மாஸ்டர் என்னைத் தேடி வந்தார்.
“பிரபு! நீ எங்கள் வீட்டுக்கு வந்து படி, ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் சொல்லித் தருகின்றேன்” என்று விட்டு வேகமாகப் போய் விட்டார். தயங்கித் தயங்கி அவர் வீட்டுக்குப் போகின்றேன். வெளியே போடப்பட்ட ஒரு வாங்கில் உட்கார்கிறேன். “உள்ளுக்கு வந்து இருந்து படி பிரபு” இது அவரின் அம்மா ஆச்சி. பரீட்சைக்காலம் முடியும் அவரை அருட்செல்வம் மாஸ்டரும் ஆச்சியும் என்னைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000

2007 ஆம் ஆண்டு 14 வருஷங்கள் கழித்து அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக்குப் போகிறேன்.
படலை இல்லாத,அகலத் திறந்த வெறும் முகப்பினை எல்லாம் சைக்கிள்கள் நிறைத்து நிற்கின்றன. உள்ளே மெதுவாக நடந்து போய் எட்டிப் பார்க்கின்றேன். நீளப்பலகைகளால் செய்த வாங்குகள். அங்கே தானே நான் எப்போதும் இருப்பேன். மற்றப்பக்கத்தில் அதே வரிசையில் அவள் இருந்து படிப்பாள் இல்லையா? திடீரென்று பழைய நினைவலைகளுக்குள் சுனாமியாய் இழுத்துக் கொண்டு மனம் போகிறது.

கடுமையான யுத்தம் தீவுப்பகுதி மக்களையும் இடம்பெயர்த்து யாழ்ப்பாணப் பெரும்பாகத்துக்குள் தள்ளியது. அப்படி வந்தவள் தான் அவள். வேலணையில் இருந்து இடம்பெயர்ந்து தாவடியில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தாள். முதல் நாள் தரிசனத்திலேயே என் மனதை இடம்பெயரவைத்துவிட்டாள்.

ஓ எல் வகுப்பில் ஒரு நாள். விஞ்ஞான பாட நேரத்தில் அருட்செல்வம் மாஸ்டர் இறுதிப் பரீட்சைக்கு நாம் தயாரா என்று பரிசோதிக்க திடீரென்று கேள்வி நேரம் ஒன்றை வைக்கிறார். அவளைத் தான் முதலில் பார்த்துக் கேட்கிறார். எனக்குத் தெரியும், அவள் கெட்டிக்காறி, கட்டாயம் விடை சொல்லுவாள்.
“…… நீர் சொல்லும், பெண் தன்மைக்கான சுரப்பி எது”?
அருட்செல்வம் மாஸ்டர் கேள்வி கேட்டதும் வேகமாகத் தலையாட்டி தெரியாது என்கிறாள், கடைக்கண்ணால் பார்த்து எனக்கே ஏற்பட்ட அவமானம் போல குறுகி என் பலகை மேசையை மட்டும் வெறித்துப் பார்க்கிறேன். பக்கத்தில் இருந்த நண்பன் எனக்கு பேனையால் குத்தி சீண்டுகிறான்.

அந்த நேரத்தில் தான் ஆண்டவனே எதிர்பார்த்திருக்க மாட்டான்.
“பிரபு நீர் சொல்லும், அந்தக் கேள்விக்கு விடை என்ன?” அருட்செல்வம் மாஸ்டர் கூடியிருந்த மாணவர் மத்தியில் என்னை எழுப்பிக் கேட்கிறார்.

“ஈஸ்ட்ரோஜின் சேர்” சரியான விடை சொன்ன புழுகத்துடன் சொல்லி விட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பெற்றிய பெருமை கணக்காக இருக்கிறேன். சரியான விடை சொன்னதுக்கு இல்லை, அவள் காதில் நானும் படிக்கிறேன் என்பதை போட்டு வைத்தேனே என்ற பெருமையில் தான்.
காதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.

நினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.
இன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.
வகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.

“பிள்ளையள் சத்தம் போடாதேங்கோ, கொஞ்ச நேரத்தில் வாறன்” சொல்லியவாறே அதே தன் ட்ரேட் மார்க் சிரிப்போடு அருட்செல்வம் மாஸ்டர் என்னை நோக்கி வருகிறார்.

பேஸ்புக்கில் அருட்செல்வம் மாஸ்டர் டியூட்டறி

சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ

admin March 8th, 2010

சொந்த நாட்டில் வாழ்வைத் தொலைத்து, கடல் கடந்த நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடி ஓடி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ்ச்சமுகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமது புலம்பெயர் வாழ்வைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் நம் புலம்பெயர் சமூகத்தை எட்ட நின்று பார்ப்பவனுக்கு அக்கரைப் பச்சையாய் இருக்கும். ஆனால் அனுபவித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை இலக்கியமாகவும், திரைப்படங்களாகவும் படைத்திருப்பதோடு பாடல்களாகவும் வந்து புலம்பெயர் வாழ்வியலின் யதார்த்தத்தைக் காட்டியிருக்கின்றன. அப்படியானதொரு படைப்பு இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான “பூபாளம்” என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின் இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை. அந்த வகையில் லூசியம் நண்பர்களின் இந்தப் பாடல்களை எழுத்தாக்கியும், ஒலிவடிவிலும் இங்கே பகிர்கின்றேன்.

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ

தாயகத்தில் இருந்து பெற்றோரைத் தம்முடன் இருக்க அழைத்து வந்து, பிள்ளை பராமரிப்பாளர்களாகவும், வீட்டுக்காவல்காரகளாகவும் அமைத்த பெருமை கூட புலம்பெயர் வாழ்வினைச் சாரும். அந்தச் சூழலில் ஒரு புலம்பெயர் மூத்த குடிமகள் பாடும் பாடல் இப்படி இருக்கும்.

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

மூத்தவன் முருகன் முழு நாளும் வேலை
இளையவன் ராசன் ராப்பகல் வேலை
நடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை
எப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

மரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்
சூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி
சனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி
உயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

பேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி
ஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி
அந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி
உண்ணாணைத் தான் சொல்லுறேண்டி
எங்கள் வாழ்க்கை போச்சுதேடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

குளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி
குறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி
ஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி
இங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

கலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி
கூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி
படிச்சவர் பழையவர் எனப்பல பேரடி
பதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி

அன்னம்மாக்கோய்…..அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ……

கூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி
வயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி
கொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி
கப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி

அன்னம்மாக்கா பொன்னம்மாக்கா ஓடியாருங்கோ
இந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ
சீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ

ஐயோ ஐயோ இதுதானே லண்டன்

தாயத்தில் இருந்து வந்ததும் நான்கு, ஐந்து பேராக ஒரே அறையில் தங்கிப் படிப்பதும், வேலை செய்வதும், களியாட்டம் செய்வதுமான இளையோர் வாழ்வியல் இப்படி இருக்கும்.

ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

ஒண்டு ரண்டு மூண்டு நாலு அஞ்சு ஆறு ஏழு
எட்டு மணி ஆகிப்போச்சு பள்ளிக்கூடம் ஓடு
ஓடிப்போன களைப்புத் தீர Pubக்கும் ஓடு
College fees கட்ட வேணும் வேலைக்கும் ஓடு

டேய் எழும்படா பள்ளிக்கூடம் போகேல்லையே
காலமை தான் வேலையால் வந்தனான் அண்ணை
Assignment செய்து முடிக்கோணும் எண்டாய்?
ஆரும் எழுதுவாங்கள் பார்த்தெழுதலாம்

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

பிஎஸ்ஸி, எம் எஸ் ஸி, ஏஎச்ஸி, ஏபிசிடி
கஷ்டப்பட்டுப் படித்தவர்கள் வேலையின்றி பெற்றோல் சைற்றில்
காசு பணம் வேணுமய்யா என்ன செய்வோம் இந்த நாட்டில்
யோசியாதை நல்ல காலம் சனிமாற்றம் அடுத்த வீக்கில்

தம்பி ! என்ன இன்ரவியூவுக்கு வந்தது போகேல்லையே?
போகேல்லையண்ணை
ஏன்
பயமாக்கிடக்குது, அதுசரி நீங்கள் இன்ரவியூவுக்குப் போனீங்கள் என்ன மாதிரி?
என்ன வழமையான “சொறி” எண்டு எழுதித்தாறது தான்
நீங்கள் சம்பளம் குறைஞ்சாலும் பட்டையளோட வேலை செய்திருக்கலாம்

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

போன் பில், காஸ் பில், கரண்ட் பில், றேட் பில்
வீடு வாசல் வாங்கினோர்கள் நிக்கிறார்கள் றோட்டில்
காசு கூடிக் குடிப்பவர் வாழ்கிறார்கள் டோலில்
புட்டியோடு அலைந்தவர் வாழ்கிறார்கள் சிக்கில்

என்ன உவன் புலவன் குடியை விட்டுட்டானாம்
அண்ணை இவன் சின்னவனுக்கு ஊரிலை சீதனத்தோடையெல்லே கலியாணம் பேசுகினமாம்
அவன் முந்தியொரு பின்லண்ட்காறியோடை எல்லே இருந்தவன்?
அதுக்கு முதல் அவன் ஒரு வெள்ளையையும் வச்சிருந்தவன் அண்ணை

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

இடியப்பம் புட்டு கருவாடு கத்தரிக்காய்
தமிழ்ப்படம் புதுப்படம் கமராக் கொப்பி தானிருக்கு
புதுப்புது சைசில போத்தில் கள்ளு வந்திருக்கு
பள்ளிக்கூடப் பெடியளுக்குப் பாதிவிலை போட்டிருக்கு

அண்ணை கருவப்பிலை இருக்குதோ?
என்னண்ணை உந்தப் படக்கொப்பி முழுக்க எழுத்துகள் குறுக்க மறுக்கை ஓடுது

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

கொலிச் பார்ட்டி விலேச் பார்ட்டி டிஸ்கோ பார்ட்டி
டான்ஸ் ஆடப் போவார் இன்னொன்றைக் கூட்டி
குடும்பியும் தோடும் குளு குளு ஆட்டமும்
குறுக்காலை போவார் குழப்பத்தில் முடிப்பார்

என்ன உவன் ஜெயலலிதா காப்பிலி போய்பிறண்டோட நிக்கிறாள்?
ஏன் நீங்கள் இனத்துக்கொண்டு வச்சிருக்கலாம் அவளவை ஆசைக்கொண்டு
வாச்சிருக்கக் கூடாதே?

தம்பி! நாங்கள் டிஸ்கோ ஒண்டு நடத்துறம் றிக்கட் எடுங்கோவன்
மிச்சக்காசு முழுக்க அங்கை ஊரிலை கஷ்டப்பட்ட ஆட்களுக்குத் தான் அனுப்பப் போறம்
இதிலை எங்கை அண்ணை மிச்சம் வாறது?

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

விம்பிள்டன் , ஹம்மர்ஸ்பீல்ட், ஸ்கர்ச்போர்டில் படமாம்
விசிலடி தடியடி நடக்கின்ற இடமாம்
புளியடி வேம்படி பெட்டையாலை சண்டையாம்
புதுப்புதுக்காறிலை பொல்லுத் தடி வந்ததாம்

என்ன தம்பி ஒரு படம், பாட்டுக் கச்சேரி
நிம்மதியாப் பார்க்கேலாமைக் கிடக்குது
ஓமண்ணை தாய்தேப்பன் காணியைப் பூமியை
வித்து அங்கையிருந்து அனுப்பி விட
பெடியள் பொறுப்பில்லாம நடக்குதுகள்
எல்லாரும் அப்பிடியில்லை

இன்சினியர், சொலிசிற்றர், எக்கவுண்டன், டாக்குத்தர்
எண்டு நம்மை மறந்திட்ட எங்கள் சில தமிழராம்
அவர் வழி பெயர் சொல்ல தமிழ் தெரியாப் பிள்ளையளாம்
தாய்மொழியை மாற்றிடலாம் தோல் நிறத்தை மாற்றலாமோ

என்ன உவர் செல்லையற்றை பிள்ளையள்
பாட்டுக்கச்சேரி அரங்கேற்றமாமே
அவையள் தமிழ் கதைக்கமாட்டினமே
அவையளுக்கும் விருப்பமில்லையே
தமிழ் தெரியாத பிள்ளையளுக்கு
தமிழ்க்கலையள் என்னத்துக்கு?
ஓ அது இப்ப பிறெஸ்டிஜ் இஷ்ஷுவோ

ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்
இருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்

டேய்! குடிச்சுப் போட்டு உங்களுக்கு வெறியெண்டாப் போய்ப் படுக்கிறதை விட்டுட்டு
என்னடா பாட்டு வேண்டிக்கிடக்குது?
டேய் போய் படுங்கடா

I am a Tamil, I can Speak Tamil

புலம்பெயர்ந்த வாழ்வியலில் அடுத்த தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளை விட தமிழைப் புறக்கணிக்கும் கைங்கர்யத்தை அதிகம் செய்வது தாயகச்சூழலில் வாழ்ந்து கழித்துப் புலம்பெயர்ந்த உறவுகளே. அந்தக் கொடுமையை இந்தச் சிறுவன் சொல்லிப் பாடுகின்றான் இப்படி

I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don’t speak Tamil

இங்கிலண்டில் பிறந்தேன் இங்கிலீசு கதைப்பேன்
எங்கு நான் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் கதைப்பேன்
எம் தமிழ்ப் பெற்றோர் வீட்டை தமிழ் கதைப்பார்
நான் தமிழ் கதைக்க நல்ல வழி வகுத்தார்

I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don’t speak Tamil

இப்ப வந்த தமிழரும் எங்கள் தமிழ் மறந்தார்
இந்த நாட்டு வாழ்க்கையில் எங்கள் நிலம் மறந்தார்

I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don’t speak Tamil

ப்ரென்சும் ஜேர்மனும் பியூச்சரில் ஹெல்ப்பாம்
எம் தமிழ் மறந்து எத்தனையோ மொழிகள் கஷ்டப்பட்டுப் படிப்பார்
எங்கள் தமிழ் மட்டும் இல்லையென்று சொல்வார்

I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don’t speak Tamil

மிருதங்கம் வீணை இங்கிலீசில் படிப்பார்
தமிழ் தன்னைப் படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குவார்
எங்கள் மொழி கதைத்தால் தரமென்ன குறைவோ
ஆதியான மொழி எங்கள் தமிழென்று தெரியுமோ

I am a Tamil, I can Speak Tamil
I wonder why some don’t speak Tamil

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

“தம்பி காசு அனுப்புவான் ஆறுதலா அவனுக்கு ஒரு கலியாணம் கட்டி வைக்கலாம்” இப்படியான மனப்போக்கு கொண்ட பெற்றோர் தாயகத்தில் இருக்கையில் முப்பது கடந்து நாற்பதை எட்டிப்பார்க்கும் நரையோடு இருக்கும் இளைஞனின் தவிப்பு பாடலாக இப்படி:

தபேலா இசையுடன்

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்
கனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்
மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்
ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

கந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ
கொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ
குருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ
பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்…பிளீஸேதுஞ்செய்யுங்கோ

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

காலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்
கண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்
கறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்
காத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்

பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு

அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ

கோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்
கே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்
கறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்
கடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா……

வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.
பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)

Come on Mohan, come on..don’t cry
mummy will be here in a minute

சோ றற சோ…….றொகான் சோ றற சோ

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா

சோ றற சோ…… றொகான் சோ றற சோ

சோறு கறியோ வெறி சொறியப்பா
களைச்சுப் போனேன் ரேக் எவே என்பா
உங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா
ஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா

சோ றற சோ…… றொகான் சோ றற சோ

வீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா
நீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா
நாலுபேர் போல் நாங்களுமப்பா
வாங்க வேணும் புதுக்கார் என்பா

உடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்
ஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா
எங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்
இண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா

செலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்
ஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா
நன்மை தீமையேதும் சொல்லிப்போட்டனெண்டால்
நல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா

சோ றற சோ…… றொகான் சோ றற சோ

என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா


நன்றி: பாடல்களை ஆக்கி அளித்த லூசியம் நண்பர்களின் பூபாளம் இசைக்குழு
புகைப்படம்: Hello Magazine

Next »