Archive for June, 2010

ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்

admin June 30th, 2010

“கலைத்துறையைப் பொறுத்தமட்டில் 1983-ல் இனக்கலவரங்கள் வெடிப்பதற்கு முந்திய அமைதிக்காலகட்டத்தில் கூட ஈழத்தமிழர்களிடமிருந்து ஒரு உருப்படியான சினிமா முயற்சி கூட நடந்ததில்லை. அதே சமயம் சிங்களப்படைப்பாளிகள் உலகத்தரத்திலான திரைப்படங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். ஈழத்து சினிமா படைப்பாளிகளுக்கு தமிழகத்தின் மசாலா படம் தான் ரோல் மாடலாக இருந்திருக்கின்றது”
மேற் சொன்ன கருத்துக்களை தனது குமுதம் “ஓ பக்கங்களில் எழுத்தாளர் ஞாநி 09.06.2010 தேதியிட்ட இதழில் தெரிவித்திருக்கின்றார். இந்தக் கருத்தை இன்று தான் பார்க்கக் கிட்டியது. பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

சமீப வருஷங்களாகவே ஈழத்து அரசியலில் இருந்து கலை, இலக்கியம் வரை எழுந்தமானமாக ஒரு கல்லை விட்டெறிந்து விட்டுப் போகும் போக்கு தமிழக அரசியல்வாதி எழுத்தாளர் சிலருக்கு கைவரப்பெற்றிருக்கின்றது. அந்த வகையில்இலங்கையில் நடந்த ஐபா விழாவிற்கு தமிழ்த்திரையுலகம் புறக்கணித்ததைக் கண்டிக்கும் நோக்கில் கூடவே வழக்கம் போல தி.மு.க சார்ந்த இராம நாராயணனையும் வாரிவிட்டு ஈழத்தமிழ் சினிமா குறித்த தமது “புரிதலை”யும் சொல்லிக் கல்லறிந்து போயிருக்கிறார் இவர். ஐபா விழா புறக்கணிப்பு ஏன் அவசியம் என்பதை தாமரை உட்பட பலர் ஒப்பீட்டு உதாரணங்களோடு ஞாநிக்கும் அவர் சார்ந்தோருக்கும் விளக்கிவிட்டார்கள். எனவே அந்தப் பக்கம் நான் வரவில்லை. ஈழ சினிமா குறித்து இவர் சொன்ன “விஷம்” போன்ற கருத்துக்கு எந்த வகையான ஆதாரங்களை ஞாநியால் முன் வைக்க முடியும்?

இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா? காரணம் பொன்மணி உட்பட ஒரு சில படங்களைத் தவிர தமிழகத்தில் ஈழத்துச் சினிமா எதுவும் திரையிடப்படவில்லை. 1983 இல் அழிக்கப்பட்ட படங்களின் சாம்பல் தான் மிச்சம். சிங்களவரோடு கைகோத்துக் குலாவ வேண்டும் என்று சாத்வீகம் பேசும் ஞாநி அவர்களே அதைத்தான் நாமும் செய்தோம். ஆனால் குலாவிக்கொண்டே அவர்கள் கைவத்தது யாழ் நூலகம் போன்ற அறிவுக்களஞ்சியத்தில் இருந்து இப்படியான கலைப்படைப்புக்கள் வரை. காரணம் தமிழனுக்கு என்று காணி மட்டுமல்ல வரலாறும் ஈழத்தில் இருக்கக்கூடாது என்ற அவர்களின் முனைப்புத் தான். இது அரச மட்டத்தில் இருந்து சிங்கள இனவாதிகள் வரை இன்று வரை செழுமையாகவே இருக்கின்றதை அறிவீர்களா?

1983 இற்கு முன் வெளிவந்த படங்களில் பெரும்பான்மையானவை ஹாலிவூட், கோலிவூட், பாலிவூட் என்று எந்த வகைக்குள்ளும் அடக்காதா ஈழத் தமிழரின் வாழ்வியலைப் பேசும் படங்களாக வந்திருக்கின்றன. பொன்மணி என்ற திரைப்படத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்களாக இருப்போர் இணைந்து நடித்து எடுத்து வெளிவந்த படம். தெய்வம் தந்த வீடு ஒரு நாதஸ்வரக்கலைஞனின் வாழ்வியலைப் பேசும் சினிமா. நெடுந்தீவு என்னும் கடலோரப் பிரதேச வாழ்வியலைக் கூறும் சினிமா வாடைக்காற்று என்ற சினிமா பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? இல்லையாயின் ஆது பர்றி நான் எழுதிய பதிவைப் படிக்கவும். ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முழு நீள சினிமா “கடமையின் எல்லை” இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் சிலதை 1983 இற்கு முன் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொடராகப் போட்டார்கள்.

1983 இற்குப் பின் பல கலைஞர்கள் ஈழத்தை விட்டுப் புகலிடம் தேடி ஓடிட, புலிகளின் காலத்தில் பிறந்தது ஈழத்து போர்ச் சூழலின் அவலம் பேசும் சினிமாக்கள். புலிகள் என்றாலே சீண்டப் பிடிக்காத உங்களுக்கு இன்னொன்றும் சொல்லி வைக்கிறேன். அந்தப் போர்க்காலச் சினிமாக்களிலும் புலிகளின் பிரச்சாரப்படங்கள் என வகைப்படுத்தி முத்திரை குத்திப் பார்க்கும் படங்களைத் தவிரவும் ஈழத்து மக்களின் போரியல் அவலங்களைக் காட்டும் படங்களும் வந்திருந்தன.

சிங்கள சினிமாவை உலகத்தரத்தோடு ஒப்ப்பிட்டுப் பார்க்கும் உங்களுக்கு ஓருண்மை சொல்வேன். 1983 இற்கு முன் வந்த 99% மான ஈழத்துப் படங்கள் எந்த வித தமிழக, பாலிவூட் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புக்களாகவோ இல்லையோ அதே போல் 1983 இற்கு முன்னும் பின்னும் வெளிவந்த 99% மான சிங்களத்திரைப்படங்கள் பிரபல ஹிந்தி, தமிழ்ப் பாடல்களை உரிமம் பெறாது காப்பி அடித்தும், கதையை அப்படியே பிரதி பண்ணியும் தான் வந்திருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கு எப்படி கோடம்பார்க்கத்து சினிமா பிடிக்குமோ அது போல் சிங்களவருக்கும் ஹிந்தி சினிமா தான் உயிர் என்பதை அறிய ஒரு நடை கொழும்புக்குப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.

சிங்களக் கலைத்துறை, சினிமா உட்பட இலங்கை அரசின் பேராதரவோடு இயங்கி வருகின்றது. இந்த நிலை தமிழ்க்கலைஞர்களுக்கும், படைப்புக்களுக்கும் இல்லை. யாராவது ஒரு பெரும் சிங்களக் கலைஞர் மனம் வைத்து இரங்கினால் ஒழிய.

ஆகவே ஞாநி அவர்களே, எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் நீங்கள் அயலகத்து விடயங்களைப் பற்றிப் பேசும் போதோ எழுதும் போதோத நன்கு உங்கள் சிந்தனையை வளப்படுத்திக் கொண்டு கருத்தைச் சொல்ல முயலுங்கள். நாளைக்கு நீங்களே “இலங்கையில் இருக்கும் தமிழர்கள் தமிழ் படித்த சிங்களவர்கள்” என்றும் சொல்ல முனைவீர்கள். எமது தமிழ் எழுத்துலகின் சாபக்கேடே எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்தவன், எதற்கும் எப்படியும் கருத்துச் சொல்லலாம் என்பதே.

உங்கள் பார்வைக்கு தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய “இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை”

வாடைக்காற்று நாவல், சினிமா பற்றி நான் எழுதிய முந்திய பதிவு


செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் ” வாடைக்காற்று எழுதினாரே, அவரா?” என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் 1974 ஆம் ஆண்டு மாசி 22 ஆம் திகதி விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான். இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் “இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே”. இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.

இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.

இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெண்களை வர்ணிக்கும் போது அவர்களின் மார்பழகை மையப்படுத்தி சில இடங்களில் ஒரே மாதிரியாக வர்ணிப்பதை அவர் தவிர்த்திருக்கலாம் (உதாரணம் பக் 19)
இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.

மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.


செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.

இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது “செம்மீன்” போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
” எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்” என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். “ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.

இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது” படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து ” கல்லுக்குள் ஈரம்” வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.

வாடைக்காற்று திரைப்படமான போது


கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , “நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்” என்றாராம்.

நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்

திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)

“வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.

LP Records சுழற்றும் நினைவுகள்

admin June 26th, 2010

சமீபத்தில் ஒரு நாள் நான் வழக்கமாகப் போகும் சிட்னியின் வீடியோ சக ஓடியோ கடைக்குப் போய் அங்கே புதிதாக வந்திருந்த சரக்குகளை மேய்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கடைக்காரர் இந்தியாவில் இருந்து புதிதாக ஏதாவது டிவிடி மற்றும் ஓடியோ சீடிக்களை வாங்கவேண்டும் என்றால் மறக்காமல் என்னிடமும் ஒரு பட்டியலைக் கேட்டு வாங்கிவிடுவார். அதில் பாதியாவது அடுத்த கப்பலில் வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு. இப்படியாக நான் அந்தப் புது ஓடியோ சரக்குகளில் மூழ்கியிருக்கும் போது, “இளையராஜாவின் The Music Messiah என்ற இசைத்தட்டு இருக்கிறதா” என்று ஆங்கிலத்தில் ஒரு குரல் கடைக்காரரைக் கேட்கும் போது என் கவனத்தை அங்கே பதித்தேன். கடைக்காரர் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார். நான் ஏற்கனவே சல்லடை போட்டுத் தேடிய அனுபவத்தால் “இல்லை” என்று சொல்லி விட்டு வேறு சில ஆல்பங்களை கடைக்கு வந்த அந்த வாடிக்கையாளருக்குக் காட்டினேன். தன்னை ஒரு தெலுங்குக்காரர் என்று அறிமுகப்படுத்தி விட்டு மெல்ல திரையிசை குறித்த சிலாகிப்பை ராஜாவில் இருந்து ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒரு விஷயம் அன்றிலிருந்து இன்றுவரை என் மனசில் பதியம் போட்டிருக்கிறது. அது “என்னதான் சீடி யுகம் வந்தாலும் ஒருகாலத்தில் இருந்த எல்.பி ரெக்கார்ட்ஸ் இல் பாட்டுக் கேட்பதே சுகமான அனுபவம் தான்” என்றார்.

மெல்ல என் பழைய நினைவுகளில் கரைகின்றேன். எண்பதுகளில் எங்களூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில ஓடியோ கடைகள் இருக்கும். தவிர யாழ்ப்பாண நகரப் பக்கம் போனால் நியூ விக்டேர்ஸ், விக்டர் அண்ட் சன்ஸ், றேடியோஸ்பதி போன்ற பிரபலமான பாடல் பதிவு நிலையங்களும் இருந்தன. அங்கெல்லாம் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் புதுசு புதுசாக வரும் LP Records எனப்படும் பெரிய இசைத்தட்டுக்களின் கவர்களை முகப்புக் கண்ணாடிகளில் ஒட்டியிருப்பார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் இப்படியான LP Records ஐ தருவிக்கும் இப்படியான கடைகள் பின்னர் இசைப்பிரியர்கள் ஒரு துண்டுத்தாளில் எழுதிக் கொடுக்கும் பட்டியலைப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இசைத்தட்டுக்களை எல்.பி ரெக்கார்ட்ஸ் இயங்கும் கிராமபோன் கருவியில் ஒலிக்கவிட்டு ஓடியோ கசெட்டாக அடித்துக் கொடுப்பார்கள். எனவே புதுப்படம் ஒன்று வருகின்றதென்றால் இந்த பெரும் கறுப்பு நிற இசைத்தட்டுத் தாங்கிய வெளி மட்டைதான் ஒரு விளம்பரமாகச் செயற்படும். பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எதிர்ப்படும் எங்களூரில் இருந்த அந்தப் பாடல் ஒலிப்பதிவு கூடத்துக்கு அடிக்கடி சென்று புதிதாக வந்த இசைத்தட்டு மட்டையைப் பார்ப்பதே ஒரு த்ரில்லான அனுபவம் தான் அப்போது. கடைகளில் ஒட்டியிருக்கும் கவர்ச்சிகரமான இந்த மட்டையில் குறித்த படத்தின் ஸ்டில்லும் இசையமைப்பாளர் விபரமும் இருக்கும். புதிதாக ஒரு இசைத்தட்டு வருகின்றதென்றால் சுத்துப்பட்டி கிராமங்களே கேட்கும் அளவில் அதிக டெசிபெல்லில் அந்தக் கடைக்காரர் ஒலிக்க விட்டு ஊரைக் கூட்டுவார். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்கள் மனதில் அந்தப் பாடலைப் பதிய வைத்து அவர்களைக் கடைக்கு இழுக்கும் உத்தி அது.

அப்போதெல்லாம் பாடல் இசை வெளியீடுகளிலும் இந்த எல்.பி. ரெக்கார்ட்ஸ் ஐத்தான் வருகின்ற சிறப்பு விருந்தினருக்குக் கையளிப்பார்கள். அந்த அளவுக்கு மவுசு பெற்றவர் இவர். சரஸ்வதி ஸ்டோர்ஸ் காலத்தில் இருந்து ராஜாவின் பொற்காலமாகத் திகழ்ந்த எண்பதுகளில் ECHO மற்றும் சங்கர் கணேஷ்- ராமநாராயணன் போன்ற பட்ஜெட் இசைக்கூட்டணிக்கு ஆபத்பாந்தவனாக இருந்த லகரி என்று எல்லாமே இந்த LP Records ஐ வெளியிட்டன. ஓடியோ காசெட்டுக்களை இவை வெளியிட்டாலும் அந்த ரெக்கார்ட்ஸ் கொடுக்கும் பிரமாண்டமே தனி.

LP Records எனப்படும் இந்த வகை இசைத்தட்டுக்களில் பாடல் கேட்பதே ஒரு சுவையான அனுபவம். எங்கள் அம்மம்மா வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்தக் கருவிக்குத் தீனி போடுவது போல எண்பதுகளில் வந்த ஒரு சில படங்களின் இசைத்தட்டுக்களும், ஒரு சில பழைய பாடல்கள் கொண்ட தொகுதிகளுமாக ஒரு கண்ணாடி அலமாரியை வைத்திருந்தார்கள். சின்னப்பிள்ளை எனக்கெல்லாம் அப்போது அந்த அலமாரியைத் தொட்டுத் திறக்கவோ, கிராமபோன் கருவியை இயக்கவோ எல்லாம் அனுமதி கிடையாது. அந்த ஏகபோக உரிமையை அப்போது என் சின்ன அண்ணன் தான் எடுத்திருந்தான். அவனுக்கு குஷியான மூட் வரும் போது ஏதாவது ஒரு இசைத்தட்டை எடுத்து மெதுவாக ஒலிக்க விடுவான். ஆர்வமாகப் போய்ப் பார்ப்பேன். இசைத்தட்டை அலுங்காமல் குலுங்காமல் அந்த கிராமபோனில் கிடத்தி விட்டு, அதன் ஊசியைப் பொருத்தி விடுவான். தனக்கான சக்தியைப் பெற்ற கணம் தன் இயக்கத்தை மெல்ல ஆரம்பிக்கும் அந்த கிராமபோன், எங்கள் அம்மா நிதானமாக தோசைக்கல்லில் வளையமாக தோசைமாவைச் சுழற்றி விடுமாற்போல. அந்த நேரம் கிராமபோன் தருவிக்கும் அந்த இசைமழையை சோபா செட்டுக்குள் கூனிக்குறுகிக் கொண்டே கேட்டுக் கொண்டே பள்ளியில் படித்த அந்த நேரத்துக் காதலியோடு டூயட் பாடுவது போலக் கனவு காண்பது ஒரு சுகமாக அனுபவம். அடிக்கடி போட்டுத் தேய்ந்த சில இசைத்தட்டுக்கள் தாம் பாடும் போது அடிக்கடி “டொப்….டொப்” என்று தம் பட்ட விழுப்பூண் கீறல்களை ஒலியாக எழுப்பி மாயும். சிலவேளை கிராமபோனில் பொருத்தியிருக்கும் ஊசிக்கும் இசைத்தட்டுக்கும் ஊடல் வந்தால் ஆபத்துத்தான். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் பழங்காலத்து பாலசரஸ்வதிதேவி குரல் மாதிரி பெண் குரலாகும், எஸ்.ஜானகி குரலோ அப்போது தான் மகரக்கட்டை உடைந்து குரல் மாறிய விடலைப்பையன் குரல் போல நாரசமாக இருக்கும். இப்படித்தான் ஒருமுறை என் சின்ன அண்ணன் ஒலிக்க விட்ட பில்லா பாடல்களில் ஒன்றான “இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்” பாடல் வேகமாக மாறி ஒலித்து என்னை அப்போது கிச்சுக்கிச்சு மூட்டியதை இப்போதும் நினைத்துச் சிரிப்பேன். பெரியதாக இருந்த அந்த கிராமபோன் இசைத்தட்டுக்கள் தவிர ஒரு சில இப்போது வரும் சீடிக்களின் அளவுகளில் சின்னதாகவும் இருந்ததைக் கண்டிருக்கின்றேன்.

அப்போது வானொலி நிலையங்கள் எல்லாவற்றிலுமே இந்த கிராமபோனே தெய்வமாக இருந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை வானொலியில் இருந்த அளவுக்கு வேறெங்கும் ஒரு பெரிய இசைத்தட்டுக் களஞ்சியம் உண்டா என்று தெரியவில்லை என்று அங்கு பணிபுரிந்த வானொலிக் கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

எனக்கு குறித்த வெறியைப் புகுத்தியது அந்த கிராமபோன் அப்போது ஏற்படுத்திய பிரமிப்பும் கொண்டு வந்து மனதில் புகுத்திய இசையும் தான். பெரியவன் ஆனாதும் எனக்கும் ஒரு இசை லைபிரரி வைத்துக் கொள்வேன், அங்கே நிறைய எல்.பி.ரெக்கார்ட்ஸைச் சேர்த்து வைப்பேன் என்றெல்லாம் கனவு கண்டதுண்டு. இப்போதும் எங்காவது வணிக வளாகத்தில் ஏதோ ஒரு அரும்பொருள் விற்கும் கடையில் தூங்கிக் கொண்டிருக்கும் கிராமபோனைப் பார்த்து மனதுக்குள் அஞ்சலி செலுத்துகின்றேன். ஆசையாக ஒன்றை வாங்கிப் பக்கத்தில் வைக்கவேணும் ஒன்றை

பழையன கழிதலும் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே என்னுமாற்போல இந்த கிராமபோனையும் எல்.பி.ரெக்கோர்ட்ஸையும் ஒழித்துக் கட்ட நவீன சீடிக்கள் எல்லாம் வந்து விட்டன. தொண்ணூறுகளின் மத்தியில் ஆரம்பித்த சீடிக்கள் யுகம் இன்று முழுமையாகத் தின்று தீர்த்து விட்டது. கூடவே இந்தப் புதிய யுகத்தால் பாடல்களை இலகுவாகப் பிரதியெடுக்கவும், தரம் கெட்ட ஒலி வடிவில் பெறவும் முடிகின்றது என்பது இசையுலகத்துக்குக் கிட்டிய சவால். இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

admin June 7th, 2010

“பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே” என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் “ஜோதி ஸ்டோர்ஸ்” புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக
தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.

இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
“என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே” (பெண் குரல்)
“பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது” (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.

இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான “தணியாத தாகம்” நாடகத்தில் வரும்
“அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே” என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய “தங்கமே தங்கமே” என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த “திரைவிருந்து”என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.

சிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.

அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் “ப்ரூ காபி” விளம்பரமும் இத்தகையதே”.

வானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.
தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கும் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.

விளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).

அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. “போகாதே போகாதே” என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் “…..அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே” என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் “விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்” என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.